Sunday, June 11, 2017

வட்டமான சாலை

வட்டமான சாலையில்
அனைவரும் வரிசையாக ,
ஒருவர் பின் ஒருவராக ,
சென்று கொண்டிருக்கிறோம்  என
அறியாமல் செல்கிறோம்.
பாலைவனங்களில்
மெல்லச்  செல்லும் ஒட்டகங்ளாக,
ஒட்டகங்கள் நடந்து செல்லும்
நீளமான மணல் பரப்பாக ,
மணல் திருடி நெடுஞ்சாலை
மறைக்கும் பாரஊர்திகளாக ,
அதன் சாரதியின் பசியலுப்புத்
தீர்க்கும் சாலையோர வேசியாக ,
அவள் அறியாமல் சுமந்து பெற்ற
தேவனின் பிள்ளைகளாக ,
தெய்வங்களிடம் ஆலயங்களுக்குள்
கைகைகூப்பி  நிற்கும் மனிதனாக ,
அதன் வாசலில் மனிதனிடம்
கையேந்தும் பிச்சைக்காரனாக ,
அவன் கைகளில் தானமாய்
பிரசாதத்தை தரும் எச்சில்கரனாக,
தரையில் சிந்திய வெல்லப்பாகை  
நக்கிச் செல்லும் சிவப்பெறும்பாக ,
எறும்புகளை மிதிக்கும்
ஒட்டகத்தோல் காலணிகளாக
மாறி மாறி மிதித்தே
முடிகிறது வட்டமான சாலை .