Tuesday, September 20, 2016

மலேசியா -2

நீங்க தண்ணி வாங்கினீங்களா , எவ்ளோ காசு ? என கேட்ட ஓட்டுனரிடம்  ஒரு பாட்டில் 2 ரிங்க்ட் என்றோம் . நான் பெட்ரோல் வாங்கினேன் ஒரு லிட்டர் ஒண்ணே முக்கால் வெள்ளி(1.75). இது தான் இந்த ஊரின் சிறப்பு .கையில காசே இல்ல , அஞ்சு வருஷ தவணைல  ஒரு காடி(கார்) வாங்கி இப்போ உபேர்ல ஓட்டுறோம்.   காசு கொஞ்சம் நல்ல வருது. என்ன சிலசமயம் சவாரியா இருக்கும் , இல்லாட்டி ஏதும் கிடையாது , பெருசா வேற வேல ஏதும் இல்ல என்றும் கூறினார்.  உங்கள மாதிரி தான், காலைல நம்ம ஊர்க்காரர் டேக்சில தான்  ஏறினோம். நீங்க சொல்லுங்க ஒன்றரை கிலோமீட்டர் நீங்க எவ்ளோ கேப்பீங்க னு கேட்டோம். ஆறுபேறு வண்டினா ஒரு ஏழு வெள்ளி ஆகும் என்றார் . அப்போ நாங்க கண்டிப்பா ஏமாந்தோம் என்று கூறினோம் .  காலையில் நாங்கள் சென்ற வண்டிக்காரர் எங்களிடம் 25ரிங்கிட் வாங்கினார், வாங்கினால் பரவாயில்லை நம்ம பசங்க உங்கள்ட கூட ரூபா கேட்பேனா என்றார். வண்டியோட்டும் போது தன் நண்பரிடம் அவர் கூறியது எங்கள் அனைவருக்கும் மணி அடித்தார் போல் நினைவுக்கு வந்தது, அவரின் வார்த்தைகள் ' காலைலேந்து ஒட்டவே இல்ல பா , இப்போ தான் ஆள் கெடச்சிருக்காங்க'. நம்மவர்கள் நம்மவர்கள் தான். இந்த மகேந்திரனுக்கு இருந்த நல்ல மனது அவருக்கு இல்லை என்பதை உணர்ந்தோம்.

சமீபத்திய சினிமாவில் பார்த்தது போன்ற கைதுகளும் இங்கு நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ஞாயிறு காலை, முதல் வேலை அருகில் இருக்கும் சிகை அலங்காரக்கடைக்கு செல்வது என வைத்திருந்தேன். அதே நினைப்பை ஐவரும் வைத்திருந்தனர் போலும், வரிசை கட்டி    
உடன் கிளம்பிவிட்டனர் . ஐநூறு அடி தூரத்திலேயே கடையை முந்தின இரவே குறித்துவைத்ததால் எட்டுமணிக்கே வரிசையாக ஐந்து வாடிக்கையாளர்களை பார்த்து குதூகளித்தார் குமரன். இவரும் புதுக்கோட்டையை சேர்ந்தவர் தான். மலேசியாவில் மொத்தம் பதிமூன்று ஆண்டுகளாக இருக்கிறார். நான்காண்டு முன்னர் அவருடைய தந்தை இறந்தபோது ஒரு முறை ஊருக்கு சென்று வந்தாராம். இல்லறத்தை பற்றி வினவிய போது , சவரக்காரனுக்கு எவன் தருவான் என்ற கவலையை உதிர்த்த தருணமும் , வானொலிப்பெட்டியில் "வா வா நீ வா தோழா , உலகம் ஒருவனுக்காக " என கபாலியின் முழக்கம் வந்தது. நடுவில் அடர்த்தியாகவும் சுற்றி கட்டையாகவும் மயிரை வெட்டிவிட்டு , அடுத்த சுருட்ட மண்டையனை அமரவைத்து தமிழ்நேசன் பத்திரிகையில் ராசிபலன் படித்து வரிக்கு வரி ஒருவரை ஒருவர் கிண்டலடித்துக் கொண்டிரும்தோம். சூடாக அவர் கடுங்காப்பி குடித்ததை பார்த்து கடை கேட்டதற்கு, அவர் கடலுக்கப்பாலும் சாயா ஆத்திக்கொண்டிருந்த  மலையாளத்தான் கடையை  காட்ட  நாங்களும் 5 தேஹ்தரீக் வாங்கிவந்து  அரட்டை தொடர்ந்தோம் , இன்னும் இரண்டு மண்டைகள் சரைக்கவேண்டியிருந்தது.

மூன்றாவது ஆளின் கிருதாவை செதுக்கிக்கொண்டிருக்கையில் ஒரு அலைபேசி அண்ணனுக்கு வந்தது. அண்ணனின் உரையாடல் இதோ ," ஆமாம்னே, மூணு நாளா  காபந்து போலீஸ் நோட்டம் விட்ருக்காங்க . இந்தப்பய சும்மா இல்லாம கடைல இருக்கிற வேலையெல்லாம் செய்றத படம் பிடிச்சருக்காங்க. நேத்து மதியம் மூணு மணி வாக்குல, உள்ள வரவும் அவனுக்கு என்ன செய்ய னு தெரில . சும்மா தான் இருக்கேன்னு சொல்லிருக்கான் , ஆனா படத்தக்காட்டி  கையில  விலங்கு போட்டாக என்றார் . ஆமாம், எனக்கு தெரியாது , இந்த மயிரு மெஷின நோண்டிட்டு இருந்தேன். ஜோஹார்லெந்து கடைக்கு சொந்தக்காரர் என் நம்பர்க்கு அடிச்சாரு , அப்பறம் போய் பார்த்தேன், வண்டி வெளிய இருக்கு ஆனா ஆள தூக்கிட்டாங்க", அழைப்பு துண்டிக்கப்பட்டது . அண்ணன், தூக்கிட்டாங்கணா ? சுட்டுருவாங்களா  ? என்றதற்கு இல்லை , அனுமதியில்லாமல் வேலை செய்ததால் கைது செய்யப்பட்டார் என விளக்கினார். தலைக்கு பத்து வெள்ளி வீதம் ஐம்பது கொடுத்துவிட்டு, வெந்நீர்  குளியல் போட கிளம்பிவிட்டோம்.

#மலேசியா #காடி #சலூன் #வெள்ளி

No comments:

Post a Comment