Tuesday, March 22, 2016

இன்றைய தேதியும் , இன்றைய வரலாறும்

உண்டமயக்கதிலிருந்து தப்பிக்க  இணையத்தில் செய்திகளை வாசிக்கலாம் என தொலைபேசியில் பார்த்துக்கொண்டிருக்கும் போது , ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் .. பத்துக்கும் மேற்பட்டோர் ஐரோப்பாவில் குண்டு வெடித்து இறந்தனர் என செய்தி கண்முன்னே பளிச்சிட்டது .

மனம் ஒரு நொடி கணத்தே போனது . என்ன தான் கிடைக்கிறது பிறர் அழிவினில் நமக்கென்று புலம்பிக்கொண்டே இன்றைய தமிழ் நாள்காட்டியை நோக்கினேன் . ஒருநொடி வண்ணத்துப்பூச்சி வளைவோ இதென தோன்றியது .

இதே நாள் நம் பழங்காலத் தமிழர்களின் சிறப்பு வாய்ந்த பண்டிகைகளுள் ஒன்றாக காமன் பண்டிகை இருந்துள்ளது. மன்மதனை சிவன் எரித்த கதை இன்றும் தமிழகத்தின் பெரும்பாலான கிராமங்களில் ஆண்டுதோறும் காமன் பண்டிகை எனக் கொண்டாடப்படுகிறது.

சிவபெருமான் தவம் புரியும் இடத்தை அடைந்த காமன் அவரை வணங்கினான். சிவபெருமான் மெளனமாக இருக்கக் கண்டு,அவர் மேல் தன் மாயக்கணைகளை தொடுத்தான் .. இதனால் சினமுற்ற சிவபெருமான் தன் நெற்றிக் கண்ணினால் காமதேவனை எரித்துச் சாம்பலாக்கி விடுவார்[

இதைக்கண்ட மன்மதனின் மனைவி ரதி கண்ணீர் விட்டு அழுது புரள்கிறாள். தன் துயரை சிவனிடம் முறையிட்டு மன்மதனை மீண்டும் உயிர்ப்பிக்குமாறு வேண்டுவார்.

கோபம் தணிந்த சிவன் ரதியின் கண்ணுக்கு மட்டும் தெரியுமாறு அருள் புரிகிறார். காம தேவன் திருமணம், காம தேவன் எரிக்கப்படுவது, பின்னர் உயிர்த்தெழச் செய்யப்படுவதுதான் காமன் கூத்தில் பாடப்படும் முக்கிய நிகழ்வுகளாகும்.

இந்த நாள்  தான் காமன்தகனம் என கொண்டாடப்படுகிறது .

 “வெங்கண் நெடுவேள் வில் விழாக்காணும்
பங்குனி மயக்கத்துப் பனி அரசு யாண்டுளன்” எனும்  இளங்கோ அடிகளின் வார்த்தைகள் நினைவுக்கு  வந்தது.

யுகங்கள் தாண்டியும், கண்டங்கள் கடந்தும் ஒரே நாளில் தகனம் நடக்கின்றதோ என யானைக்கும் பூனைக்கும் முடிச்சு போட்டுவிட எனக்கு மனம் தான் வரவில்லை .

உலக தண்ணீர் தினத்தினில் ,
செந்நீர் குளங்கள் .
#இன்றைய தேதியும் , இன்றைய வரலாறும்
#காமன்தகனம் #பெல்ஜிய குண்டுவெடிப்பு

Wednesday, March 9, 2016

சூரியக்ரஹனம்

நேற்றைய சிவராத்திரியின் ஆனந்த தாண்டவத்தில்
சடை முடிச்சவிழ்ந்து விழுந்தாலோ நிறைமதியின்று ,
பூமிக்கும் பகலவனுக்கும் நடுவில் ..!!

#சூரியக்ரஹனம்
03/09/2016

Monday, March 7, 2016

தெய்வங்கள் நீங்கள் தான்

கிருதயுகத்தில் ரேணுகாவின் கண்ணீருக்காய் இருபத்தோரு தலைமுறை க்ஷத்ரிய வம்சத்தை தலைக்கொண்ட பரசுராமனாகட்டும் , திரேதாயுகத்தில் கண்மூடித்தனமாய் தாய் சொல் கேட்டவனும்,  மிதிலைச் செல்வியின் ஆனந்தத்துக்காக மாயமானென அறிந்தே துரத்திச்சென்ற  ராமனாக இருக்கட்டும் , த்வாபரயுகத்தில் பாஞ்சாலியின் கண்ணீர்த்துடைக்கும் தேர்ப்பாகனாகட்டும், பெண்களின் அழுகுரல் தவிர்க்கவும் புன்னகை உதிர்க்கவும் நிச்சயமாய் போராட்டங்கள் நடந்திருக்கின்றன. பெண்களின் நிலையை  என்றுமே சனாதன தர்மம் உயர்வாக காட்டியுள்ளது. 

தேவி பாகவதம் என்றும் , தேவி சுக்தங்கள் என்றும் பெண் தெய்வங்களை ஆரிய மந்திரங்களை கொண்டு பூஜிதுள்ளோம். பெண்களை குருமார்களாகவும் நம் புரானச் சான்றுகளில் காண்கிறோம். ஆண்டாள் போன்ற  தெய்வங்களை மணந்த தமிழ் பெண்களை பற்றிய பெருமையான வரலாறுகள் இருக்கின்றன. பன்னிருவரில் ஒருவரும் , அறுபத்து மூவரில் மூவரும் என சற்றே இடஒதுக்கீடு குறைந்தாலும் பெண்களை நாம் மறந்ததில்லை.

தமிழரின் பொற்கால ஆட்சியான சோழப் பேரரசில் முடிவெடுக்கும் முக்கிய பொறுப்புகளை பெண்கள் வகித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. காவியத் தலைவிகள் மேல் நம்பிக்கையில்லாதவர்கள் கூட நம் உள்ளூர் பெண் தெய்வங்களின் மேல் பயபக்தியுடன் தான் இருந்திருக்கிறார்கள் . நம் கிராமங்களில் ஊர்த் தெய்வங்கள் , இனத் தெய்வங்கள் , வீட்டுத் தெய்வங்கள் , குலத் தெய்வங்கள் , பத்தினித் தெய்வங்கள் , காவல் தெய்வங்கள் , எல்லைத் தெய்வங்கள் என பலவகையில் பெண் தெய்வங்களை நாம் கொண்டாடுகிறோம்.

ஊரின் எல்லையிலும், வாய்க்கால்கள் அருகிலும், குலக்கரைகளும் , வேப்பமரங்களும் இவர்களுக்கு உரைவிடங்களாகின்றன. ஆளுயர அய்யனாரிடம் தப்பித்தாலும் எல்லையம்மனிடமோ , முப்பிடாரியிடமோ பேச்சிழந்தும் முடமாகவும் கிடந்த நிலச்சமீன்களின் கதைகளை கிராமங்களில் கேள்விபட்டிருக்கிறோம் .
சரித்திரக் காட்சிகளில் வரும் த்ரௌபதிக்கும் கண்ணகிக்கும் கோவில்கள் வைத்துக் கொண்டாடியிருக்கிறோம்.

இன்றளவும் குடும்பத்தில் சுமங்கலியாக இறந்த பெண்களை தெய்வமாக நினைத்து பிரார்த்தனைகள் செய்கிறோம். நெடுஞ்சாலையை ஆக்கிரமித்த அம்மனுக்கும்  ஆதீனம் அமைத்து வாரிசுகள் வரைக்கும் வணங்குகிறோம். ஆனந்தமயமாய் தொண்டு நிறுவனம் நடத்தும் அம்மையாராகட்டும், ஆண்டாண்டுகளாய் ஆண்டுவரும் அம்மையாராகட்டும் ஆண்டவனென  நம்மில் லட்சக்கணக்கானோர் அழகுபடுத்திப் பார்க்கிறோம். வெளிநாட்டு அன்னைகளை நம்மை ஆட்டுவிக்க வைத்தும் கூட நீதி தேவதையின் கண்ணைக்கட்டி, பாரத்தாயுடன் பொம்மையைப் போல் அமைதியாய் இருந்திருக்கிறோம்.

எத்தனையோ வழிபடுதல் இருந்தாலும் வீட்டினில்  நம்முடன் இருக்கும் தாயிடம் துளிப் புன்னகையும் ,  சகோதரிக்குத்  தோள் கொடுத்து அரவணைப்பதும், துன்பத்தின் போது  துணைவியைக் கட்டியணைப்பதும்  தான் பெண் தெய்வ வழிபாடுகளில் சாலச்சிறந்தது.

நம் வீட்டுப் பெண்களின்  மகிழ்ச்சியில் தான் , நாம் உருவம் கொடுத்த தெய்வங்களின் மகிழ்ச்சியும் அடங்கியுள்ளதை நாம் கண்டிப்பாக உணரவேண்டிய தினம் .

இன்று .

உலகப் பெண்கள் தின வாழ்த்துக்கள் .

Tuesday, March 1, 2016

பொதுவா சொன்னேன்

அந்த விடியற்காலைப் பொழுது , மனதை கட்டவிழ்த்து பறக்கச் சொன்னேன் .
ஜன்னல் வழியாக வெளியே சென்று உலாத்துகையில் ஆவின் பால் பூத்தில் குல்லா போட்டு அணிவகுத்திருக்கும் கூட்டத்தை கண்டு நின்றேன். 'ஏம்பா என்னிக்கு தான் நேரத்துக்கு இவன் பால்வண்டி வரும் . உங்களோட தெனமும் ரோதனையா இருக்கு' என்று கிழங்களின் முனுமுனுப்பு . 'அய்யரே இங்க பால் வண்டி வருதோ இல்லையோ பெருமாள் கோவில்ல மணி ஆறடிச்சா இஸ்ஸ்பூன் பால் தராங்களே அப்பறோம் என்ன '  என குந்துவிட்டு அமர்ந்துகொண்டு சுருட்டை இழுத்துக்கொண்டே வம்புக்கிழுத்தான் அந்த லுங்கிக்காரன். விஸ்வரூப தரிசனம் பற்றி போலி நாத்திகர்களுக்கு என்ன தெரியும் என அமைதியாய் பல்லை கடித்துக்கொண்டார் அந்த வயோதிகர் . கோச்சுக்காத சும்மா பொதுவா சொன்னேன் என்று பால் வண்டி வந்ததும் பால்தட்டுகளை எடுத்து அடுக்க ஓடினான் .

காலை கதிரவன் எட்டிப் பார்க்க ஆரம்பித்துவிட்டான் , அங்கே  வேகமாக வந்த மூன்றுச் சக்கர தேருக்குள் என்னை நுழைத்துக்கொண்டேன். சீறிப்பாய்ந்து அருகில் இருப்பவர்களை ஆடியாடி உரசவைத்து முன்னம்கம்பியில் லேசாக முட்டவைத்தது அந்தப்பயணம் . 'இங்க நிறுத்துப்பா  , எவ்ளோ ஆச்சு' என்றார் அந்த நடுத்தர வயது   பெண்மணி . இருபது ரூவா மா என்றார் ஆட்டோக்காரர் . 'என்னையா கொள்ளை அடிக்கிற ? பஸ்சுல அஞ்சு ரூவா தான்'  என புலம்ப ஆரம்பித்தாள் .  ' நானா உன்னை வரச்சொன்னேன் . தெனமும் காலைல இதே பிரச்சன யாரோடயாது'என்றான் அவன்  . அதுக்கில்லப்பா மத்தவண்டியெல்லாம் பத்துரூவா தானே என இழுத்தாள் அந்தப் பெண். 'வீட்டு சந்துக்கிட்ட ஏறக்கியும் விடனும் , பஸ் டிக்கெட் விலைக்கு சவாரி வர எங்கப்பன் என்ன சேவசெய்யவா பெத்துப்போட்டான் ' அது வந்து பொதுவா சொன்னேன் என மேலும் இழுக்கையில்,அந்த பெண் நீட்டிய இருபது ரூபா நோட்டை பிடுங்கி வண்டியை செலுத்தினார் அவர்.


கசகசத்துப் போன ஆட்டோவை விட்டு , இரயிலுக்கு மாறலாம் என ஓடிச் சென்று செங்கல்பட்டு நோக்கி செல்லும் ரயில்வண்டியில் ஏறினேன். இரண்டு தொழில்நுட்ப ஜீவிகளுக்கு அருகே சென்று அமர்ந்துகொண்டேன். அவர்களுக்குள் ஏதோ தீவிரமாக பேசுகிறார்கள் . 'டேய் மார்ச் மாசம் டா . லீவ் போடாம ஆபீஸ்க்கு வந்துரு . ஏற்கனவே நீ மேனேஜர் ஓட இங்கிலீஷ் நல்ல பேசறனு அவருக்கு கோவம் . சம்பளம் ஏத்தறதுல கைய வெச்சுருவானுங்க . அதுவும் இல்லாம வெள்ளைக்காரன் உன்னப் பத்தி பெருசா புகழ்ந்து பேசினது வேற நம்ம டீம்ல எல்லாருக்கும் ஒரே பொகைச்சல். உனக்கா  இல்ல அந்த டான்ஸ் ஆடுவாளே ஒரு பொண்ணு அவளுக்கானு தான் எல்லாரும் பேசிட்டு இருக்காங்க' என்றான் ஒருவன் . 'டேய் , என்னடா இப்படிலாம் சொல்ற என்றான் இன்னொருத்தன் . மச்சி பொதுவா சொல்லணும்னா ஐடி வேலையே ஒரு நாய் பொழப்பு டா ..


வேணாம் டா சாமி என திருட்டுத்தனமாய் அடுத்த ஸ்டேஷனில் முதல் வகுப்பு சீட்டில் சென்று அமர்ந்தேன் .
அந்தப்பெட்டியிலிருந்து பெண்கள் ரயில்பெட்டி பாதியாய் பிரிக்கப்பட்டதால் , ஜொள்ளர்களுக்கு அது வசதியாக இருந்தது . இந்த கால பொண்ணுங்கள பாரேன் , துப்பட்ட போடாம எதுக்கு சுடிதார போடனும் . வலைவலையா என் டாப்ஸ் போடணும் அப்றோம் அவன் பாத்தான் இவன் பாத்தான் புகார் குடுக்கணும் ? என ஒரு முறுக்கு மீசை மைனர் அருகில் இருப்பவரிடம் வசை பாடிக்கொண்டிருந்தார். சார் உங்க பொண்ணு எப்பவும் புடவை கட்டிட்டு தான் வெளிய போறாங்களா? புடவை கட்டினா இல்ல எவனும் பாக்காம தான் இருக்காங்களா ? என்றால் அருகில் இருக்கும் கல்லூரி வயது சிறுமி . எதிர் அடியை சற்றும் எதிர்பார்க்காத அந்த மைனர் இல்லமா பொதுவா சொன்னேன் . நாடு கெட்டு கெடக்குல அதனால என நழுவி சன்னல் வழியாக காட்டன்குளத்தூர் கருவேலம்காடுகளை ரசிக்கச் சென்றுவிட்டார் .


பயணம் நெடு நேரம் ஆகிவிட்டதால் வீட்டைநோக்கி நடைக்கட்டினேன் .  தெருமுனையில் பீடாக்கடையில் பொதுவா நம்ம ஊரப் பாத்தோம்னா திமுக ,அதிமுக ரெண்டும் மோசம்ப்பா.  நல்ல கட்சியே இல்லையப்பா என்ற குரல் ஒரு ஓரத்தில் என் காதில் விழுந்தது.

வீட்டுக்கு வந்ததும் கனடாவில் இருக்கும் என் நண்பனுக்கு குறும்செய்தி அனுப்பினேன் . 'என்ன டா எப்புடி இருக்க , ஆராய்ச்சிலாம் எப்புடி போகுது ?? . நல்லா போகுது டா . ரெண்டு குட்டி மிருகம் இருக்கு அதோட கதைய முடிச்சா நம்ம பொழப்பு கொஞ்சம் செழிப்பாகும் என்றான் . 'என்னது ஜீவஹிம்சையா, சகிப்பின்மைக்கு காரணம் அப்போ மோடினு பத்திரிக்கைல வருமேடா ? எதையெல்லாம் கொல்லப்போற ?' என்றேன் .
மௌஸ் அண்ட் ராட் என்று பதிலளித்தான் . டேய் பொதுவா பாத்தா ரெண்டும் எலி தானே டா . என்ன பெரிய வித்தியாசம் என்றேன் .  டேய் நெறைய இருக்கு டா . மொதல்ல அது ரெண்டோட உடலியல் , அடுத்து மரபியல் , அடுத்து   அழுத்தம் கையாளும் திறன் இப்படி நெறைய . ஆனா நீ சொல்ற மாதிரி பொதுவா பாத்தா ரெண்டும் ஒன்னுனே வெச்சுக்கலாம் .


சரி டா . ஒவ்வொனுக்குள்ளும் பல விஷயங்கள் இருக்கு. நான் இனிமேல் பொதுவா எதையும் சொல்ல மாட்டேன் என்று விடைப் பெற்று மனசுக்குள் நினைத்துக்கொண்டேன் ' பொதுவா இந்த முனைவர் பட்டம் ஆராய்ச்சினு சுத்துரவங்களாம் இப்புடி தான் கொழப்புவாங்க '  .