Monday, November 14, 2016

நவம்பர் 9

நவம்பர் 9,2015 , காலை 6மணி . கொட்டும் மழை , இடி முழக்கம் காதுகளில்  எதிரொலிக்கின்றன , பளிச்சுடும் மின்னல் வெளி வர துடிக்கும் கதிரவனின் கூச்சத்தை போக்கி வானை கிழிக்கிறது . ஐந்து நாள் விடுப்பில் வந்து எனக்கு , நான்காம் நாள் காலை அது . சுமார் ஐந்தரை மணி அளவில் பெண் வீட்டார் எப்படியோ மழையில் நனைந்து எங்கள் வீடு வந்து சேர்ந்துவிட்டனர் . பெண் இன்னும் பெங்களூரிலிருந்து வரவில்லை .  பெருங்களத்தூர் அருகாமையில் வந்தவுடன் தொலைபேசியில்  அழைக்க, உடனே நானும் அரை ட்ராயர் போட்டுக்கொண்டு   , பாக்கெட்டில் மணிபர்ஸை திணித்துக்கொண்டு இருக்கும் ஒற்றை குடையை எடுத்துக்கொண்டு  பேருந்து நிலையம் நோக்கி விரைந்தேன் .  எதிரே வருவதை கூட பார்க்கமுடியாது அளவு வெளுத்துவாங்கும் மழை . எதிர்காலத்துணைவியை காண ஓடிக்கொண்டிருந்த நான் . தண்டவாளம் கடந்து ஒரு ஆட்டோ எடுத்துக்கொண்டு அது தாம்பரம் மேம்பாலம் வரை சென்று சுற்றி வரவும் , அவள் பேருந்தில் இருந்து இறங்கி நிற்கவும் சரியாக இருந்தது . ஓடும் ஆட்டோவினை மெல்ல உருட்டச்சொல்லி அவள் நிற்கும் திசை பார்த்து தலை நீட்டித்  தேடினேன் . பெங்களூரு குளிருக்காக போட்ட ஸ்வெட்டர் மழையை சுமந்துகொண்டிருக்க , கையில் கட்டைப்பையையும் முதுகில் ஏதோ பெருநிறுவனத்தில் கொடுத்த இலவச கணிணிப்பையுடன் அவள் நிற்க , கைகாட்டி ஆட்டோவினுள் இழுத்து அருகில் அமரவைத்தேன் . புதிய விடியல் ஆரம்பமானது . காலம்காலமாக பெண் வீட்டில் சென்று பார்க்கும் வழக்கம் இங்கு நடக்கவில்லை,மாறாக எங்கள் வீட்டில் பெண் வந்து பார்த்த மாறுபட்ட ஏற்பாடு .  சாயம் பூசிய முகத்திரையை பார்க்க வேண்டிய ஏமாற்றம் எனக்கில்லை , இயற்கை அன்னையின் தயவில் செயற்கைகளில்லா அகஅழகை காண நேர்ந்தது . பெண்ணை பாடச்சொல்ல வில்லை, சமையல் பற்றியே பேச்சே துளியும் இல்லை. பார்க்க , பேச , பழக , உணர சிலநொடிகள் போதுமானதாக இருந்தது . எடுத்துக்கொள்ள நான் இருக்க , தன்னை கொடுக்க அவள் இருக்க இருமணங்கள் திருமண நாள் குறிக்க ஒப்புதலானது . 
கொட்டும் மழை , இடி முழக்கம் காதுகளில்  எதிரொலிக்கின்றன , பளிச்சுடும் மின்னல் ஓடிப்போகவிருக்கும் கதிரவனின் கோழைத்தனத்தை வெளிச்சத்தில் காட்டுகிறது . அன்றை போன்ற அதே நிகழ்வுகள் . மீண்டும் மழையில் ஓடிக்கொண்டிருக்கிறேன் அவளை அழைத்துவர. இம்முறை கடல்கடந்து.  இன்று நவம்பர் 9, 2016.
காதல் , நிச்சயம் , திருமணம் கடந்து மீண்டும் அதே நாள் இருவரையும் இணைக்கிறது .!

No comments:

Post a Comment