Friday, October 23, 2015

கொலுப்படிகள்

படிகள் .. கொலுப்படிகள் ..
ஒரு வித ஆச்சர்யமான கேள்வி  மனதினுள் .!
நாயகியர் முன்னுரிமைக்காய் வீற்றிருக்கும் கல்வியும் செல்வமும் வீரமுமுடைத்  தலைவியர் ,
மாம்பழ சண்டை மறந்தது போலும் கந்தனுக்கும் கணபதிக்கும் ,அருகருகில்;
தம்பதி சகிதமாய் புன்னகைத்தபடி பரந்தாமனும் , பிறைமுடியானும் , பிரமனும்;
திராவிட நிறத்தினில் ஆத்திகம் பேசும் காளிமாதேவியும்,கற்பக விநாயகனும்,
சமத்துவமாய்   அரவணைத்தபடி மாடு மேய்க்கும் கண்ணனும் , ஆடு மேய்க்கும் கர்த்தரும்,
எல்லாம் மாயை மனதினை பாரென சிரிக்கும் புத்தனும் ,
இத்துனை தெய்வங்களின் ஆசிகளோடு திருமணக் கூட்டமும்  ,
பீப்பீ டும் டும் முழங்க மணபந்தல் சீர்வரிசையும் ,
இச்சமயம் பார்த்து வணிகம் செழிக்கும் செட்டியார் குடும்பமும் ,
மண் மலைகளுக்கு அருகினில் சிறுவர் விரும்பும் விலங்கியல் பூங்காவும் ,
தேக்கப்பட்ட குட்டையில் நாளெல்லாம் ஊறியபடி நெகிழிப்பறவைகளும் .
ஒன்பது நாள் சுதந்திரம் மீதம் நாள் சிறைவாசம்,
அலங்கரிக்கபட்ட பினைக்கைதிகளோ இவர்கள் ,
ஏற்றத் தாழ்வுகளோ இவர்களுக்குள்ளும் ,
மேலும் கீழுமாய் அன்றி வரிசையாக இருந்திருக்கலாம் படிகள் , கொலுப்படிகள் ..!

No comments:

Post a Comment