Tuesday, March 21, 2017

நல்லைஅல்லை


"நல்லை  அல்லை " , குறுந்தொகையை சிந்திக்க வைத்த வைரமுத்துவுக்கு நன்றி சொல்லி ஆகவேண்டும்.. இன்பத்தமிழின் இனியசொற்களை பிரயோகிக்கும் போது  வரும் சுகமே தனி .

நம்மில் எத்தனை பேர் குறுந்தொகை படைப்பினை பற்றி பேசியிருப்போம் . அதனில் இருந்து இரண்டுவார்த்தை இன்று தமிழகமே முனகிக்கொண்டிருக்கிறது .

தலைவன் இரவில் தலைவியிடம் வந்து பழகுங் காலத்தில் அவனை விரைந்து மணம் செய்து கொள்ளும்படி தூண்ட எண்ணிய தோழி, “நிலவே, நீ இரவில் வந்தொழுகுந் தலைவரது களவொழுக்கத்திற்கு நன்மை செய்வாயல்லை” என்று கூறி இரவின் நிலவை  மறுத்ததாக அமையும் பாடல் குறுந்தொகையில் 'நல்லை அல்லை ' எனும் பிரயோகத்துடன் அமைந்துள்ளது .

இந்த திரைப்பட பாடலும் அதைப் போன்றே நாயகன் தொடர்ந்து நாயகியை தேடி அவளை அடைய நினைக்கும் போது அவள் தவிக்க விட்டு ஓடுவதையும் , அந்த நேரத்தில் செல்லமாக நிலவின் , இரவின் மீதும் கோபப்படுவதும் அத்தனை அழகு .

நம்மால் கூறப்படும் செய்தியைக் கேட்டறிதற்குரியவர் முன்னே இருக்கும் போதும் ,  அவரை நேரடியாக கூறாமல், வேறு ஒருவரை யேனும், மற்றோரு  பொருளையேனும் காட்டிக் கூறுவது முன்னிலை புறமொழியாகும் . அவ்வாறாக காதலன் காதலியின் உரையாடலை சங்கத்தமிழ் சொல்லுடன் நயம்பட அளித்திருக்கிறார் கவிஞர் .


நல்லை அல்லை நன்னிலவே நீ நல்லை அல்லை ,
நல்லை அல்லை நள்ளிரவே  நீ நல்லை அல்லை ,
நல்லை அல்லை நாறும்பூவே  நீ நல்லை அல்லை ,
முல்லை கொல்லை நீ நல்லை அல்லை

#காற்றுவெளியிடை
#நல்லைஅல்லை