Monday, April 18, 2016

இப்படிக்கு உன் பேரன்

சிறுகுழந்தைகளுக்கு தங்கள் தாத்தா பாட்டிகளுடன் இருப்பதே ஒருவித இன்பம் தான் . கேட்பதெல்லாம் வாங்கித்தருவது , பெற்றோரின் கண்டிப்புக்கு நம்மோடு போலியாக வருந்துவது ,  குலதெய்வ கோவில்கள் பற்றியும் உறவுக்காரர்கள் பற்றியும் புரியாத கதை சொல்லுவது, தன்னுடைய வாரிசுகளை வளர்த்த பெருமைகளை கூறுவது என இருந்திருக்கும் என நினைக்கிறன் . கிடைகாத குடுப்பனைகள் எப்படி இருக்கும் என கற்பனைத்  தான் செய்ய முடியும் .

பிறக்கும் முன்னரே என்னை கண்டுகொள்ள விரும்பாமல் போன தாய் வீட்டுப் பெரியோரும் , நான் பிறந்தபின்னே கண்டுகொள்ளாத தந்தை வழிப் பாட்டன்களுக்கும் நடுவே அந்த உறவின் வெறுமையை நான் உணர்ந்திருக்கிறேன். அத்தை மகன்களுக்கு கிடைத்த பாட்டியின் மடியும் தாத்தாவின் தோள்களும் கிடைக்காமல் போகவே அப்படியொன்று இல்லையெனவே நினைத்திருந்தேன் .

மாளிகை போன்ற வீட்டினுள் வாய்மூடிய தந்தைவழி உறவுகளுடன்  விசித்திர நாட்கள்  பல கடந்துள்ளன. முதலில் முலைப்பால் உண்டதலோ உடன் பின் பிறந்தவர்களுக்கு கோவம் என் தந்தையிடம் . மாதம் மும்மாரி பொழிந்து விடுவர் அர்ச்சித்து, பின்  அசடு வழிந்து வந்து நிற்பர் வீட்டின் தலைமகன் நீ , வீட்டு நிகழ்வை முன்னின்று நடத்தென்று. புரிந்ததில்லை இரத்தசொந்தங்களின் மனநிலையும் , விட்டுகொடுக்காமல் சென்ற என் தந்தையையும் . இன்று அவர்கள் மனக்கசப்புகள் தாண்டி எந்தலைமுறையினருடன்  நுண்ணறிபேசி
உறவுகளாக இருக்கிறோம் என்பதே சாதனை .


உன் பெற்றோர் கொடுத்ததை இன்று என் பெற்றோருக்காய் விட்டுத் தானே சென்றிருக்கிறாய் . இதைத் இப்படித்தான் கொடுத்திருக்க வேண்டுமா?  யாருக்கும் சொந்தமில்லா  பொய்ப்பொருளுக்காக , சொந்தமான  மெய்யுறவுகளை உணராமல் பிரிந்திருப்பதா. நிலையில்லா நிலமகள் செய்த நிறைவுபெறாத சதியை நீ அவளிடம் சென்று முடித்திருக்கிறாய் .

நண்பர்கள் வீட்டிலிருக்கும் பெரியோர்கள் என்னிடம் அதீத பிரியம் காட்டியதும் , நான் அவர்களுடன் மணிக்கணக்காக உரையாடியதும் உறவாடியதும் என்னையே நான் மறந்து மெய்சிலிர்த்த நிமிடங்கள். ஒரு தலைமுறையினரின் அல்பமான மண்ணுக்கும், பெண்ணுக்கும் , பொன்னுக்குமான  மனக்கசப்புகளால் என்
போன்ற அடுத்த தலைமுறையினர் அந்த உறவை இழந்து நிற்பத்தை அவர்கள் அறியவில்லை. பேசாமலிருந்தாலும் அந்த உறவுகளை அவ்வப்போது காணும் போது நம்மை மறந்து உணர்வுகள் அருகில் அழைத்தே சென்றிருக்கின்றது.  மெகா சீரியலில் பாட்டிகளுக்கு பயந்த தாத்தாக்களை பார்க்கும் போதெல்லாம் , இப்படித்தான் நம் வீட்டிலும் என கவலையில் சிரித்த நாட்கள் பல.

உறவுகள் எனும் செடிகள் பிரிவினால் வாடி, மண்ணோடு வீழும் போது வரும் உஷ்ணமான கண் நீர்த்துளிகளால்  செடிக்கும் பயனில்லை நமக்கும் பயனில்லை . ஏழுதலைமுறை சொந்தங்களோடு உறவாடவிட்டாலும் , உடன்பிறப்புகளும் தன் பெற்றோரும் உடன் இருத்தலின் அவசியம் கசப்பான அனுபவமாய் கற்கலாயிற்று.

நேரில் சொல்லமுடியவில்லை கேட்டுக்கொள்,  உன்னுடைய  அன்புக்கும் ஆசிக்கும் ஏங்காத நாட்களில்லை . உனக்கான வீட்டில் நீ உரிமையோடு விரைவில் வரப்போகிறாய் என காத்திருக்கிறேன்.


Thursday, April 14, 2016

#‎பிப்ரவரி29‬

ஐந்தாண்டுக்கு ஒரு முறை இலவசங்களில் தன்மானத்தை தொலைக்கும் நாம்,
நான்காண்டுக்கு ஒரு முறை
இலவசமாய் கிடைக்கும் ஒர் நாளையும்
தொலைத்துவிட்டோம்.

Mar 22 இன்றையதேதியும்இன்றையவரலாறும்

உண்டமயக்கதிலிருந்து தப்பிக்க இணையத்தில் செய்திகளை வாசிக்கலாம் என தொலைபேசியில் பார்த்துக்கொண்டிருக்கும் போது , ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் .. பத்துக்கும் மேற்பட்டோர் ஐரோப்பாவில் குண்டு வெடித்து இறந்தனர் என செய்தி கண்முன்னே பளிச்சிட்டது .
மனம் ஒரு நொடி கணத்தே போனது . என்ன தான் கிடைக்கிறது பிறர் அழிவினில் நமக்கென்று புலம்பிக்கொண்டே இன்றைய தமிழ் நாள்காட்டியை நோக்கினேன் . ஒருநொடி வண்ணத்துப்பூச்சி வளைவோ இதென தோன்றியது .
இதே நாள் நம் பழங்காலத் தமிழர்களின் சிறப்பு வாய்ந்த பண்டிகைகளுள் ஒன்றாக காமன் பண்டிகை இருந்துள்ளது. மன்மதனை சிவன் எரித்த கதை இன்றும் தமிழகத்தின் பெரும்பாலான கிராமங்களில் ஆண்டுதோறும் காமன் பண்டிகை எனக் கொண்டாடப்படுகிறது.
சிவபெருமான் தவம் புரியும் இடத்தை அடைந்த காமன் அவரை வணங்கினான். சிவபெருமான் மெளனமாக இருக்கக் கண்டு,அவர் மேல் தன் மாயக்கணைகளை தொடுத்தான் .. இதனால் சினமுற்ற சிவபெருமான் தன் நெற்றிக் கண்ணினால் காமதேவனை எரித்துச் சாம்பலாக்கி விடுவார்[
இதைக்கண்ட மன்மதனின் மனைவி ரதி கண்ணீர் விட்டு அழுது புரள்கிறாள். தன் துயரை சிவனிடம் முறையிட்டு மன்மதனை மீண்டும் உயிர்ப்பிக்குமாறு வேண்டுவார்.
கோபம் தணிந்த சிவன் ரதியின் கண்ணுக்கு மட்டும் தெரியுமாறு அருள் புரிகிறார். காம தேவன் திருமணம், காம தேவன் எரிக்கப்படுவது, பின்னர் உயிர்த்தெழச் செய்யப்படுவதுதான் காமன் கூத்தில் பாடப்படும் முக்கிய நிகழ்வுகளாகும்.
இந்த நாள் தான் காமன்தகனம் என கொண்டாடப்படுகிறது .
“வெங்கண் நெடுவேள் வில் விழாக்காணும்
பங்குனி மயக்கத்துப் பனி அரசு யாண்டுளன்” எனும் இளங்கோ அடிகளின் வார்த்தைகள் நினைவுக்கு வந்தது.
யுகங்கள் தாண்டியும், கண்டங்கள் கடந்தும் ஒரே நாளில் தகனம் நடக்கின்றதோ என எனக்கும் யானைக்கும் பூனைக்கும் முடிச்சு போட்டுவிட எனக்கு மனம் தான் வரவில்லை .
உலக தண்ணீர் தினத்தினில் ,
செந்நீர் குளங்கள் அங்கே.
‪#‎இன்றையதேதியும்இன்றையவரலாறும்‬
‪#‎காமன்தகனம்‬ ‪#‎பெல்ஜிய‬ குண்டுவெடிப்பு