Sunday, September 15, 2019

தாத்தாமாமா

நான் என்னுடைய வலைப்பூவில் 10ஆம் ஆண்டு நிறைவுக்கு ஏதேனும் சிறப்பாக எழுதலாம் என எண்ணி இருந்தேன் . அது ஒரு இரங்கல் பதிவாக இருக்கும் என சற்றும் நினைக்கவில்லை. இதோ என்னுடைய தாத்தா , நெ.2 கரியமாணிக்கம் தொடக்கப்பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியர் திரு. ராமானுஜ வாத்தியார் இன்று காலை 11.30 மணியளவில் இயற்கை எய்தினார். 

அம்மாவின் மாமாவும் , அப்பாவின் சித்தப்பாவும் ஆகையால் எனக்கு தாத்தாமாமா. பள்ளிவிடுமுறை நாட்களை எங்கள் கிராமத்தில் கழிக்கும் வழக்கம் எப்போதும் இருந்தது . எனக்கு விவரம் தெரியாத வயதிலிருந்தே இவர் வீட்டில் தான் அதிக நேரம் கழித்திருப்பேன். சற்றே விவரம் தெரிந்த வயதில் புத்தகங்களை எனக்கு அறிமுக படுத்தியவர் இவர் தான். நாளிதழ் வாசிப்பும் , புத்தக வாசிப்பும் தன் கடைசி நாள் வரை கண்டிப்பாக செய்தவர் .

அக்ராஹாரத்துக்கு பொதுவாக  பவனத்தின் திண்ணையில் இரண்டு நாளிதழ்கள் எப்போதும் கிடைக்கும். முக்கிய பிரதியின் பதினாறு பக்கமும் , இணைப்பு பிரதியின் ஆறு பக்கமும் கிழமைக்கொரு இணைப்பாக வரும் புத்தகத்தின் அட்டைப்படம் முதல் கடைசி பக்கம் வரை விடாமல் படித்து விடுவார்.

எங்கள் கிராமத்திலிருந்து 3கிலோமீட்டர் அருகிலிருக்கும் சிறுகாம்புர் அரசு கிளை  நூலகத்திருந்து மிதிவண்டியில் சென்று எடுத்து வருவார். ஒரே நாளில் இரண்டு புத்தகங்களை வாசிப்பார் ஆனால் இரண்டிலும்  கண்டிப்பாக நாற்பது பக்கங்களுக்கு மேலாக வாசிக்க மாட்டார். பக்க அறிகுறிக்கு, தினசரி தேதித்தாழை எட்டாக மடித்து வைத்துவிடுவார். சிலநேரம் நான் வீம்புக்கு வேகமாக ஒரே நாளில் புத்தகத்தை வாசித்து முடித்து விட்டால் , தான் விலைகொடுத்து வாங்கிவைத்திருக்கும் ஏதேனும் ஒரு நாவலை உள்ளிருந்து எடுத்துக் கொடுப்பார். இவரின்றி என்னுள் ஒரு சதவிகிதம் கூட புத்தக வாசிப்பை யாராலும் நுழைத்திருக்க இயலாது. தேசங்கள் கடந்தும் என்னால் புத்தகங்களை பிரியமுடியவில்லை , இவரின் இந்த விதை வ்ருக்ஷமாக என்னுள் நிற்கிறது. இனி நான் படிக்கும் ஒவ்வொரு புத்தகமும் உங்களை கண்டிப்பாக நினைவுறுத்தும்.

தூர்தர்ஷன் ஆரம்பித்து, இப்போது வரும் எல்லா செய்தி நிகழ்ச்சியும் கண்டிப்பாக பார்த்துவிடுவார். செவிகளில் செயல்பாடு குறைந்தபோதும் , செய்தி நிகழ்ச்சியை தொலைக்காட்சியை கட்டிப்பிடித்து காதில் திணித்துக்கொள்வார் 

என்  தாத்தா இல்லாத குறை என்னுள் உங்களால் தான் போக்கப்பட்டது. உங்களின் பொறுமையும், நிதானமும் , தொலைநோக்குப் பார்வையும் நான் நினைத்து நினைத்து வியந்ததுண்டு. அன்று நீங்கள் சில நூறுகள் கடனாக கொடுத்திராவிட்டால் , இன்று நான் எங்கு கடல் கடந்திருக்கமுடியும். அன்பும் , கல்வியும் , அறிவும் , பாசமாக உங்களிடம் பெற்றுள்ளேன் . அத்தனையும் அண்ணனிடமும் அவன் குழந்தைளிடமும் எப்படியாவது திருப்பித்தருகிறேன்.

 நளனை உங்களுக்கு காட்டஇயலாத வருத்தம் என்னைவிட்டு என்றும் அகலாது

அன்புடன்
உங்கள் ஆனந்த் (சௌமி )



No comments:

Post a Comment