Friday, September 23, 2016

சைத்தான்

சமீப காலமாக கற்பனைத்திறனும் கலைத்திறனும் திரையுலகில் இருப்போருக்கு குறைவாக இருப்பதாலோ , எங்கிருந்து எதைத் திருடுவது என்று அறியாமல் சகட்டு மேனிக்கு காப்பி அடித்துக் கொண்டிருக்கிறார்கள். சிலர் மறந்து போய் தன்னுடைய பழைய பாட்டின் தாளத்தையே போடுகிறார். மறந்ததே போயும் ஆங்கில , ஜப்பானிய படங்களை தமிழில் எடுத்துவிடுகின்றனர் பாவம் .
சரி, விஷயத்துக்கு வருவோம், இரண்டுநாட்கள் முன்னர் வெளிவந்த விஜய் அன்டனியின் சைத்தான் திரைப்பட ட்ரைலர் வந்தது . அதை பற்றி இப்போது வாட்ஸாப்பில் ஒரு குறும்செய்தி பரவிக்கொண்டிருக்கிறது. அந்த ட்ரைலரின் பின்னணி இசை தைத்திரீய உபநிஷத் ஒலிக்கும் மெட்டில் அமைக்கப்பட்டுள்ளது . போதாக்குறைக்கு என்ன வார்த்தை போடவேண்டும் என தெரியாமல் சைத்தானே என விஷ்ணுவுக்கு பின்னர் அவர் சொருகியிருக்கிறார். இதனால் பரம்பொருளை ஷைத்தானோடு ஒப்பிட்டு மத நம்பிக்கையை கிண்டல் செய்வதாக அந்த பதிவு கூறுகிறது.
கண்டிப்பாக காக்கும் கடவுளையும் , அழிக்கும் சைத்தானையும் ஒன்றாய் கூறுவது தவறு . இதில் இந்து மத நம்பிக்கையாளர்கள் மனம் புண்படலாம் . ஆனால் , இதெல்லாம் உண்மையாகவே நம்மில் பலருக்கு தெரியாது. யாரோ உண்மையாகவே மனம்புண்பட்ட ஒருவர் புலம்பியதை , நாமும் எல்லோருடனும் பகிர்கிறோம் . இவர் காப்பியடிக்காத இசையே இல்லை . கேட்டுவிட்டு அமைதியாக , ஒரு சராசரி தமிழன் எல்லாப் பிரச்சனைகளிலும் என்ன செய்வானோ அதைப் போல் விலகிச் சென்றுவிடலாம் அல்லது சட்டப்பூர்வமாக இதனை எதிர்கொள்ளலாம் .
திரையுலகம் நம் மதங்களை(இந்து , இஸ்லாம் , கிறித்துவம்) தன் இஷ்டம்போல் தொடர்ந்து சித்தரித்து வருகின்றது. இது போல ஒவ்வொரு படங்களிலும் தன் இஷ்டப்படி செய்கிறது. பிரபல இந்தி நாயகன் நடித்த சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் நாயகியை முன்னூறு படிகளுக்கு தூக்கிச்செல்லவேண்டும் என்று கூறி, தூக்கியும் செல்வார். இல்லாத கற்பனை வழக்கம் நம் சமயத்தை அசிங்கப் படுத்தவில்லையா ? மலை உச்சியில் கிராபிக்ஸில் பெருமாளையும், சந்நிதிக்கு எதிரே மயிலையும் , பட்டை போட்ட குருக்களையும் கட்டியிருப்பார்கள் . இதெல்லாம் உச்ச கட்ட அபத்தம். படம் முழுக்க பெண் வீட்டார் தமிழர் என்பதால் ஆழ்வார்களும் , நாயன்மார்களும் , அண்ணாவும் பெரியாரும் காப்பாற்றிய தமிழை இஷ்டத்துக்கு கொச்சைப் படுத்தியிருப்பார்கள். வலிக்கவில்லையா ?
இப்பாடலில் மனது வருந்தியவர்கள் ஏன் சிலவருடங்கள் முன் மதம் மாறிய யுவன் சங்கர் ராஜாவின் பாடலை பற்றி வருந்தவில்லை ? " கோவிந்தா கோவிந்தா வெங்கட்ரமணா கோவிந்தா பாடலை, தன வசதிக்காக ஓ ஈசா , என் ஈசா என்று மாற்றிக்கொண்டாரே ? ஒருவேளை ஓர் மதத்துக்குள் கடவுள்களை மாற்றியதால் மறந்தோமா ? அதற்கு பின்னர் வரும் ஆங்கில வரிகள் ஆபாசம் இருக்குமே ? அது .
தசாவதாரம் படத்தில் அழகியசிங்கர் தெரியுமா எனக் கேட்கும் காட்சியில் பகுத்தறிவு நாயகன் கிண்டலாக மடோன்னா வா எனக் கேட்பார். கவர்ச்சி நாயகியும் , பரம ஆச்சார்ய ஸ்ரேஷ்டரையும் ஒப்பிடுவது சரியா ? விஸ்வரூபம் படத்தில் குரானை கூறி தீவிரவாதியை அழிக்கும் கட்சிக்கு எவ்வளவு பெரிய சர்ச்சை நடந்தது ? இதுபோல் இந்து வழக்கங்கள் கிண்டல் செய்யப்பட்டால் கண்டிப்பாக நடக்காது .
ஜனநாயக நாட்டில் பெரும்பான்மை மக்களுக்கு எதிராக செய்யப்படும் எதுவும் பெரிதாக எடுத்துக்கொள்ளப் படமாட்டாது என்பது நிதர்சன உண்மை. சாதிகளுக்கு அப்பாற்பட்டு இருந்த முத்தமிழ் அறிஞர் டாக்டர் முன்னாள் முதல்வர் கலைஞரும் கடைசி காலத்தில் ராமாநுச காவியம் படைத்ததை யாரும் மறுக்க இயலாது . சமயங்களை கிண்டல் செய்து பிழைக்கும் ஒரு சாரார் இருந்துகொன்டே தான் இருப்பர். இது போன்ற கேலியும், கிண்டலும், சுரண்டலும் மதங்களை , அதன் மடங்களை வலுப்பெறச்செய்கிறது , அதற்கும் மேல் ஒருதலைமுறை ஆதரவாளர்களை கடந்து அடுத்த தலைமுறை வெறியர்களை தூண்டுகிறது.
மனம் வருந்துவோரை நினைக்கையில், ஒரு உபன்யாசத்தில் கேட்ட கதை நினைவுக்கு வருகிறது. தன் வாழ்நாளில் எந்த ஒரு நல்லகாரியமும் செய்யாமல் இறக்கும் தருவாயில் இருந்த ஒரு தந்தை கூறிய கடைசி வார்த்தை தன் மகனின் பெயர் "நாராயணா". இதனால் பரமாத்மா கிருஷ்ணர் யமதூதர்களை விளக்கி அவனை விஷ்ணுலோகம் அழைத்துச் சென்றாராம்.
எத்தனையோ தடைகளை தாண்டி சனாதன தர்மம் தழைத்தோங்குகிறது. இதுவும் கடந்து செல்லும். இந்த சைத்தானை நாம் மறப்போம் , கடவுள் மன்னிப்பார்

Tuesday, September 20, 2016

மலேசியா -2

நீங்க தண்ணி வாங்கினீங்களா , எவ்ளோ காசு ? என கேட்ட ஓட்டுனரிடம்  ஒரு பாட்டில் 2 ரிங்க்ட் என்றோம் . நான் பெட்ரோல் வாங்கினேன் ஒரு லிட்டர் ஒண்ணே முக்கால் வெள்ளி(1.75). இது தான் இந்த ஊரின் சிறப்பு .கையில காசே இல்ல , அஞ்சு வருஷ தவணைல  ஒரு காடி(கார்) வாங்கி இப்போ உபேர்ல ஓட்டுறோம்.   காசு கொஞ்சம் நல்ல வருது. என்ன சிலசமயம் சவாரியா இருக்கும் , இல்லாட்டி ஏதும் கிடையாது , பெருசா வேற வேல ஏதும் இல்ல என்றும் கூறினார்.  உங்கள மாதிரி தான், காலைல நம்ம ஊர்க்காரர் டேக்சில தான்  ஏறினோம். நீங்க சொல்லுங்க ஒன்றரை கிலோமீட்டர் நீங்க எவ்ளோ கேப்பீங்க னு கேட்டோம். ஆறுபேறு வண்டினா ஒரு ஏழு வெள்ளி ஆகும் என்றார் . அப்போ நாங்க கண்டிப்பா ஏமாந்தோம் என்று கூறினோம் .  காலையில் நாங்கள் சென்ற வண்டிக்காரர் எங்களிடம் 25ரிங்கிட் வாங்கினார், வாங்கினால் பரவாயில்லை நம்ம பசங்க உங்கள்ட கூட ரூபா கேட்பேனா என்றார். வண்டியோட்டும் போது தன் நண்பரிடம் அவர் கூறியது எங்கள் அனைவருக்கும் மணி அடித்தார் போல் நினைவுக்கு வந்தது, அவரின் வார்த்தைகள் ' காலைலேந்து ஒட்டவே இல்ல பா , இப்போ தான் ஆள் கெடச்சிருக்காங்க'. நம்மவர்கள் நம்மவர்கள் தான். இந்த மகேந்திரனுக்கு இருந்த நல்ல மனது அவருக்கு இல்லை என்பதை உணர்ந்தோம்.

சமீபத்திய சினிமாவில் பார்த்தது போன்ற கைதுகளும் இங்கு நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ஞாயிறு காலை, முதல் வேலை அருகில் இருக்கும் சிகை அலங்காரக்கடைக்கு செல்வது என வைத்திருந்தேன். அதே நினைப்பை ஐவரும் வைத்திருந்தனர் போலும், வரிசை கட்டி    
உடன் கிளம்பிவிட்டனர் . ஐநூறு அடி தூரத்திலேயே கடையை முந்தின இரவே குறித்துவைத்ததால் எட்டுமணிக்கே வரிசையாக ஐந்து வாடிக்கையாளர்களை பார்த்து குதூகளித்தார் குமரன். இவரும் புதுக்கோட்டையை சேர்ந்தவர் தான். மலேசியாவில் மொத்தம் பதிமூன்று ஆண்டுகளாக இருக்கிறார். நான்காண்டு முன்னர் அவருடைய தந்தை இறந்தபோது ஒரு முறை ஊருக்கு சென்று வந்தாராம். இல்லறத்தை பற்றி வினவிய போது , சவரக்காரனுக்கு எவன் தருவான் என்ற கவலையை உதிர்த்த தருணமும் , வானொலிப்பெட்டியில் "வா வா நீ வா தோழா , உலகம் ஒருவனுக்காக " என கபாலியின் முழக்கம் வந்தது. நடுவில் அடர்த்தியாகவும் சுற்றி கட்டையாகவும் மயிரை வெட்டிவிட்டு , அடுத்த சுருட்ட மண்டையனை அமரவைத்து தமிழ்நேசன் பத்திரிகையில் ராசிபலன் படித்து வரிக்கு வரி ஒருவரை ஒருவர் கிண்டலடித்துக் கொண்டிரும்தோம். சூடாக அவர் கடுங்காப்பி குடித்ததை பார்த்து கடை கேட்டதற்கு, அவர் கடலுக்கப்பாலும் சாயா ஆத்திக்கொண்டிருந்த  மலையாளத்தான் கடையை  காட்ட  நாங்களும் 5 தேஹ்தரீக் வாங்கிவந்து  அரட்டை தொடர்ந்தோம் , இன்னும் இரண்டு மண்டைகள் சரைக்கவேண்டியிருந்தது.

மூன்றாவது ஆளின் கிருதாவை செதுக்கிக்கொண்டிருக்கையில் ஒரு அலைபேசி அண்ணனுக்கு வந்தது. அண்ணனின் உரையாடல் இதோ ," ஆமாம்னே, மூணு நாளா  காபந்து போலீஸ் நோட்டம் விட்ருக்காங்க . இந்தப்பய சும்மா இல்லாம கடைல இருக்கிற வேலையெல்லாம் செய்றத படம் பிடிச்சருக்காங்க. நேத்து மதியம் மூணு மணி வாக்குல, உள்ள வரவும் அவனுக்கு என்ன செய்ய னு தெரில . சும்மா தான் இருக்கேன்னு சொல்லிருக்கான் , ஆனா படத்தக்காட்டி  கையில  விலங்கு போட்டாக என்றார் . ஆமாம், எனக்கு தெரியாது , இந்த மயிரு மெஷின நோண்டிட்டு இருந்தேன். ஜோஹார்லெந்து கடைக்கு சொந்தக்காரர் என் நம்பர்க்கு அடிச்சாரு , அப்பறம் போய் பார்த்தேன், வண்டி வெளிய இருக்கு ஆனா ஆள தூக்கிட்டாங்க", அழைப்பு துண்டிக்கப்பட்டது . அண்ணன், தூக்கிட்டாங்கணா ? சுட்டுருவாங்களா  ? என்றதற்கு இல்லை , அனுமதியில்லாமல் வேலை செய்ததால் கைது செய்யப்பட்டார் என விளக்கினார். தலைக்கு பத்து வெள்ளி வீதம் ஐம்பது கொடுத்துவிட்டு, வெந்நீர்  குளியல் போட கிளம்பிவிட்டோம்.

#மலேசியா #காடி #சலூன் #வெள்ளி

மலேசியா -1

"என்னப்பா ஊர்காரங்களா" என கையில் தடியை பிடித்துக் கொண்டு எங்களை பார்த்து ஒரு வயதான பாட்டி கேட்டவுடன் , 'ஆமாம் பாட்டி ' என்று பதிலளித்தோம் . மலேசியா பத்துமலை முருகன் கோவில் அருகில் இருந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமை ஆதலால் கூட்டமாக இருந்தது. எந்த ஊருப்பா நீங்கல்லாம் என்றதற்கு சென்னை, மதுரை , திருச்சி , திருநெல்வேலி , கோவை என வரிசையாக கை காட்டிக் கூறினேன் . 'ஏன்பா, எல்லா பெரிய ஊரையும் சொல்லி என்ன கிண்டல் பண்ற என்றார். அய்யயோ அப்டியெல்லம் இல்ல பாட்டி  உண்மைலே அதான் என்றேன் . ஓ ! சரிப்பா . நாங்களும் ஊரு பக்கம்  தான் வந்து ரொம்பகாலம் ஆச்சு . இங்க இப்டி உங்கள மாதிரி ஊர்காரங்களா பாக்கும் நானே போய் பேசிருவேன் என்று சொல்லிக்கொன்டே அன்னதான வரிசையில் அமர்ந்தார். ஏதோ மலேசியா தமிழர்களுடன் பேசுகையில் மனதிற்கு மிகவும் இதமாக இருப்பதை நாங்கள் அனைவருமே உணர்ந்தோம். முருகனை ஒரு முறை கைக்கூப்பி பலமுறை செல்பேசியில் க்ளிக்கியும் எதிரே உள்ள உணவகத்தில் ஏகபோகமாக ஒருவண்டி சிற்றுண்டி சாப்பிட்டிட்டோம். அங்கு உணவு உண்ணும் ஒவ்வொரு நொடியும் மெய்சிலிர்ப்பு . கபாலி நாயகன் தலைவர் அமர்ந்த நாற்காலியை பத்திரப்படுத்தி காட்சிப்பொருள் போல் வைத்திருந்தனர். தலைவர் பேரை சொல்லி ஆளுக்கு ஒரு செட் பூரி அதிகம் உண்டோம் . வெளியே வந்து,  நல்ல பெரும் சொம்பளவு  இளநீர் நான்கு வெள்ளி தான் என்பதால் அதையும் குடித்தோம் . பேசுகையில் அவர் நான் இருந்த புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் சேர்ந்தவர் என அறிந்தேன் . 272 படிகள் ஏறி, இறங்கி  மீண்டும் வந்து உங்களுக்காக வந்து இளநீர் குடிப்பதாகா வாக்களித்து ஏற ஆரம்பித்தோம். அழகான, ஆச்சர்யமான, இயற்கை எழில்  சூழ்ந்த குகைகள் எங்களை சில்லென்ற காற்றோடு வரவேற்றன.  பத்துமலை பற்றி கையடக்கமான புத்தகம் வாங்கி படித்துகொண்டே  கலைக்கூட குகை, அருங்காட்சியகக் குகையென சுற்றி வந்து வாக்கை காப்பாற்றிய தமிழனாய் இலுப்பூர் அண்ணன் கடையில்   மேலும் இளநீர் குடித்தோம், உடனே அவர் நண்பர் ராமநாதபுரத்தாரின் பலாச்சுளைகளையும் பையில் போட்டுக்கொண்டு கிளம்பினோம். ஆஹா , புத்தக கடை. சிறுவயதில் அருகில் இருக்கும் நூலகத்தில் வாடகைக்கு பெரும்பாலும் சுஜாதா , ராஜேஷ்குமார் , ரமணிச்சந்திரன் , இந்திரா சௌந்தர்ராஜன் புத்தகங்கள் எளிதாக கிடைக்கும் . அதே வரிசையில் இங்கும் மிக மலிவான விலையில் புத்தகங்கள் பரப்பி வைக்கப்பட்டிருந்தன. எந்த மேல்சொன்ன எழுத்தாளர்களும் நம்மிடம் கோவப்படக்கூடாது என்பதால் ஒருவருக்கு தலா ஒரு புத்தகம் என வாங்கி ரயில் நோக்கி கிளம்பினேன் . ஏற்கனவே ஜெயமோகனின் விஷ்ணுபுரம் எனும் பெருவெள்ளத்தில் மூழ்கியிருக்கிறேன், இவர்களுக்கு பேசாமல் பேருந்து பயணத்தின் நாற்பது நிமிடம் ஒதுக்கலாம் என மனதுக்குள் முடிவு செய்து ரயிலில் நோக்கி பயணித்தேன் . பல தமிழர்களை சந்திக்க நேர்ந்தது , பேசி பல விஷயங்கள் அறிந்து கொள்ள முடிந்தது. இனி அடிக்கடி வரவேண்டும் என்பதை மனம் முடிவுசெய்து என்னிடம் அறிவுறுத்தியது.  

-- தொடரும்  

#மலேசியா #தமிழ் # நம்மஊறு #நல்ல சோறு  

-- 
Sowmiyanarayanan