Saturday, October 20, 2018

மார்க்கெட் தாத்தாவின் பெட்டிக்கடை.

மார்க்கெட் பெட்டிக்கடை

பணத்தின் மீது எப்போதும் ஆசை உண்டு . பேருந்து , மகிழுந்து , ரயில் , மொபெட் , சைக்கிள் , விமானம்  வரை பயணித்துவிட்ட போதிலும், பள்ளிக்காலங்களில் மதுரை ஜெய்ஹிந்த்புரத்திரிலிருந்து  , டிவிஎஸ் நகருக்கு தினம் 2கிலோமீட்டர் நடைப்பயணத்தின் நினைவுகள் திடீரென மனதுக்குள் திரைவிரித்து ஆடுகின்றன. மதியம் 12.45மணிக்கு தொடங்கும் மதிய ஷிப்ட்டில் படித்த படியால் சுமார் 11மணிக்கு நானும் என்ன அம்மாவும் நடைப்பயணத்தை தொடங்குவோம். பராசக்தி குறுக்குத்தெருவிலிருந்து வெளியே வந்து , ராமைய்யா தெருவின் வழியே வந்தால் , மருதுபாண்டியர் சிலைகள் நிற்கும்  ஜெயஹிந்த்புரம் முக்கிய சாலையை அடைவோம். 90களில் அது  ஒரு வழிச்சாலை தான் , இன்று விரிவுபடுத்தப்பட்டு பிரதான சாலையாக காட்சியளிக்கலாம் . 19 B, ஒரே ஒரு பேருந்து மட்டுமே அந்த சாலையில் வரும். வில்லாபுரம் குடியிருப்பு முதல் அண்ணா நகர் வரை செல்லும் அந்த பேருந்தின் அட்டவணை அதன் ஓட்டுனரை தவிர யாரும் அறிந்ததில்லை. 

அந்த மருது பாண்டியர் சிலைகளின் இடப்புறம் திரும்பி ஜீவா நகர் , ஜெய்ஹிந்த்புரம் மார்க்கெட் , வாய்க்கால் , பொன்மாரி நகர் வழியே  டிவிஎஸ் நகர் வருவது தான் எங்களின் பாதை. மருது சகோதரர்களின் இடப்புறம் முத்துமாரியம்மன் கோவில் , வலப்புறம் வீரகாளியம்மன் கோவில் இருக்கும் . இந்த பகுதி முழுவதும் நிறைய குட்டிக்குட்டி கோவில்கள் அமைந்திருக்கும். ஒருமுறை என்னுடைய கால்கள் மரத்துபோய் நடக்க முடியாமல் இருக்கையில் வீரகாளியம்மன் கோவிலின் விபூதி குங்குமமும்  ,முத்துமாரியின் வேப்பிலை நீரும் தான் என்னை குணமாக்கியதாக செய்தி . முத்துமாரியம்மன் கோவிலின்  பூசாரி வயதானவர் , அமைதியானவர் . ஆனால் அந்த கோவிலில் நான் பெரும்பாலும் நின்றதில்லை. அவர் கொடுக்கும் வேப்பிலை நீரின் கசப்பு , என்னை சாலையின்  மறுபுறமாகவே நடக்கவைத்திருந்தது. பலநேரங்களில் அந்த கோவிலை கடக்க வேண்டாமே என ராமையா தெரிவிலிருந்து புலிப்பாண்டியன்(ராம்கி உங்கள் தெரு ) தெருவழியாக மெயின் ரோட்டுக்கு வந்துவிடுவேன்.

நேராக முக்கிய சாலை வழியாக வந்தால் , வீட்டுக்கும் பள்ளிக்கும் நடுமத்தியமாக ஜீவா நகர் பேருந்து நிறுத்தம் . எனக்கு மிகவும் பிடித்த நான்குமுனை சந்திப்பு இது . ஒரு புறம் செர்ரிப்பழம் உதிர்த்த தில்பாசந்த்  கிடைக்கும்  அமுதம் அடுமனை, மறுபுறம் நாவூறும் அருண் ஐஸ்கிரீம் ஹரன் ஐஸ் கடை , இன்னொரு முனையில் கரும்புச்சாறு , பழக்கடைகள் என நாவுக்கு தீனியோ இல்லையோ மனதுக்கு மிகசுவையாக இருக்கும். இவையெல்லாமே பத்து ரூபாய்க்கு மேலான சமாச்சாரங்கள். கண்ணுக்கும் மனதுக்கும் இனிப்பானவை. இங்கிருந்து  9B , 9C என வேறு வழியாக டிவிஎஸ் பள்ளியை கடந்து செல்லும் பேருந்துகள் கிடைக்கும்.

இதனை கடந்து ஐநூறு அடி தூரத்தில்  ஜெய்ஹிந்த்புரம் மார்க்கெட்.  வலப்புறம் காய்கறி சந்தையும் , இடப்புறம்  மீன் சந்தையும் முதலில் இருந்தது . பின்னர் அங்கே ஒரு சுகாதார பூங்கா அமைத்ததால் காய் சந்தையும் கறிச்சந்தையும் ஒன்றாக குடியேறிவிட்டன. சந்தையின் அருகாமையில் அவனியாபுரத்து ஏரி நீர் வாய்க்காலாய் ஓடிக்கொண்டிருக்கும். சந்தையின் அருகே நீர்த்தேக்கம் என்றால் அந்த நீரின் நிலையை நாம் அறிந்துகொள்ளலாம்.
அந்த கலங்கிய நீரோடையின் முட்டுச்சந்தில் தான் மிகப்பெரிய ஆலமரம் நிழல் கொடுத்துக்கொண்டிருக்கும்  .

சாலை வளைந்து டிவிஎஸ் நகர் பக்கமும் , நேராக பழங்காநத்தம் பக்கமும் பிரியும் அந்த சந்திப்பில் ஒரு புறம் மார்க்கெட் , மறுபுறம் நீரோடை , ஆலமர நிழல் சூழ அமைந்திருந்தது அந்த தாத்தாவின் பெட்டிக்கடை.

ஐந்து பைசா புளிப்பு மிட்டாய் , ஐந்து பைசாவுக்கு ஒரு பாக்குமிட்டாய் ,  ஐந்து பைசாவுக்கு ஒரு சூடமிட்டாய் ,   காலணாவுக்கு ஒரு தேன்மிட்டாய் , காலணாவுக்கு ஒரு கடலைமிட்டாய் , காலணாவுக்கு ஒரு கொக்கோமிட்டாய்,    காலணாவுக்கு ஒரு கம்மர்கட்டு இதெல்லாம் சாதாரண தீனிகள்.  ஐந்து  பைசாவுக்கு ஒரு கலர் பப்படம் தான்  அதிகமாக விற்றுத்தீரும். கம்மியான விலையில் இருக்கும் பொருட்களை விட விலையுயர்ந்த அந்த லாலிபாப் தான் எனக்கு பிடித்த பண்டம்.

அது சாதாரண லாலிபாப்பில்லை . எத்தனை நிறங்கள் மொத்தமுள்ளனவோ அத்தனை நிறத்திலும் அங்கு லாலிபாப் கிடைக்கும்.  அந்த லாலிப்பாப்புகளை பிரித்து உடனே தின்று விடமுடியாது. அந்த மிட்டாய் பாகத்தை சுற்றி நகலான ருபாய் நோட்டுகள் ஒட்டப்பட்டிருக்கும். அப்படி ரூபாய்நோட்டுகளை மெல்ல கிழியாமல் முதலில் பிரிக்கவேண்டும். பிரித்த பின்னர் அதன் காகித ரூபாயின் பின்னால் இருக்கும் ஆயிரத்தில் ஒரு பங்கு சுவையை நாவின் சுவைஅரும்புகளுக்கு முதல் படையல் வைக்கவேண்டும்.

அதன் பின்னர் அந்த எச்சில் பட்ட காகித ருபாயை அரை ட்ராயரின்  உள்பக்கத்துணியில் துடைக்கவேண்டும். பின்னர் அது  பத்திரப்படுத்தப்பட்டு நட்ராஜ் ஜாமெட்ரி பெட்டிக்குள் செல்ல வேண்டும் . நக்கிய நாவின் ஈரம் விரல்களில் காயும் முன் இத்தனையும் முடிக்கப்பட்டு , லாலிபாப் நம் உள்நாக்கில் மணிஅடித்திருக்கும் . பல்துலக்க கற்றுக்கொடுக்கப்பட்ட அத்தனை வழிமுறையும் கடைபிடிக்கப் படவேண்டும். தொடர்ந்து நக்காமல் நடுவில் சிறிது நேரம் லாலிபாப் வாய்க்குள்ளே மாயணப்படுத்தப்படவேணும் . அப்போது சுரக்கும் தித்திப்பான எச்சில் மேல்நாக்கால் சுழற்றப்பட்டு , கீழ்வழிய ஓடி முழு வாயும் தித்திப்பாக்கப்பட்டவுடன்  முழுங்கப்படவேண்டும்.

இத்தனை சுகங்களையும் ஒரு சிறுவன் நடந்துகொண்டே பள்ளிநோக்கி செல்கையில் அனுபவிக்க நேரமில்லாமல்  ஏற்பட்ட கொடுமை யாருக்கும் நேர்ந்துவிடக்கூடாது. லாலிபாப்புகளின் ருபாய்கள்  என் கண்டக்டர் விளையாட்டுக்கு உபயோகமானதாக இருந்தன. சில்லறை கொடுத்து லாலிபாப் வாங்கி அதில் ருபாய் சம்பாதித்த சுகமே அலாதி.

ஆயிரம் , ஐநூறு ரூபாய்கள் அப்போது இருந்ததே தெரியாத காலம். வெறும் பத்து ரூபாய்க்கு எத்தனையோ மதிப்பிருந்தது. லாலிபாப்புகள் எனக்கு பலநூறு ரூபாய்கள் பரிசாக கொடுத்தன. மூன்று ஆண்டுகளில் பள்ளியின் அருகில் இடம்பெயர்ந்தபிறகும் சனி ஞாயிறுகளில் அங்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்தேன். திடீரென ஒரு நாள் தாத்தாவின் கடை மூடப்பட்டுவிட்டது . அவருக்கு அன்றே தெரிந்திருக்கிறது மதிப்பில்லா நோட்டுகளை நாம் விற்றுவிட்டு  கிளம்பிவிடலாம் , மதியிலா இவர்கள் அதனோடு பாடுபடட்டும் என்று.