Wednesday, July 20, 2016

மழை, புத்தகம், தேநீர்

மழை ஒரு அலாதியான அனுபவம். மழைநேரத் தேநீர், பரவச அனுபவம். மழைநேரத்தில் ஒருகையில் தேநீர் கோப்பை மறுகையில் பிடித்த புத்தகம், பேரானந்தம். இவை மூன்றுக்குமான கனவியலை (Set theory) ஆராயலாமே என தோன்றிற்று. கணம்(Set) என்பது நன்கு வரையறுக்கப்பட்ட பொருட்களின் தொகுப்பாகும். ஒரு கணத்திலுள்ள பொருட்கள் அதன் உறுப்புகள்(Elements) எனப்படுகின்றன.
நீர்நிலைகள், இருண்ட மேகம், வெப்ப சலனம், காற்றுத்தூசி ஆகியவை மழை(A) எனும் கணம் உருவாக உதவும் உறுப்புகள். தூய்மையான தேநீர் துகள்கள், கொதிக்கும் வெந்நீர், ஏலக்காய், பால் ஆகியவை தேநீருக்கான (B) உறுப்புகளாக அமைகின்றன. பிடித்த எழுத்தாளரின் நாவல், சிறுகதை தொகுப்போ, காதல் , அரசியல் , காமம் , போராட்டம் போன்ற உணர்ச்சிகள், கற்பனை, சொல்வளம் போன்ற உறுப்புகள் சேர்ந்த ஒரு கணம் தான் புத்தகம் (C) .
மழை, தேநீர் , புத்தகம் என்பவை A ,B ,C எனும் கணங்களாக எடுத்துக்கொள்வோம். மழை நேர தேநீர் என்பது சேர்ப்பு வகை (A U B). அதே போல் தேநீர் நேரத்தில் கையில் பிடித்த புத்தகமென்பதும் ஒரு சேர்ப்பு (B U C). மழைநேரத்தில் கையில் புத்தகம் என்பது ஒரு தனி சேர்ப்பு (A U C). இவ்வகை தனி சேர்ப்புகளை ஒன்றிப்பு (Union) என கூறுகின்றனர் .
A, B கணங்களின் சேர்ப்பு கணம் என்பது A கணத்திலுள்ள உறுப்புகள், B கணத்திலுள்ள உறுப்புகள் அல்லது A மற்றும் B இரண்டுக்கும் பொதுவான உறுப்புகள் அனைத்தையும் கொண்ட கணமாகும்.
A U B = B U A.
அதே போல் தான் A, C மற்றும் B, C சேர்ப்புகளும். இவ்வகை சேர்ப்புகளுடைய பண்பை பரிமாற்றப் பண்பு (Commutativity) என்பர். இந்த தனி சேர்ப்புகள் என்றும் தரும் இன்பத்தை சிற்றின்பம் என வைத்துக்கொள்வோம்.
அதை விட ஒரு பேரானந்தம் ஒன்று உண்டு அது தான் இந்த மூன்று கணங்களின் மொத்த சேர்ப்பு.
A ∪ (B ∪ C) = (A ∪ B) ∪ C இதனை சேர்ப்புப் பண்பு(Associative Property) என கூறலாம் . இது இந்த அற்புதமான நிகழ்வின் ஒட்டுமொத்த பேரானந்தத்தை குறிக்கிறது.
பொதுவாகவே ஒரு பெரும் இன்பம் கண்டால் அதனை நாம் கொண்டாடிக் கொண்டே இருப்போம். ஆனால் அந்த இன்பத்தின் மெய்ச்சுவையான பரமானந்தம் என்பதை அவரவர் அனுபவத்தால் மட்டுமே உணர முடியும். அது தான் A, B, C ஆகிய மூன்று கணங்களின் வெட்டு(Intersection).
A∩ (B∩C) = (A∩B) ∩ C
மழை, புத்தகம், தேநீர் மூன்றின் சேர்ப்பு என்பது சுவையான பால் போன்ற ஆனந்த அனுபவம் என வைத்துக்கொண்டால் , இவற்றின் வெட்டு திரட்டிப்பால் கொடுக்கும் பரமானந்த சுவையாகும்.
நன்றி :
மறந்த கணிதத்தை படிக்க உதவிய Jeyannathann
எல்லா விஷயங்களையும் உன்னிப்பாக கவனிக்க வைத்த 6174 குரு Sudhakar Kasturi

Saturday, July 2, 2016

படிதாண்டா தெய்வங்கள் மட்டும் தான் சாத்தியம் , மனிதர்கள் அல்ல .!

மீண்டும் ஒரு பெண்ணுக்கோ , நம் வீட்டுப் பெண்ணுக்கோ நுங்கம்பாக்கத்தில்  நடந்தது போல  எதுவும் நடந்து விடக்கூடாதென்று அனைவரும் நினைப்பது மிகச்சரியான விஷயம் . ஆனால் ஊரான் வீட்டு உபதேசமாக தோன்றுவதெல்லாம் எல்லோரும் பதிவிடுகின்றனர் . தனியார் தொலைக்காட்சியில் மிகப்பழமையான கட்சியின் செய்தித் தொடர்பாளர் செல்பேசிகள் தான் இதற்கான காரணம் அதனால் பெண் குழந்தைகளுக்கு அதனை தவிர்க்கலாம் என்கிறார் .
மற்றோரு தேசியக்கட்சியின் பேச்சாளர் நல்ல சத்சங்களுக்கு குழந்தைகளை பெற்றோர் அனுப்பாதது தான் காரணம் என்கிறார் . யூடுயூப்பில் எவனோ ஒரு எடுப்பு பெண்கள் பலர் ஆண்களை காதல் தோல்விகளில் தள்ளுவதால் தான் ஏற்படுகிறது என பகிரங்கமாக உளறுகிறான் அதையும் பல்லாயிரம் பேர் பகிர்கிறார்கள் . கிடைத்தது வாய்ப்பு என சிறுபான்மையினர் மேல் ஒரு பழி , நமக்கு இந்த பிரிவினர் ஓட்டுகள் குறைவு என சில அரசியல் தலைவர்கள் போலி வருந்தல் என அரசியலாக்க ஒரு கூட்டம் . சினிமாவின் தாக்கம் பற்றிய விவாதம் தனியாக ஒரு பக்கம் நீண்டுக்கொன்டே செல்கிறது . காவல் துறையின் அஜாக்கிரதை , அவர்களின் நம் மீது விசாரனை என கொடுமைசெய்வர்கள் எனும் பயம் என காக்கிச்சட்டைகளை குறிவைக்கும் ஒரு கூட்டம் . இன்று அவர்கள் தான் அயராது கண்விழித்து நீதிக்கு முன் குற்றவாளியை நிறுத்தி இருக்கிறார்கள் .

பெரும்பான்மையானோர் பெண்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனும் கருத்தையே முன் வைக்கின்றனர். ஆனால் நடக்கும் தீங்குகள் எல்லாம் பெண்களுக்கு எதிரானவை , செய்வது  யார் ? சிந்திக்க வேண்டாமா ?
2011 அரசாங்க சென்சஸ் படி மொத்த ஜனத்தொகை 72,147,030. அதில் ஆறு வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் 32,317,699, பெண்கள் 32,405,499.
கல்வி அறிவு பெற்ற ஆண்களின் மொத்த எண்ணிக்கை 28,040,491, பெண்களின் எண்ணிக்கை 23,797,016.ஆக சுமார் 85% ஆண்களும் , 73% பெண்களும் படிப்பறிவு உள்ளவர்கள் என ஏட்டுக் கணக்கு  கூறுகிறது. ஆண்களை விட சராசரியாக பெண்கள் கல்விபெறும் சதவிகிதம் 10ஆண்டுகளில் 10% அதிகரித்துள்ளது(ஆண்கள் வெறும் 10 ஆண்டுகளில் 4% தான் ).சமுதாய மாற்றத்திற்கு ஏற்றார் போல் பெண்கள் தங்களை தயார்செய்தே வருகிறார்கள் .

மேற்கத்திய பழக்கத்தை விரும்பும் சமுதாயமாக நாம் மாறிவிட்ட போதிலும்  பெரும்பாலும் பெண்களின் மீது மட்டும் நம் பழக்கவழக்கங்களை திணிக்கப்பார்க்கிறோம் என்பது கவலைக்குரியது. முன்னேற்றத்துக்கான  பாடத்திட்டம்  , சுயஒழுக்க நெறிகள் , தற்காப்பு , சமுதாய விழிப்புணர்வு என பல வழிகளில் ஒட்டு மொத்த சமுதாயமாக நாம் பின்தங்கியே இருக்கிறோம் . 2016ல் படிதாண்டா பெண்களாக நாம் கோவிலில் தெய்வங்களை மட்டுமே காணமுடியும்.

சாதிகளுக்கு அப்பாற்பட்டு நம் வீட்டுப் பெண்களின் நலன் கருதி தமிழ் சமுதாய விழிப்புணர்வுக்காக ஆர்க்ட்டர்ஸ்(ஸ்வாதி) எனும் நட்சத்திரம் விண்ணோக்கிப்  பயணித்துள்ளது என நினைத்துக்கொள்வோம்.