Sunday, May 8, 2016

ஒரே ஒரு கேள்வி



நீங்கள் எல்லோரும் இன்னும் ஒரு வாரத்துக்கு நினைத்துக் கொண்டே இருக்கப் போகும் கேள்வி .
யாருக்கு ஒட்டுப் போடலாம் ?

கட்சியின் முதல்வர் வேட்பாளரைப் பார்த்தா ? பெரிய கட்சியா, சிறிய கட்சியா எனப் பார்த்தா ?
திராவிட கட்சியா ? தேசிய கட்சியா ? சாதிக்கட்சியா ? மொழிக்கட்சியா ?

இவை எல்லாமே உங்களை ஏமாற்றிவிடும் . இதில் எதையும் நாம் பார்த்தால் , நமக்கு,  ஒரு சராசரி வாக்காளனுக்கு நல்லதே இல்லை .

முதல்வர் வேட்பாளரை பார்த்து ஓட்டுப்போடுகிறோம்.  அவர் பதவிக்கு வந்த உடன் பதவியிழக்க நேரிட்டால் ? தேர்தலில் வெற்றிபெற்ற உடன் தன் வாரிசை முதல்வர் ஆக்கிவிட்டால் ? அவர் தன் தொகுதியில் தோற்றுவிட்டால் ? அவருடன் சேர்ந்து வெறும் தன் சாதிக்கட்சியினருக்கு மட்டும் பதவிகள் கொடுத்தால் ?  ஆம் .. இது எல்லாமே நடக்கலாம் . ஏன் ? நம் அரசியல்வாதிகள் இவை அனைத்துக்கும் உட்பட்டவர்கள் தான் .

சரி முதல்வர் வேட்பாளர் வேண்டாம் , கட்சியை பார்க்கலாம் . சர்வாதிகார தலைமைக் கட்சி  , ஊழல்குடும்பம் ஊழல் கூட்டணி என பெயர் போன கட்சி , சாதிக்கட்சி , பதவி ஆசைக்காய் ஏலம் விட்டக் கூட்டணி , மொழிப்பிரிவினையோ என அஞ்சவைக்கும் கட்சி . இப்படி தனக்கென ஒரு கரையில்லாத குறையல்லாத கட்சிகள் நமக்கென்று இல்லை .

இது தமிழன் செய்த பாவங்களின் பலன் . தமிழகம் முன்னுக்கு வந்ததின் காரணம் திராவிட கட்சிகளால் தான் , அதே போல் இன்று அவர்களின்றி முன்னோக்கி செல்ல வழியில்லாமல் அவர்களை சுற்றியே   சுழன்றுகொண்டிருப்பதும் அவர்களால் தான் . இன்றைய அரசியல் அமைப்புகள் திராவிட கட்சிகள் சாரா மாற்றம் ஏற்படுத்த வாய்ப்பு மிகக்குறைவாகவே உள்ளது .

வாக்காளர்களின் நிலையை விட , தேசிய கட்சிகளின் நிலை தமிழகத்தில் பரிதாபம் . எப்படியாவது யாருடனாவது ஒட்டிக்கொள்ள வேண்டும் வாக்கு வங்கியை காத்துக்கொள்ள வேண்டும் எனவே இவர்கள் போராட்டம் ஓடுகிறது .

ஆக இந்தக் கட்சிதான் நமக்கான முன்னேற்றப் பாதையை வழிவகுக்கும் என கூறிவிடமுடியாது. அதிலும் முக்கியமாக கட்சிகளின் தேர்தல் அறிக்கையை யாரும் படித்துவிட வேண்டாம் , சிரித்தே செத்துவிடுவோம் இந்த துளியும் சாத்தியமில்லா திட்டங்களைப் பார்த்து .

கட்சியும் இல்லை , முதல்வர் வேட்பாளரும் இல்லை. பிறகு ?

ஓட்டுரிமை என்பது நமது கடமை . சந்தையில் போய் காய்கறி வாங்கும் போது கூட சற்று ஒவ்வொன்றாய் பார்த்துத் தானே வாங்குகிறோம் ?

கட்சிகளுக்கு அப்பால் , தலைமைக்கு அப்பால் ஒரு தனி நபர் தானே உங்களுடைய ஓட்டுகளுக்கு சொந்தக்காரர் ஆகப்போகிறார் . அவர் யார் என நீங்களே அலசிப்பாருங்கள் .
உங்கள் தொகுதியில் நிற்பவர்கள் யார் ? உண்மையில் அவர் நமது தொகுதியின் ஆளா ? என்ன படித்திருக்கிறார் ? என்ன வேலை செய்கிறார் ? குணம் எப்படி ? எளிதில் அணுகமுடியுமா ? இதுவரை நம் தொகுதிக்கு இவரின் செயல்கள் என்ன ?


தேடுங்கள் நண்பர்களே .. கண்டிப்பாய் ஒவ்வொரு தொகுதியுளும் ஒரு நல்லவனாவது கிடைப்பான். அவனை அவராக்குங்கள் . உங்களால் உயர்த்தப்படும் ஒருவன் கண்டிப்பாக உங்களில் ஒருவானாக இருப்பான் . ஒருவேளை உங்களுக்கு பிடித்த கட்சியில் கூட இருந்துவிடப்போகிறான் ..


அரசியல்வாதிகள் பணத்தை செலவு செய்து உங்கள் ஓட்டுகளை விலைக்கு வாங்கப் பார்க்கிறார்கள். நீங்கள் உங்களின் நேரத்தை செலவு செய்து  உங்கள் வேட்பாளரை வெற்றிபெறச் செய்யுங்கள் .

மே 16, தமிழகம் சிந்தித்து செயல்படட்டும் .

போக்குவரத்து சமிஞ்ஞை

சிலரை நிற்கச்சொல்கிறேன் ,
சிலரை தயாராகச் சொல்கிறேன் ,
சிலரை போகச் சொல்கிறேன்,
ஊருக்கு வழிகாட்டி ,
தெருவில் திசையறியாமல் நிற்கிறேன் .
- ட்ராபிக் சிக்னல்(போக்குவரத்து சமிஞ்ஞை)