Tuesday, July 28, 2015

முதல் ஒப்பாரி

நான் கண்விழிச்சு பாக்கயிலே , அய்யா நீர் கண்மூடி கிடப்பதுவா ,
நாடு கண்ட கனவெல்லாம் இப்போ, உன்னோட உறங்குதைய்யா .

செய்தித்தாள் நிதம் வித்து , அப்பனுக்கு உதவி செஞ்ச ,
பாரெல்லாம் உன் சாதனைகள்  , இப்போ தினம் செய்தியா பேசுதைய்யா .!

வானோடி தேர்வினிலே,  நீ தோத்து போனாயே ,
பாரத தேசம் மொத்தம் , வான் உயர பறப்பதற்கோ ..!

இராப்பகலா அசராம ,செயற்கைக்கோள் நீ பறக்க விட்ட
அப்படி ஓர் சோதனைக்கோ , இப்ப  நீயும்  போயிருக்க ??

வீரமெனும் திட்டத்தால் , ப்ரிதிவியை பிறக்க வெச்ச ,
கண்டம் விட்டு கண்டம் போய் , அப்பிசாசத் தான்  தேடுறியோ ?

மொதல் குடிமகனா இருந்தாலும் , மன்னவனா திகழ்ந்தாயே ,
மன்னவனா இருந்தாலும் , வெறும் குடிமகனாய் திரிஞ்சாயே .!

அக்னிச்சிறகுகளால் நம் பயணம் , இந்தியத்திட்டமய்யா .!
உன் வெளிச்சத் தீப்பொறிகள்,  ஆயிரம் ஆண்டு காலத்துக்கோர் பார்வையையா,

நில மகளின் நிலைமையை, நீ மேடையிலே பேசயிலே
நிலமகளே வந்துன்னை , கூட்டிகிட்டு போனாலோ .

கண்ணியமான உன் கனவெல்லாம் , கலப்படமா போயிடுமோ
கனவானே கண்மணியே , ஏதும் கோள் பிடிச்சு நீ  வருவாயோ .!

நான் கண்விழிச்சு பாக்கயிலே , அய்யா நீர் கண்மூடி கிடப்பதுவா ,
நாடு கண்ட கனவெல்லாம் இப்போ, உன்னோட உறங்குதைய்யா .

நாடு கண்ட கனவெல்லாம் இப்போ, உன்னோட உறங்குதைய்யா .



#கலாம் கனவுகள்

Wednesday, July 8, 2015

சிங்கபுரத்து பக்கங்கள்

சிங்கபுரத்து பக்கங்கள்

வணக்கம் ,

இந்த பதிவு எதை பற்றி  பேச போகிறது என பார்த்தால் , எதுவும் இல்லை.

இங்கு சிங்கப்பூரில் நான் சுற்றும் போது  தோன்றிய சிலவற்றை உங்களுடன் பகிர போகிறேன் .

சுரங்கரயில் நிலையத்தில் இருந்து ஏறி வெளிய வந்தேன் . மிக அழகான நெடுஞ்சாலை . வலப்புறம் அரசுக்கு உட்பட்ட 100 வருட பழைய கோவில்.
நல்ல வேலை நம் ஊராக இருந்தால் அங்கு ஒரு சாமியார் மடம் நிறுவி, அதில் ஆயிரகணக்கான பக்தர்கள் பல வித பிரார்த்தனைகளை செய்து கொண்டு இருப்பார்கள் . போதா குறைக்கு வயதாகி விட்ட சாமியார் தன மந்திர பலங்களை தன்னுடைய மகனுக்கோ சிஷ்யனுக்கோ வார்த்து கொடுத்திருப்பார் . இங்கு அப்படி ஏதும் நடக்கவில்லை

அத்திசை வேணாம் என எதிர் திசை நோக்கினேன் . சற்று தொலைவில் பச்சை புல்வெளி கண்ட வீட்டுக்கன்றுகள் போல் பெரும் கூட்டம் திரண்டு இருந்தது . நெருங்க நெருங்க சிங்கப்பூரின் அனைத்து சாலை விதிகளும்  மீறப்படுவதை உணர்ந்தேன் .

குறுக்கும் நெடுக்கும் மக்கள் கூட்டம் அலைமோதியது. கூடாரங்கள் அமைத்து ஊருக்கு அலைபேசியில்  பேசும் வசதிக்காக மக்கள் வரிசையில் காத்துக்கிடந்தனர் . அயல் நாட்டுக்கு பணம் அனுப்பும் இடம் என அங்கங்கே சிறுகடைகள் .

சிலர் குழுமி இருந்து கையில் டைரி வைத்திருந்த ஆசாமியிடம் தங்கள் கணக்கை கழிக்கும் படிகேட்டனர் .

இது என்ன ஆயிரம் ஆண்டுங்கள் பின்வந்து ஏதேனும் கங்காணி கூட்டத்தில் மாட்டிவிட்டோமோ என உள்ளூர பயம். சுமார் ஒரு கிலோமீட்டர் வட்டத்தில் இவை அனைத்தும் நடந்தேறிக்கொண்டிருந்தது .

அருகில் இருந்த நண்பனிடம் கேட்டபோது தான் தெரிந்தது அது நம் ஒன்று விட்ட சகோதர தேசம் , இல்லை
நாம் அன்று (1947) விட்ட அண்டை சகோதர வங்கதேசத்தவர்கள் என்று . இப்படித்தான் 100 ஆண்டுகளுக்கு முன்பு நம் மக்கள் வந்திருப்பரோ ? (பின் வரும் பகிர்வுகளில் அலசுவோம் )

 விட்டால் போதும்  என அகன்று சந்துக்குள் ஆனந்த பவனில் தோசையோடு அமர்ந்தேன் . அருகில் இந்நாட்டில் குடியேறிய நம் நாட்டு தம்பதியினர் . திராவிடனின் நிறம் மறைக்க வர்ணம் பூசப்பட்ட அம்முகங்கள் சற்றே நெருடியது. நம் மக்கள் என பார்வையோடு புன்முறுவல் உதிர்த்தேன் .

அவர்கள், பேசிக்கொள்கிறார்கள் "ஊர் காரங்க போல, விடுங்க . எல்லாரும் வராங்க போல இங்கயும்  ". ஆம் அய்யா , ஊர்க் காரர்கள் தான் . நீங்களே பிரித்து பாருங்கள் . இதனால் தான் பாரெங்கும் நாம் நன்கு ஒடுக்கபடுகிறோம் . நம்முள் இருக்கும் பிரிவினை தான் நம்மை இப்படி பாடாய் படுத்துகிறது . எங்கே சென்றது நம் ஈகை, கொடை, நட்பு, விருந்தோம்பல் பண்புகள் .

மனச்சுமையுடன் வீடு நோக்கி பயணித்தேன் . ஞாயிறு மறைந்து திங்கள் பிறந்தான் .

மேலும் சிங்கபுரத்து பகிர்வுகள் விரைவில் .
புகைப்படத்தோழர் ஜெயநாதனுடன் சௌம்யன்

** வாசக தோஷஹா ஷந்தவ்யஹா *