Monday, April 29, 2019

புதுஉலகம் பிறந்துகொண்டது..!

கனவுகள் நிஜங்களாக எல்லோர்
வாழ்விலும் பலிக்கத்தொடங்க,
ஓநாயும் புலியும் சேர்ந்தார்போல்
மானுடம்  பேச,
தீப்பந்தமும் எண்ணைத்துணியும் சிரித்துக்கொண்டு
காற்று வாங்க 
கூன் விழுந்த வயதான வானவில்
வண்ணமில்லாமல் நிமிர்ந்த நிற்க,
இரவில்லா நேரத்தில் வௌவால்கள்
ஓடியாடி அளவளாவ,
வடை தின்ற நரியெல்லாம்
நடுநிலை அரசாக,
ஆடிக்காற்று தேடி அசந்து
அம்மியில்லாமல் அசையமறுக்க,
எல்லை தாண்டிய நட்புகள் எல்லாம்
தவறில்லை சரியென்றாக ,
பாம்பூறிய புடலங்காயெல்லாம்
கசக்கமறந்து தித்திக்க ,
மனங்களெல்லாம்  மிதிக்கப்பட்டு
மதங்கள் மதிக்கப்பட ,
உணர்ச்சியற்ற பிண்டங்களாய்
உயிருள்ள மாந்தராக ,
ஒன்றின் மேல் ஒன்றாக
வரையப்பட்ட கண்ணாடி ஓவியங்கள்
தரையில் விழுந்து சுக்குநூறாக
அர்த்தமில்லா வார்த்தைகள் எல்லாம்
ஒன்றோடு ஒன்று கூடி
தனக்கு தானே
புதுஉலகம் பிறந்துகொண்டது..!
புதுக்கவிதையாய் எழுதிக்கொண்டது..!
புதியதொரு ஓவியம் படைத்துக்கொண்டது..!

No comments:

Post a Comment