Tuesday, August 11, 2020

வீரி பறவைகள்

வீரி ( கேதரஸ் ஃபுசெசென்ஸ் ) ஒரு பொதுவான சிறிய பழுப்பு மற்றும் வெள்ளை த்ரஷ் பறவை ஆகும், இது பகலில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும். அதன் மிகவும் பொதுவான அழைப்பு ஒரு கடுமையான, இறங்கு "வீ-எர்" ஆகும், அதில் இருந்து பறவைக்கு அதன் பெயர் கிடைக்கிறது. குறிப்பாக குரல் கொடுக்கும் இந்த பறவை ஒரு தென்றல், புல்லாங்குழல் போன்ற பாடல், உச்சரிக்கப்படும் அந்தி கோரஸ் மற்றும் சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு நன்றாகப் பாடுவதைக் கேட்கிறது. இந்த நடத்தை பறவையை வேட்டையாடலுக்கு உட்படுத்தக்கூடும்

https://anchor.fm/sowmiyanarayanan-s/episodes/ep-ehpqv9



Sunday, April 19, 2020

எங்க ஏரியா உள்ள வரியா.!! - 1

1997  முதல்,

டிவிஎஸ் நகர்


90'ல் பிறந்து முதல் இரண்டு வயது வரை நாக்பூரில் இருந்து , பின்னர் நான்கு  வருடம் சென்னையில் கழித்து என் இரண்டாம் வகுப்பு சேரும்போது நான் மதுரைக்கு வந்தேன். முதல் இரண்டு வருடங்கள் மதுரையின் ஜெய்ஹிந்த்புரத்தில் வசித்தேன். சரியாக ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது தான் டிவிஎஸ் நகருக்கு குடிபுகுந்தோம். அதன் பின் நான்கு வருடம் சந்தானம் ரோட்டிலும் , பின்னர்  ஐந்து வருடம் ராஜம் ரோட்டிலுமாக கழித்தோம் .

இப்போதும் கூட ஒவ்வொரு தெருவிலும் யாருடைய வீடிருந்தது என மனப்பாடமாக ஒப்பிக்க முடியும். அத்துணை அளவுக்கு தெருக்களை ஒட்டப்பெருக்கியிருக்கிறோம் நானும் என் நண்பர்களும் . சுருக்கென சொல்லவேண்டும் என்றால் ஸ்ரீனிவாசா ரோடு , ராஜம் ரோடு , சந்தனம் ரோடு , கிருஷ்ணா ரோடு , துரைசாமி ரோடு , மீனாட்சி ரோடு . இவ்வளவு தான் எங்க ஏரியா . மதுரையின் மத்தியில் எப்படி மீனாக்ஷியம்மன்  கோவிலோ , எங்கள் நகரின் மத்தியில் டிவிஎஸ் லட்சுமி பள்ளி . அதனை சுற்றி தான் எங்களின் நாட்களும் கிழமைகளுக்கு .

ஒவ்வொரு சாலைகளாய் இப்போது என் ஞாபகத்தின்  படி குறிப்பிடலாம் என இதை எழுத ஆரம்பிக்கிறேன். முதல் பதிவு என்பதால் கிருஷ்ணா ரோட்டில் இருந்து தொடங்குகிறேன். லட்சுமி நர்சரி பள்ளிக்கு எதிரில் ஆரம்பித்து ராமர் கோவில் கிரௌண்டின் முடிவோடு முடிந்து விடும் சிறிய சாலை. இப்போது ராமர் கோவில் கிரௌண்ட் ராமர் கோவில் பூங்காவாக மாறிவிட்டது.  கிருஷ்ணா ரோட்டின் முதல் வீடு எங்கள் நண்பன் கோபாலின் வீடு. மிகப்பெரிய தனி வீடு. அப்போதே மூன்று மாடி, பத்துக்கும் மேற்பட்ட அறைகள் என பிரம்மாண்டமாய் இருக்கும் . கோபாலின் வீட்டில் கூட்டுக்குடும்பம், வீட்டில் எப்போதும் குறைந்தது எட்டுபேராவது இருப்பார்கள்.  அம்பாஸடர் கார் இருந்ததாக ஞாபகம். அதன் மேல் 'யோகி ராம் சூரத் குமார்' என எழுதியிருக்கும். சாதுவாகவும் எங்கள் அனைவரிடமும் சகஜகமாக பழகி வீட்டில் வாசலில் இருந்த கரண்டு கம்பத்தை எங்களுக்கு ஸ்டாம்பாக்கி விளையாட குடுத்து , விளையாடும் போது இடைவெளியில் நீர் அருந்த கொடுத்தும் அரவணைத்தபடி இருப்பான்.

அடுத்த வீடு கணேசன் தாத்தா, பாப்பா மாமி. தனி வீடு, ஐந்து அறைகள் , சுற்றி அழகான தோட்டத்துக்கான இடம். அப்போதே 60 வயதான அவருக்கு இரண்டு மகன்கள் . ஒருவர் அமெரிக்காவில் கோடிகளில் சம்பத்துக்கொண்டிருந்தார், விவகாரத்தானவர். இரண்டாம் மகன் சேரமாதேவியில் விவசாயம் செய்துகொண்டிருந்தார். வெளிநாட்டுக்கு மாம்பழ ஏற்றுமதி செய்தார். கோடைகாலங்களில் எங்க நண்பர் என்பதால்  மாம்பழ டப்பாக்கள் கிடைக்கும். பாப்பா மாமி எனக்கு தெரிந்த வரையில் படுத்தப்படுக்கை மட்டுமே. உடம்பில் கத்திவைக்க முடியாத அளவுக்கு அறுவைசிகிச்சைகள் ஆகிவிட்டிருந்தது. அதற்க்கு அடுத்ததாக இருந்த மூன்று வீடுகளிலும் எனக்கு நண்பர்கள் இல்லை. கடைசி ஏதோ கம்பெனிக்கு வாடகைக்கு கொடுக்கப்பட்டிருந்தது . அதன் சுவர் எங்கள் பள்ளியின் சுற்றுசுவரோடு உறவாடிக்கொண்டிருக்கும்.

டிவிஎஸ் பள்ளியின் பூங்கா கதவு .

டிவிஎஸ் பள்ளி காலை 6.45 முதல் 1230 வரை காலை பிரிவும், 1245 முத 6 வரை மதிய பிரிவும் என இரண்டு
ஷிப்ட்டுகளில் ஒரு ராட்சத மாணாக்கர் ஆலையாக சுழன்றுகொண்டிருந்தது.  மதிய பிரிவுக்கு மிதிவண்டிகள் மட்டும் நடந்து வருவோர் அனைவரும் இந்த  கதவு வழியாக தான் செல்ல வேண்டும். அந்த பேர் தெரியாத மூன்றாவது வீட்டின் எதிரே கிருஷ்ணா ரோனாட்டின் நீண்டசாலை மெல்லியதாக வளைந்த வேப்பங்குச்சியயை போல் வளைந்து சுமார் 150 வீடுகளுக்கு அப்பால் முடியும்.   

பிரிந்த சாலையின் முதல் வீட்டில் மூன்று ஆள் உயரத்தில் வேலி போடப்பட்டிருக்கும். வயதான தம்பதிகள் இருந்த அந்த வீடு ஆயிரம் மாணவர்கள் சென்று வரும் அந்த வீதியில் ஒரு வித அமைதியோடு தான் இருக்கும். அங்கிருந்து மூன்று வீடு தாண்டி எதிர்ப்புறம் மாடியில் ஒரு கீரை குடிசை போட்டு பிசிக்ஸ் ட்யூஷன் சென்டர் இருந்தது . அவர் பெயர் சதீஷோ சுரேஷோ என ஞாபகம். எனக்கு இயற்பியலில் பெரிய அளவு ஆர்வமில்லை அது எனக்கு வரவும் இல்லை .

அந்த சாலையில் அப்படியே பார்த்தால் ஒரு ஏழாவது வீட்டில் என் பள்ளியில் படித்த ஜெகன் வீடு . ஜெகனை பள்ளியில் பழக்கம் , அவரின் அப்பா நாராயணன் நிதமும் கோவிலில் திருவாராதன மணி அடிக்கும் கைங்கர்யத்துக்கு வருவார் அங்கே பழக்கம். அவர் பிஆர்சியில் வேலை பார்த்தார். காலை சரியாக ஏழரை மணி அளவில்  கையில் மதிய உணவு டப்பாவோடு  வேலைக்கு செல்வார். ஜெகனின் அம்மா பேர் ஜெயாமாமி என ஞாபகம் . இப்போது ஜெகனுக்கு ரெட்டை குழந்தைகள். முகநூலில் நட்பில் இருக்கிறோம்.  அந்த வீட்டின் மாடியில் தான் என்னுடைய அத்தை வாடகைக்கு குடியிருந்தார்.  அதற்கு நேர் எதிர் வீடு என் பள்ளி நண்பன் அஜய் கார்த்திக் . அவர்கள் பெற்றோர் மருத்துவர்கள், ஒரு அக்கா அபி எங்கள் பள்ளியில் தான் பயின்றார் .  ஜெகன் வீட்டின் அடுத்த வீடு திருநாராயணன் தாத்தா வீடு . அவரின் மகன் ஸ்ரீனிவாசன் டிவிஎஸ்ல் பெரிய பதவியில் இருந்தார். கோவலன் நகரில் தனியாக பெரிய வீடு கட்டி வாழ்ந்து வந்தார். அவரின் மாமனார் கிருஷ்ணஅய்யர் வீட்டில் தான் நாங்கள் ராஜம் ரோட்டில் குடியிருந்தோம். தாத்தாவின் பேரன்கள் நவீன் , பாலாஜி.  தொடர்பில் இல்லை. ஆனால் பாலாஜி வெளிநாட்டில் இருக்கக்கூடும் அப்போதே அவன் பெரிய படிப்பாளி. நவீன் என்னுடைய உறவினர் கண்ணனுடன் நாட்பில் இருந்தார். மேப்கோ கல்லூரியில் பொறியியல் படித்து வந்தார்.

அடுத்து இரண்டு வீடு கழித்து சுஜாதா குடியிருந்த ஞாபகம். பள்ளியில் எங்களுக்கு ஒரு வருடம் பின்னர் ஆனால் நாட்டிய குழுவில் இருந்ததால் சற்றே பிரபலம். இப்போது கூட மை தீட்டிய கூர்விழிகள் பளிச்சென நினைவுக்கு வருகிறது.  அதன் பின் மிக முக்கியமான வீடு , எங்கள் பள்ளி நண்பா சித்தார்த்தன் . இவனை பற்றிய பல வருடத்திற்கு முந்தைய ரகசியத்தை உடைக்கிறேன். இவனுடைய இயற்பெயர் வீரப்பன் . அப்போதெல்லாம் அந்தப் பெயர் மிகப் பிரபலம்.  ஏழாம் வகுப்பு வாக்கில் திடீரென பெயரை மாற்றி சித்தார்த்தாக மாறிவிட்டான்.  பள்ளிக்காலம் முடியும் வரை இவனுடைய பாட்டிக்கு சற்றே பயப்படுவான் . அம்மா கலகலப்பாக பழகுவார்கள் , அவனுடைய அப்பா மிகவும் அமைதியானவர்.  எனக்கு தெரிந்து கடல்சார் தொழிநுட்பக்கல்வி கல்வி பயின்ற முதல் நண்பன். 

சற்றே வேகம் கட்டி நடந்தால், குறுக்கே ஒரு ரோடு இருக்கும். ஆம் அதுவும் எங்கள் பள்ளிக்கு செல்வது தான் . எங்கள் பள்ளியின் ராமர் கோவில் கேட். இங்கே மோட்டார் வாகனங்களில் வருவோர் அனுமதிக்கப்படுவர். திரும்பினால்  ராமர் கோவில். ராமர் கோவிலுக்கென தனி பதிவு எழுதப் போகிறேன்.
அப்படியே கோவில் வழியாக கிருஷ்ணாரோட்டுக்குள் வந்தால் என் பள்ளியில் ஒரு வருடம் இளையவன் ஸ்ரீனியின் வீடு இருந்தது . முகனை வீடு இது. இதுவும் எங்களின் கிரிக்கெட் விளையாட்டுக்கான முக்கியமான பிட்ச்.  என் வயதைவிட ஒரு வயது இளையவர்களான கார்த்தி, பாலாஜி, அரவிந்த், எஸ்வி, மகேஷ் ஆகியோருடன் இங்க பல வருடங்கள் விளையாடிஇருக்கிறேன். ஸ்ரீனி பற்றி
கண்டிப்பா ஒரு இரண்டு வரிகளாவது எழுதவேண்டும் . மிகவும் சாமர்த்தியமான இவனுக்கு இளம் வயதிலேயே இறைவன் பெரிய இழப்பை கொடுத்தார். அதனை மீறி இன்று அவனும் அவன் குட்டி தம்பியும் கலக்குவது பெரிய விஷயம். அவன் அம்மா சற்றே தொலைதூரத்தில் தினமும் வேலைக்கு போய் வந்த  சமயமென்பதால்  வீடு வேலைகள், பள்ளி படிப்பு, தம்பியை பார்த்துக்கொளவது என பல சுமைகளை கடந்து இன்று வெற்றிகரமாக இருப்பான் என நினைக்கிறேன். பேசி பலவருடங்கள்  ஆகிவிட்டது. அவன் வீடு வாசலில் நாங்கள் விளைய்டினாலும் வெளியே அளவான நேரம் மட்டும் விளைய்டிவிட்டு உள்ளெ சென்ற மனக்கட்டுப்பாடு கொண்டவன். இவர்களில் அரவிந்தன்  என்னோடு சிங்கையில் தங்கியிருந்தான் . கார்த்தி, மகேஷ் ஆகியோர் என் கல்லூரி  தான்.

அந்த சாலையில் இன்னும் இரண்டொரு வீட்டினை மட்டும் குறிப்பிட்டு முடித்து விடுகிறேன். வளைய ஆரம்பிக்குமாடுத்த முகனை வீடு மகாதேவன் சார் வீடு . டிவிஎஸ் பள்ளியில் கணிதத்துறையில் தலைமை வகித்தார். 200க்கு 135 என் மதிப்பெண் . எனக்கும் கணிதத்துக்குமான நெருக்கத்தை நீங்களே ஊகித்துக்கொள்ளுங்கள். இவரின் கரங்கள் என் இளசான காதுகளை பதம் பார்த்திருக்கின்றன. மிகவும் கண்டிப்பானவர் அளவான மாணவர்களுக்கு மட்டும் வெளிப்பயிற்சி வகுப்புகள் எடுத்தார் . எப்படி எனக்கும் நண்பன் ஹரிக்கும் சேர்த்துக்கொண்டார் என இன்று வரை தெரியவில்லை. கண்டிப்பாக என்  அம்மாவின் முகத்திற்காக தான் இருக்கும் . எல்லா கணித கணக்குகளும் எளிமையாக முடிக்க சொல்லிக்கொடுப்பதாக ஊரார் சொல்லிக் கேள்வி. என் கணித அறிவு அவ்வளவே.  மெல்லியதாக கரை உடைய ஒரு வெள்ளை வெட்டியம் வெள்ளை பணியனோடு பலமுறை இவரை பார்த்திருக்கிறேன்.

அந்த சாலையின் கடைசி வீடு லட்சுமி நரசிம்மண் தாத்தா வீடு . அப்படியே சாலை திரும்பி ராஜம் ரோட்டில் கலந்து விடும். என் பள்ளியின் வேறு வகுப்பில் இவரை பேதி அபிநயா படித்தார்.  ஸ்ரீனி வீட்டுக்கும் , அபிநயா  வீட்டுக்கும் நடுவே அழகா கோணலாக இடது தான எங்கள் ராமர் கோவில் விளையாட்டு திடல். பல வருடங்களாக எதேதோவ் வருமென கடைசியில் உருப்படியாக ஒரு பூங்கா வந்திருக்கிறது. எங்களின் லட்சம் சொட்டு வியர்வைகள் இந்த பூங்காவின் மண்ணுக்குள் இந்த வருசங்களுக்கு உயிர் கொடுத்திருக்கின்றன.

இவர்களை தவிர குட்டி கார்த்தி சூப்பராக கால்பந்து ஆடுவான், அவன் அன்னான் சற்றே அடாவடி.

நினைத்து பார்த்து எழுதும் பொது ஒவ்வொருவரின் வீட்டுக்கும் சென்று வந்த மாதிரி இருக்கின்றது. சிறிய சாலைக்கே இத்தனை நினைவுகளென்றால் மற்றவையெல்லாம் மிகப்பெரிய சாலைகள்.


- தொடரும்