Thursday, August 25, 2016

முதல் மோதல்

முன்னோர் சொல்லின்  மீது இருக்கும் நம்பிக்கை எனக்கின்று பன்மடங்கானது . ஆசை அறுபது நாள் மோகம்முப்பது நாள், மொத்தம் தொண்ணூறு நாள். ஆம் , திருமணமாகி இன்றோடு தொண்ணூறு நாட்கள் ஆகிவிட்டது. வண்ண நாட்காட்டியில் சிவப்பு மை குறிப்புக்கோளால் வட்டம் போட்டுவிட்டேன் . முக்கியமான நாட்கள் இவை , தாம்பத்ய வாழ்க்கையிலே.  ஒரு முகச்சினுங்கல்கள் கூட இல்லாத எங்கள் இருவரிடையே திருஷ்டிப் பூசணியாய்  இன்றைய எங்கள் விவாதம்.  சிறு சண்டைகள் உறவுகளுக்கு நடுவே உள்ள நெருக்கத்தை அதிகரிக்கின்றன என்பற்கான சான்று. அலைபேசியில் அவசரமாக அழைத்தவளிடம், வேலைப்பளுவின் கடுப்பை ஒர்  வார்த்தையில்  தெளித்தேன். எதிர்ப்பக்கம் குரல் இறுகியது. சூடான இரு பதில்கள் அவள் அளிக்க , ஆண் வீரம் காட்ட என் முதல் பதில். கோபத்தில் நிதானி , உன் பதில்கள் வாயிலிருந்து வருபவை , ஆழமில்லா சொற்கள் ஆழமாக காயப்படுத்தும் என உள்மனதில் சின்னக்கண்ணன் சொடுக்கினான். சுதாரித்தேன் , மௌனித்தேன் .

நாற்பது நொடி மௌனம் எங்களை பலதூரம் பிரித்திழுத்து சென்றது. பின்னர் அழைப்பதாக துண்டிக்கப்பட்ட அழைப்பின் கதிர்வீச்சினில் அனல் பறந்தது. இங்கு தான்
தொழில்நுட்பத்தின் உதவி பெரிதாய் கை கொடுத்தது. நெடும் மௌனம் சில நேரம் பிளவுகளை ஏற்படுத்தலாம். சூடான விவாதம் விதண்டாவாதமாக மாறலாம். கண்ணனின் ஆசியோடு  காதலும் மோதலும் பரிவும் ஸ்மைலி களாக உள்ளடக்கிய க்ருஷ்ணாஸ்திரமாகிய வாட்ஸாப் வாதம் எய்தேன். ஆச்சர்யம் என்னவென்றால் எய்தவம்பினால் கட்டுண்டவன் நானானேன். வெவ்வேறு நாடுகளில் நடுவே இருந்த பிரிவை உடைத்து , அருகருகே எங்களை அணைத்தது.
மனம் விட்டு பேசுகையில் ஏற்படும் சுகமே அலாதியானது. பிரிவின் வலியை அவளின் ஒவ்வொரு சொல்லும்  உணர வைத்தது. தவறில்லாத போதும் தன் நிலை விவரித்தாள் என்னவள். நிலமகள் பொறுமையடி உனக்கு . இவ்வளவும் எளிதாக புரிந்து விடாது எனக்கு , ஆணாய் போய்விட்டேன்.

குரல் உயர்த்த தேவையில்லை , காட்டமான சொற்கள் காதில் விழவேண்டியதில்லை இந்த வாட்ஸாப்  வாதத்திற்கு . பொறுமை மட்டும் போதும். யோசிக்க நேரமுண்டு , பின்னர் அதனை அழகாக விவரிக்க வழிகளுண்டு இதில். அலைபேசியில் நான் குரலுயர்த்தி பேசியிருந்தாலோ , அவள் எதிர்க்குரல் அளித்தாலோ எங்களுக்குள் சங்கடங்கள் வந்திருக்கலாம் , எளிதான , நேர்த்தியான இந்த வாட்ஸாப் வாதங்கள் அது போன்றவற்றை  தவிர்க்க உதவின.அலைபேசிக்கு  கொடுத்து வைத்த நேரம்  , பன்மடங்கான என்னவள் காதல் முத்தங்களை சுமந்ததால்.    
 
#அன்பு #தாம்பத்யம் #முதல் மோதல்

Friday, August 19, 2016

கங்கையே அருள்வாயே

கங்கை ,
பாரதத்தின் ஆயுள்ரேகை
தாயே உன் கரைகளில் இரு கரங்களை நாம் கூப்பினோம் ,
புனிதமாய தெளிநீரை நாங்களும் பருகினோம் ,
கார்முகில் கண்ணனின் பேர் சொல்லி , கலங்கலான எம்மனதின் கவலைகளை தீர்ப்பாயே .!
மேலுலகு செல்ல ஏணியும் நீயே, மாந்தரின் அகவிருள் போக்குவாயே .!
அலைகளாய் துள்ளியோடும் நங்கையே ,
எம் தாய் கங்கையே .!!
அருள்வாயே ..! அருள்வாயே ..!
வணங்குகிறோம் தாயே .! வணங்குகிறோம் உனையே .!
வணங்குகிறோம் கங்கையே .! அருள்வாயே ..!
தூய்மையான உன் மடியின் நிழலில் , நிலமும் கூட சொர்கமே,
புரிந்துகொண்டோம் நுரைகள் கூட நிரம்பி வழியும் உன் காதலே ,
உடல்தனை நீ அணைக்கையில் உள் மனமும் தன் மலம் விளக்குதே,
உன் ஸ்பரிசம் நுகரும் சிறுப்புல்லும் கூட புதிய உயிராய் பிறக்குதே ,
சுமந்து வந்த பாவமெல்லாம் கரைக்கிறோம் உன் மடியிலே ,
சிரித்து நீயும் அணைத்துக்கொண்டு ஆட்கொண்டதெம்மை அன்பிலே ,
அமுதின் சுவையும் அறிந்துவிட்டோம் பருகிக் களித்த உன் நீரிலே .!
அருள்வாயே ..! அருள்வாயே ..! அருள்வாயே ..! அருள்வாயே ..!
வணங்குகிறோம் தாயே .! வணங்குகிறோம் உனையே .!
வணங்குகிறோம் கங்கையே .! அருள்வாயே ..!
கறைபடிந்த உன் கரைகள் , உன் விழி திரை நீர் நுரைகள்,
விரைகிறோம் அதை போக்க , உன் பிள்ளைகள் நாங்கள் .!
எங்கள் தாயினும் மேலான உன்னை ,கடமையது நாங்கள் காக்க,
விரைகிறோம் உன் கவலைகள் போக்க , உன் பிள்ளைகள் நாங்கள் .!
வணங்குகிறோம் கங்கையே .! வணங்குகிறோம் கங்கையே .!
வணங்குகிறோம் தாயே .! வணங்குகிறோம் உனையே .!
அருள்வாயே ..! அருள்வாயே ..!

கருமை

வெளுத்துக்கிடந்த மேகம்  மெல்ல கருக்கத் தொடங்கியது,
கருமை படர படர கண்ணீர் சுரந்தது, அந்தக் கருமை பிடிக்காமல் இல்லை இவர்களுக்கு ,
மழையாய் நனைக்கிறதே .

அடர்ந்த கருமை அந்த அறையில் நிறைந்திருந்தது , 
மிகப்பெரியத் தேடலுக்கான இருப்பிடம் அது, அந்தக்  கருமை  பிடிக்காமல் இல்லை இவர்களுக்கு,
கடவுளாய் வழிகாட்டுகிறதே.

கருப்புச்சாயம் தறியெங்கும் ஊறியிருந்தது ,
மிகப்பெரிய புரட்சியின் தொடக்கம் அது , அந்தக்  கருமை  பிடிக்காமல் இல்லை இவர்களுக்கு ,
திராவிடம் தெள்ளிய தமிழ் சமுதாயத்திற்கு வித்திட்டதே.

மரத்தின் நடுவே எழுதுகரியாய் அடைந்திருந்தது,
மாற்றத்தின் வாயில் அது,  அந்தக்  கருமை  பிடிக்காமல் இல்லை இவர்களுக்கு ,
வாய்ச்சொல்லை  கை எழுத முடிந்ததே.

வெள்ளைக்குளத்தில் மிதந்துகொண்டிருந்தது,
அனைவரின் பார்வை அது ,  அந்தக்  கருமை  பிடிக்காமல் இல்லை இவர்களுக்கு,
விழியாய் வழி காட்டுகிறதே. 

முழக்கணக்கில் நூலாய் கருமை  திரிந்திருந்தது, 
பல கூட்டங்களின் காவலன் அது, அந்தக்  கருமை  பிடிக்காமல் இல்லை இவர்களுக்கு ,
பில்லி சூனியங்களை ஓட்டியதாய் நம்பப்படுகிறதே,

பாரெங்கும் சரிபாதி சூழ்ந்திருந்தது,
ஒவ்வொருத்தரின் எதிர்ப்பார்ப்பு அது , அந்தக்  கருமை  பிடிக்காமல் இல்லை இவர்களுக்கு ,
நாட்களின் முடிவை குறிக்கின்றதே.

கருமை  பிடிக்காமல் இல்லை இவர்களுக்கு ,
ஒதுக்கியும் ஒடுக்கியும் இருப்பதாலோ ,  கருமைக்கு பிடிக்கவில்லை இவர்களை,
தாய் மடியில் பிரிவினையாய் கிடக்கையிலே.