Saturday, July 2, 2016

படிதாண்டா தெய்வங்கள் மட்டும் தான் சாத்தியம் , மனிதர்கள் அல்ல .!

மீண்டும் ஒரு பெண்ணுக்கோ , நம் வீட்டுப் பெண்ணுக்கோ நுங்கம்பாக்கத்தில்  நடந்தது போல  எதுவும் நடந்து விடக்கூடாதென்று அனைவரும் நினைப்பது மிகச்சரியான விஷயம் . ஆனால் ஊரான் வீட்டு உபதேசமாக தோன்றுவதெல்லாம் எல்லோரும் பதிவிடுகின்றனர் . தனியார் தொலைக்காட்சியில் மிகப்பழமையான கட்சியின் செய்தித் தொடர்பாளர் செல்பேசிகள் தான் இதற்கான காரணம் அதனால் பெண் குழந்தைகளுக்கு அதனை தவிர்க்கலாம் என்கிறார் .
மற்றோரு தேசியக்கட்சியின் பேச்சாளர் நல்ல சத்சங்களுக்கு குழந்தைகளை பெற்றோர் அனுப்பாதது தான் காரணம் என்கிறார் . யூடுயூப்பில் எவனோ ஒரு எடுப்பு பெண்கள் பலர் ஆண்களை காதல் தோல்விகளில் தள்ளுவதால் தான் ஏற்படுகிறது என பகிரங்கமாக உளறுகிறான் அதையும் பல்லாயிரம் பேர் பகிர்கிறார்கள் . கிடைத்தது வாய்ப்பு என சிறுபான்மையினர் மேல் ஒரு பழி , நமக்கு இந்த பிரிவினர் ஓட்டுகள் குறைவு என சில அரசியல் தலைவர்கள் போலி வருந்தல் என அரசியலாக்க ஒரு கூட்டம் . சினிமாவின் தாக்கம் பற்றிய விவாதம் தனியாக ஒரு பக்கம் நீண்டுக்கொன்டே செல்கிறது . காவல் துறையின் அஜாக்கிரதை , அவர்களின் நம் மீது விசாரனை என கொடுமைசெய்வர்கள் எனும் பயம் என காக்கிச்சட்டைகளை குறிவைக்கும் ஒரு கூட்டம் . இன்று அவர்கள் தான் அயராது கண்விழித்து நீதிக்கு முன் குற்றவாளியை நிறுத்தி இருக்கிறார்கள் .

பெரும்பான்மையானோர் பெண்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனும் கருத்தையே முன் வைக்கின்றனர். ஆனால் நடக்கும் தீங்குகள் எல்லாம் பெண்களுக்கு எதிரானவை , செய்வது  யார் ? சிந்திக்க வேண்டாமா ?
2011 அரசாங்க சென்சஸ் படி மொத்த ஜனத்தொகை 72,147,030. அதில் ஆறு வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் 32,317,699, பெண்கள் 32,405,499.
கல்வி அறிவு பெற்ற ஆண்களின் மொத்த எண்ணிக்கை 28,040,491, பெண்களின் எண்ணிக்கை 23,797,016.ஆக சுமார் 85% ஆண்களும் , 73% பெண்களும் படிப்பறிவு உள்ளவர்கள் என ஏட்டுக் கணக்கு  கூறுகிறது. ஆண்களை விட சராசரியாக பெண்கள் கல்விபெறும் சதவிகிதம் 10ஆண்டுகளில் 10% அதிகரித்துள்ளது(ஆண்கள் வெறும் 10 ஆண்டுகளில் 4% தான் ).சமுதாய மாற்றத்திற்கு ஏற்றார் போல் பெண்கள் தங்களை தயார்செய்தே வருகிறார்கள் .

மேற்கத்திய பழக்கத்தை விரும்பும் சமுதாயமாக நாம் மாறிவிட்ட போதிலும்  பெரும்பாலும் பெண்களின் மீது மட்டும் நம் பழக்கவழக்கங்களை திணிக்கப்பார்க்கிறோம் என்பது கவலைக்குரியது. முன்னேற்றத்துக்கான  பாடத்திட்டம்  , சுயஒழுக்க நெறிகள் , தற்காப்பு , சமுதாய விழிப்புணர்வு என பல வழிகளில் ஒட்டு மொத்த சமுதாயமாக நாம் பின்தங்கியே இருக்கிறோம் . 2016ல் படிதாண்டா பெண்களாக நாம் கோவிலில் தெய்வங்களை மட்டுமே காணமுடியும்.

சாதிகளுக்கு அப்பாற்பட்டு நம் வீட்டுப் பெண்களின் நலன் கருதி தமிழ் சமுதாய விழிப்புணர்வுக்காக ஆர்க்ட்டர்ஸ்(ஸ்வாதி) எனும் நட்சத்திரம் விண்ணோக்கிப்  பயணித்துள்ளது என நினைத்துக்கொள்வோம். 

No comments:

Post a Comment