Monday, February 22, 2016

என் திருமண நிச்சயமும், என்னுள் பித்தனும்

காலை ஆறு மணி இருக்கும் . சென்னை சொகுசுப் பேருந்து திருச்சி  நொ.1 டோல்கேட்டில் என்னை இறக்கி விட்டுச்சென்றது. சாலையை கடந்து முசிறி செல்லும் பேருந்துங்கள் நிற்கும் திசையில் வந்து நின்றேன் . நானும் என் சுமைகளும் கையில் இருக்க, பயணத்தின் போது என் அன்புத்தங்கை குடுத்த கவிக்கோவின் பித்தன் என்னுள் ஓடிக்கொண்டிருந்தான் .

சர்ர்சர்ர்சர்ர் என்று டிக்கெட் டெப்போவில் அழுக்கான இளநீல சொக்காய் போட்ட அரசு போக்குவரத்துத் துறை அதிகாரி பெருக்கிக் கொண்டிருந்தார் .

'சமயபுரத்துக்காரி என் பக்கம் பாருமம்மா , மனச் சலனமெல்லாம் நீயே போக்குமம்மா ' என டீக்கடையில் ஒலிப்பெருக்கி கத்திக் கொண்டிருந்தது. வாய்க்கொப்பளிக்கவில்லை , ஊருக்கு போகும் பேருந்து வந்து விட்டால் என்ன செய்வதென்று அந்த இளம்குளிர் காலைவேளைத் தேநீரை தவிர்த்துவிட்டேன் .

தன்டன டண்டன டனன டைன் என மிரட்டலான ஹார்ன் சத்தம் கேட்டு திரும்புவதற்குள் அந்த தனியார் பேருந்து வந்து நின்றது . ராக்கு முத்து ராக்கு புது ராக்கொடியை சூட்டு என எஸ்ப்பிபி தொண்டைகிழிய வாலிபக்  கவிஞரின் வரிகளுக்கு குரல் கொடுத்தது டீக்கடைக்காரனை முகம் சுழிக்க வைத்தது.

"ஆரோகணத்தில் அல்ல அவரோகணத்தில் தான் ஸ்வரங்கள் கூட்டை அடைகின்றன " இசையை அசைபோடுகிறான் பித்தன் .

  "முசிறி, தொட்டியம் நாமக்கல் சேலம்" " முசிறி, தொட்டியம் நாமக்கல் சேலம் " நடத்துனரின் கையாள் கத்திக்கொண்டிருந்தான் . அண்ணா ,'கிளியநல்லூர் நிக்குமா'. எட்டுரூவா சில்லரையா இருந்தா ஏறு . சரி எனக் கூறி கடைசி இருக்கையில் அமர்ந்தேன்.

பித்தன் கூறுகிறான் ,'புறப்படுதல் அல்ல , திரும்புதல்  தான் பயணம் . வெளியே புறப்படுதல் அல்ல, வெளியிலிருந்து புறப்படுதல் தான் பயணம் .

தனியார் ஊர்திகளுக்கே உரித்தான அந்த வேகத்துடன் உத்தமர்கோவில் பாலம் கடக்கும் போது , கரம்பனூர் கோபுரம் நோக்கி கை கூப்பினேன் . மும்மூர்த்திகளும் முகம் திருப்பி வேறு திசைநோக்கி இருந்தனர் .

பதினைந்து நிமிடத்தில் அந்த 15 கிலோமீட்டர் கடந்து என்னை குப்பையை போல் வெளியே தூக்கிப்போட்டு நொடிப்பொழுதில் பறந்துசென்றது  பேருந்து .

நெஞ்சுக்குள்ளே இன்னாரெண்டு சொன்னா புரியுமா என்ற குரல் காற்றோடு கலந்து காத்தையனின் குளம்பிக்கடையில்  கீதமாய் ஒலித்துக் கொண்டிருந்தது .

'யாரு அன்னூரணியம்மா பேரனா யா . வா உங்க வீட்டுல கல்யாண விசேஷம்னு  சொன்னாக .

என்னுள் பித்தனோ  - 'தொட்டிலிலிருந்து புறப்படுகிறவன் பாடையை அடைகிறான் .நீங்கள் பாடையில் இருந்து புறப்படுங்கள் .  '

டேய் காளை . காளை . அக்ரஹாரத்துல ஆறாம் வீட்டு பின்னாடி போய் தம்பிக்கு சவரம் பண்ணி விட்டு வாயா ' என்று மூக்காயி கெழவி  அந்த பிடாரி கோவில் திட்டிலிருந்தபடி கத்தினாள் .

இந்த பிடாரி அம்மன் எங்கள் ஊர்க்காவல் தெய்வம் , மிகவும் சக்தி வாய்ந்தவள். எங்கள் கிராமதுக்கும் , திருச்சி-நாமக்கல் மாநில நெடுஞ்சாலைக்கும் குறுக்கே இவள் குடி இருக்கிறாள் . இரட்டை வழிச்சாலை இவள் வீட்டினை சுற்றித்தான் செல்லும். பல வருடம் முன்பு ஒரு முறை சாலை விரிவாக்கம் செய்ய வந்த அதிகாரி,' நடுரோட்டுல என்ன குதுர பொம்மையும் அம்மன் கோவிலுமென்று' இடிக்கச் சொல்ல, வண்டியை விட்டு அவன் வீட்டுக்கு வெறும் சவமாக சென்றதகாவும் செய்திகள் ஊருக்குள் உலாவியதை நினைத்துக்கொண்டேன்.

'உங்கள் பயணம் சப்தத்திலிருந்து மௌனத்திற்குச் செல்லும் இசையைப் போல் இருக்கட்டும் ' எனும் பித்தனின் புலம்பல் என் செவிகளில் .

எதிரே காளை ,'போயிட்டுருங்க தம்பி , பத்து நிமிஷத்துல கொல்லைக்கு வந்துடறேன் பொட்டியோட' என்று கோவிலின் பின் புறம் சென்றான் . என் தாத்தா காலத்தில்  ஊருக்குள் முடிதிருத்த குஞ்சப்பன் தான் வருவார் . அவர் இறந்தபிறகு அவரின் மகன் காளை குடும்பத்தொழிலை செய்து வருகிறான். எல்லோர் வீட்டுக் கொல்லைகளும் சவரகிடங்காகும் எங்கள் ஊரினில் .    

சாலையைக்  கடந்து தோப்புவழியாக ஆக்ராஹரத்துக்கு சென்றுகொண்டிருந்தேன் . இடக்கை பக்கம் பார்த்தால் தென்னை கூட்டுக் குடும்பமாக கால் மையிலுக்கு அப்பால் தெரியும் கோவில் வரை வளர்ந்திருந்தது . பாதி தூரத்தில் தான் கவனித்தேன் , தலைக்கவசம் அணியும் இந்த கால இளைஞர்களின் உச்சந்தலை வழுக்கையை போல் எங்கள் தோப்பு மட்டும் வழுமுண்டிருந்தது . கண்டிப்பாய் கடந்த மூன்று மாதத்தில் வீட்டுப் பெருசின் கைச்செலவுக்கு அது பலியாகிருப்பதை உணர்ந்தேன் .

 பித்தன் சிரித்துக்கொண்டே 'நீங்கள் உங்களை பொறுக்க வேண்டியிருக்க , நீங்கள் தேங்காயை பொறுக்கிக் கொண்டிருக்கிறீர்கள் ' என்றான் .

எங்கள் ஊரு மூன்றாக கூறு போடப்பட்டிருக்கும் . மேற்கே வரதராஜ பெருமாள் கோவில் தொடங்கி பள்ளிக்கூடம் வரை அக்ரஹரம் , அங்கிருந்து அடுத்த ஐம்பது வீடுகள் குடித்தெருவும் கடைசியில் பள்ளத்தெருவும் இருக்கின்றது . சுதந்திர இந்தியாவுக்கு முன் வகுக்கப்பட்டவை இவை . ஆனால் இன்றைய நாளில் அனைவரும் ஒன்றாகவே பழகுகின்றனர்.

''எங்கே இருக்கிறது நிகழ்காலம் ? இருக்கிறேன் என்று  போதே ஒவ்வோர் எழுத்தையும் இறந்தகாலம் விழுங்கிக்கொண்டிருப்பதை பார். காலம் என்பதே ஒரு போலிக்கணக்கு. அதில் நிகழ்காலம் ஒரு போலித் தொகை  '' பித்தனின் காலங்கள் இது .

வீட்டின் வாசலில் வாழைத்தார் கட்டிகொண்டிருந்த எங்கள் குத்தகையாளன் மனோகர் பல்லெல்லாம் வாயாக என்னை வரவேற்றான் .

வீட்டுத் திண்ணையில் காலணிகளை கழற்றி , அருகிலிருந்த காவரி குழாயில் கைகால்களை கழுவி வீட்டினுள் நுழைந்தேன்.

புன்னகைத்தபடி உறவுகள் போலிச்சித்திரங்களெனப் பித்தன் கூற.  அவனிடமே அவன் கருத்தை கூறினேன் , 'உங்கள் விருப்பும் வெறுப்பும் நீதிபதிகளாக இருக்கின்றன .  அதுவே சந்தர்ப்பமும் சாட்சியங்களாய் இருக்கின்றன. காலம்  மாறும் போது உங்கள் தீர்ப்பும் மாறிவிடுகிறது . அந்த விதிகளுக்கு இசைந்து நடப்பவன் பத்திரமாக இருக்கிறான் மீறுகிறவன் விபத்துக்கு  உள்ளாகிறான் "

- (தொடரும்)

Thursday, February 4, 2016

கருடா கருடா பூப்போடு

உச்சி வெயில் மண்டையை பிளந்துகொண்டிருக்கையில் திடீரென சாலையில் ஒவ்வொருத்தரும் மேலே பார்த்துப் பார்த்து  சென்றனர் . என்ன தான் இருக்கென மாத்யாநிக சூர்யமுத்ரையிலே பார்த்தேன் . வட்டமடித்து கொண்டிருந்தான் கருடன்.

கொளுத்தும் வெயிலிலே  பெருமாளை எங்கோ  இறக்கிவிட்டு வந்து வட்டமடிக்கிறான் பார் என கேலிபேசும் குரல் ஓர் ஓரமாய் என் செவிகளில் உரசியது . யார் இந்த கருடன்  ? இது கழுகா  ? யார் இந்த நித்யசூரி ?

இலங்கையில் கட்டுண்ட அவதார புருஷர்களின் காவலனா? குளத்தினில் கடியுண்ட  வேழத்திணை காப்பாற்றிய மூலப்பெரும்பொருள் சாரதியா ? கிரேக்க-ரோமானிய வரலாற்று அஃகிலாவா ?

எதுவும் இல்லை அதும் வெறும் செம்பருந்து . ரக்கைகளுக்கு தங்கமுலாம் பூசி, மனிதமுகம் கொடுத்து , முதுகினில் கடவுளை ஏற்றிய ஆரியர்கள் கலைநயத்தின் வெளிப்பாடு என யாருடைய உளறல் சத்தமோ  இப்போது கேட்கிறது .

கண்டிப்பாய் இல்லை . கருட மந்திரம் சொல்லும்  ஸ்வர்ணபட்சியாய் இருந்திருக்கலாம் . அதானால் தானோ என்னவோ டோடோக்களை போல் , இமாலய காடைகளைப் போல் இன்று அழிந்தேபோயின . ஒரு விதத்தில் நல்லது தான் , அப்படி அவை இருந்தால் செயற்கையாய்  இனசேர்க்கையில் கவரிங் ரக்கைகளுடன் கருடன் ப்ராய்லர்களில் தொங்கிக்கொண்டிருக்கும் .

வெறும் ஆரியக் கட்டுகதைகளாய் இருப்பின் எப்படி சாவகமும், கடாரமும் இதன் வரலாறு கூறுகின்றன. முதலில் கடல் கடந்து படையெடுத்து போனதும்,வென்றதும்  நம் திராவிட மன்னர்கள் ஆயிற்றே.

அடிச்சு விடுறதுல ஆரியன அடிச்சுக்க முடியுமா என ஒரு குரல் வேறொரு மூலையில் .

கட்டிப் போட்டால் குட்டி போடும் என்றழைக்கப்படும் ஒரு வகைக் கிழங்கு.  கயிற்றில் கட்டித் தொங்கவிட்டால், காற்றில் உள்ள ஈரக் காற்றை உறிஞ்சிக் கொண்டே கொடி வீசித் தளிர்க்கும்.இது வெகு சீக்கிரம் தழைத்து வளர்ந்தால் வீடு சுபிட்சமாக இருக்கும்.இந்தக் கிழங்கு ஒரு கருடனுக்குச் சமம்.அதாவது கருடன் வந்தால் அந்த இடத்தில் எந்த விஷ ஜந்துக்களும் அணுகாது.அப்படி வந்தால் அவற்றின் விடம் பங்கப்படும். அதனால் தான் இது ஆகாச கருடன் கிழங்கு.

நம்ம ஊர் சித்தர்கள் ஏன் தேடிப்பிடிச்சு கருடன் பேரை வெச்சாங்களோ தெரியல ?

சாவகத்து மன்னன் எர்லங்கன் காலச் சிற்பங்களில் விஷ்ணுவை சுமக்கும் கருடனை காணமுடிகிறது . இந்தப் பறவைக்கு என்ன கொழுப்பிருந்தால் மங்கோலியத்  தலைநகர்வரை பறந்து போய் சின்னமாக அமர்ந்திருக்கும் அறிவு , வீரம், விசுவாசம் மற்றும் நல்லொழுக்கத்தின் அடையாளமாக இந்தோனேசியா, தாய்லாந்து கருடனை தங்கள் நாட்டின் சின்னமாக அறிவித்துள்ளது.

புத்தம் பேசும் மகாசமயசுதத்தில் அழகிய சிறகுகள் கொண்ட சுபர்ணனுக்கும் நாகங்களுக்கும் சமாதனம் பேசும் காட்சிகள் இருக்கின்றன.வினதைச்  சிறுவன் பாவம் நாம் தான் கண்டுகொள்ளவில்லை .

அதெல்லாம் சரி , மொழுமொழுன்னு வழிச்சு சவரம் செஞ்சி மந்திரம் சொல்றவங்களோட  சாமிய என் மீசைக்கார கருடன் தூக்குறான் ? என்ற குரலுக்கு ஒரு பதில் குரல், 'அடப்பாவி , பின்னால பார்த்தாவ நீ பாக்கலியா முறுக்குமீசையோட !  நீ எங்க பாக்க போற உனக்கு தெரிஞ்ச ஒரே மந்திரம் 'கருடா கருடா பூப் போடு' .உனக்கெல்லாம் கருடபுராணம் படி அசிபத்ரம் தான் போ '.

நாளைக்கு காளை சாணம் போடும் போது மீண்டும் யோசிக்கலாம் என வீடு வந்து சேர்ந்தேன் .

Wednesday, February 3, 2016

கண்களால் கைது செய் ..


வேகமாக ஓடிச் சென்று ஒருவழியாக இரயில்  இருக்கையில் அமர்ந்தேன்.  எதிரில் அந்த இளைஞனின் பார்வையில் ஏதோ தவறு இருந்தது.


பல நூறு வருடங்களுக்கு முன்னர் .திண்ணனார் எனும் ஒரு சிவபக்தரின் மேன்மையை பார் அறியவைக்க, அவர்  வரும் வேளையில் சிவலிங்கத்தி்ன் வலக்கண்ணில் குருதி வருமாறு செய்தார் பெருமான். அதைக் வருவதைக் கண்ட திண்ணனார், பச்சிலை இட்டு மருத்துவம் பார்த்தார். அதன்பொழுதும் அடங்காத குருதியினை நிறுத்த, தன் கண்களில் ஒன்றினை அம்பினால் அகழ்ந்து இலிங்கத்தின் கண்ணிருக்கும் இடத்தில் இட்டார். இலிங்கத்தின் வலக்கண்ணில் வரும் குருதி நின்று, இடக்கண்ணில் குருதி வழியத்தொடங்கியது, திண்ணனார் தனது இடக்கண்ணையும் அகழ்ந்தெடுக்க திட்டமிட்டு, லிங்கத்தின் இடக்கண் இருக்கும் இடத்தினை தன்காலொன்றால் அடையாளம் செய்தார். பின் இடக்கண்ணை அகழ்ந்தெடுக்க எத்தனித்தபொழுது சிவபெருமான் நில்லு கண்ணப்ப என மும்முறை கூறி தடுத்தருளினார். அவர் கண்ணப்பநாயனார் என போற்றப்பட வேண்டி  கண்களால் திருவிளையாடல் நிறைவேற்றினார் ஈசன் .

அது போன்றே இராமானுசரின் காலத்தினில் சைவ வைணவ போர் தமிழ் தேசமெங்கும் பரவலாக இருந்த சமயம், இச்சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது . ராமாநுஜரின் ஞானம், வைராக்யம், அநுஷ்டானம், செல்வாக்கு ஆகியவற்றை பொறுக்காத சோழ மன்னன் ஒருவன் ‘சிவன் தான் பரதெய்வம். சிவனுக்கு மிஞ்சிய உயர்ந்த தெய்வம் கிடையாது என்ற நிலையை வைஷ்ணவர்கள் அனை வரும் ஏற்க வேண்டும்” என்று கட்டளையிட்டான். வைஷ்ணவர்களின் தலைவராக கருதப்பட்ட ராமாநுஜர் சோழன் அரசவைக்கு வந்து அரசனின் கட்டளைக்கு ஆட்படவேண்டும். இப்படி ஒரு இக்கட்டான நிலையிலிருந்து ராமாநுஜர் மீளவேண்டும் என்ற நோக்கத் தோடு கூரத்தாழ்வான், பெரிய நம்பி சகிதம் ராமாநுஜர் போல் துறவி வேடம் பூண்டு சோழன் அரசவைக்கு சென்றார். சிவனை விட துரோணம் என்ற அளவு பெரியது என்று கூறி அரசனின் சீற்றத்திற்கு ஆளாக கூரத்தாழ்வாரின் கண்கள் பறிக்கப்பட்டன.

ஆண்டவனுக்காக கண்களை அர்ப்பணித்தவர்களும் , தன் குருவுக்காகவும் சமய பரிபாலனம் செய்யவும் கண்கள் இழந்த வரலாறுகள் காண்கிறோம் .

   கோணன் மாமதி சூடியோர் கோவணம்
நாணில் வாழ்க்கை நயந்தும் பயனிலை
பாணில் வீணை பயின்றவன் வீரட்டம்
காணி லல்லதென் கண்துயில் கொள்ளுமே

சிவபெருமான் உறையும் திருவதிகை வீரட்டத்தைக் கண்டு தொழுதபின்னல்லது என் கண்கள் உறக்கம் கொள்ளுமோ? என தேவாரத்திருமுறையும்

கொண்டல் வண்ணனை கோவலனாய் வெண்ணெய்
உண்டவாயன் என் உள்ளம் கவர்ந்தானை
அண்டர்கோன் அணி அரங்கன் என் அமுதினை
கண்ட கண்கள் மற்றொன்றினை காணாதே..

என ஆழ்வார் அரங்கனின் அழகினை தவிர வேறொன்று காணவேண்டா என கூறியதும் நினைவுக்கு வந்தது.

இவையெல்லாம் கண்டிப்பாய் நம் இளைய தலைமுறையினருக்கு தெரிய வேண்டும் . நம் சினிமாக் கவிஞர்களின் வார்த்தைகளை நம்பி நீர்வீழ்ச்சி தேடும் முலைக்குவடுகளிலிருந்து அந்த வெறித்து பார்த்த கண்களை பிடுங்கினாலும் தவறில்லை.

#இரயில்பாடங்கள்