Sunday, November 1, 2015

அமைதியான பக்கங்கள்1 - ஊர்மிளை

அழகிய சோலைகள் சூழ்ந்த அந்த மாளிகையின் மேல் அறையிலே நான்கு பெண்கள் ஒருவரை ஒருவர் கேலி செய்து கொண்டிருந்தனர் . சிலபுறாக்கள் சட சட வென நந்தவனத்தில் துள்ளி பறக்க எத்தனித்தன . இதைக் கேட்ட அம்மங்கையர் யாரோ வருவதை அறிந்து , அத்திசை நோக்கி பார்த்தனர் . சந்திர சூர்யர்களுக்கு ஒப்பனா பிரகாசத்துடன் ஆஜானுபாஹுவான இரு இளைஞர்கள் நந்தவனம் கடந்து சென்றுகொண்டிருந்தனர் . ஒருவனை கண்டால் கருணையின் வடிவமாயும் , மற்றொருவன் அழகிய கோபக்காரனாகவும் இருந்தனர் .

அதே நாள் மாலைவேளையில் நடந்த ஸ்வயம்வரத்தில் நான்கு மங்கையருள், மிதிலையின் ராஜகுமாரி கௌசல்யை மைந்தனை மணமுடிக்க மாலையிட்டாள் . அயோத்தி முதல் மிதிலை வரை சாலைகள் எங்கும் அலங்கரிக்கபட்டிருந்தன . வனங்களும் கூட இந்த திருமனவிழாவினை கொண்டாட பூத்துக்குலுங்கின . இல்லங்கள் தோறும் தோரணம் கட்டப்பட்டன , மக்கள் அனைவரும் புத்தாடை அணிந்து தன்கள் வீட்டு விழாவினை போன்று கொண்டாடிக்கொண்டிருந்தனர் .

நாட்கள் கடந்து சென்றன தசரத மைந்தர்கள் நால்வரும் மிதிலை ராஜகுமாரிகளை மணந்து , இல்லறம் தொடங்கி சில நாட்கள் ஆயிற்று .  வருணனுக்கு முன்னரே தெரிந்தது போலும் இவளின் எதிர்காலம் , ஓ வென அழுது கொண்டிருந்தான் . இலக்குவன்  கேட்கிறான் ,' உன்னுடைய அக்காவுக்கோ ஸ்வயம்வரம் நடத்தி தன் மணாளனை தேர்வு செய்ய வைத்தார்கள் , உனக்கு என் அப்படி ஒரு வாய்ப்பு தரவில்லை . உன் தந்தையின் மீது உனக்கு கோவமில்லையா ?

அவள் மிகவும் கனிவாக பதில் கூறுகிறாள் ,' நாதா . இந்த பேதைப் பெண் நீங்கள் மிதிலை வந்தவுடன் தங்களிடம் மனதை ஒப்படைத்துவிட்டேன் . அன்று நீங்கள் இருவரும் சூர்ய சந்திரர்களை போல் நந்தவனதினுள் வந்த போது , நான் வளர்த்த புறாக்கள் தூது வந்தன எனக்காய் . சூரியனான தங்கள் அண்ணனிடம் ஒளியினை பெற்று சந்திரனை போன்று நீங்கள் பிரகாசித்தீர்கள் . அந்த நாளே என்னை உங்களுக்கு அர்ப்பனித்துவிட்டேன்  '

'தேவி , உன்னுடைய நயமான பேச்சும் , என் அண்ணனுடன் உன் ஒப்பீடும் என்னை மெய்சிலிர்க்க வைக்கின்றது . நானோ உன்னிடம் என்னை பற்றியோ என் அண்ணனை பற்றியோ கூறவில்லை . பின்னர் எப்படி சரியாக என் மனதை புரிந்தார் போல் பேசுகிறாய் ' என்றான் 

'சுமித்திரை மைந்தரே , நானும் சீதாதேவியும் இன்று வரை நிஜமும் நிழலுமாய் இருக்கிறோம் . நாங்கள் இருவரும் எப்படியோ நீங்களும் அப்படித்தான் என என்னால் உணர சில நொடிகள் போதுமாய் இருந்தன . 

நான் கண்டிப்பாக உன்னை போன்ற மனைவியை பெற மிகவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று கூறி அவளின் கைகளை மெதுவாக பற்றினான் .

இப்படி ஓர் அழகிய காதல் தொடங்கிய நேரத்தில், அரண்மனையின் 
மற்றொரு இடத்தில் மாபெரும் பிரளயம் ஒன்று கிளம்பி தசரத சக்கரவர்த்தியை நொடித்திருந்தது .
'பரதன் இந்த பெருங்கடலால் சூழப்பட்ட நிலப்பகுதியை முழுமையாக ஆளவேண்டும் என்றும், ராமன்  மறவுரி தரித்து காடு, மலை மற்றும் புண்ணிய ஷேத்திரங்களுக்கு சென்று ஈரேழாண்டு அதாவது பதினான்கு ஆண்டுகள் கழித்து நாடு திரும்ப வேண்டும்' என்பதற்கு ஏற்ப ராமன் கானகம் புறப்பட தயாரானான் .


இதை அறிந்த இலக்குவன் கண்களில் கோவம் கொப்பளிக்க தன் அந்தப்புரத்தில் இருந்து கிளம்புகிறான் . 
ஊர்மிளை அவனை தடுக்கிறாள்,' நாதா இது கோவப்படும் தருணமில்லை . பகலவனின் ஒளியை மறைக்க ஏற்படும் க்ரஹனம் தானிது . இது விலகிச் செல்கையில் அதன் பிரகாசம் பன்மடங்காகும் . உங்கள் மனதினுள் இருக்கும் கோபக்கணைகளை ஒன்றாக திரட்டி அதன் வலிமையை தங்கள் அண்ணனுக்கு ஒரு பாதுகாப்பு வளையமாக்குங்கள். நீங்கள் உடன் செல்லாவிட்டால், நல்நேரங்களில் உடன் இருந்த இலக்குவனும் ஸ்ரீராமரின் துன்பகாலத்தினில் பிரிந்தான் என மக்கள் கூற நேரலாம். என்  மணாளனை அப்படி யாரும் கூற என் மனம் ஒவ்வாது .  ஒரு மகனாக நீங்கள் சுமித்த்ராதேவிக்கு செய்ய வேண்டிய கடமைகள் அனைத்தும் நான் பார்த்து கொள்கிறேன் . 

கண்களில் நீர் ததும்ப இலக்குவன் அவன் கைகளை பற்றி பேச்சில்லாமல் நிற்கிறான் .

தன் கணவர் அப்படி இருத்தல் , அவளை உசத்திக் காட்டுவதை உணர்ந்த ஊர்மிளை ,' நாதா இது என் சுயநலத்திற்காக தான் நான் கூறினேன் . நானும் உடன் வந்தால் , தங்களால்  ராமரையும் சீதையையும் விழிமூடாமல் கவனித்துக்கொள்ள முடியாது . நீங்கள் தங்கள் அண்ணனை பார்த்துக்கொண்டால் , என்னுடைய சகோதரியும் அங்கு பத்திரமாக இருக்கமுடியும் என்ற சுயநலத்தினால் தான் இதனை கூறுகிறேன்'.

ஒரு நல் பதியாய் தன்  மனைவியின் மெய்மனதறிந்த இலக்குவன் அவளை பார்த்து புன்னகைத்து அவளிடம் கைகூப்பி விடைபெறுகிறான் .

அயோத்தி நகரம் இருள்சூழ்ந்து காணப்படுகிறது. 
செய்தியறிந்த பரதன் கேகய நாட்டிலிருந்து விரைந்தோடி வருகிறான். தன் தாயின் ஆசையினை எதிர்த்து ராமனை மீண்டும் அழைத்து வர புறப்படத் தயாராகிறான். 

அப்போது சுமித்திரைக்கு உணவளித்துக் கொண்டிருகிறாள் ஊர்மிளை.  'குழந்தாய் , இலக்குவன் சென்று நாட்கள் ஓடிவிட்டன . உன்னை தனியாளக்கிய பாவம் என்னைத் தான் சூழும் . ஒரு தாயாக நான் ஏதும் செய்யாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். இன்று பரதன் ராமனை பார்த்து அழைத்து வரப் போகிறான். நீயும் உடன் சென்று வருகிறாயா' என்றாள் சுமித்ரை .

அன்னையே , 'தந்தை வாக்கை காப்பாற்ற கானகம் சென்றுள்ளார் ராமர் . அண்ணனை நிழலாக தொடர்ந்து தங்கள் மகன் சகோதரத்துவத்தை காக்கச் சென்றுள்ளார் . பரதரோ நீதி தவறாமைக்கை அண்ணனை அழைக்க செல்கிறார் . இதனிடையில் நானும் பரதரோடு அவர்களை நாடு திரும்ப அழைக்க  சென்றால் ஏதும் தவறு நடக்கலாம் . என் துன்பத்தை பார்த்து என் நாதன் திரும்ப வர நினைத்து என்னுடன் வந்து , ராமர் கானகத்தை  தொடர்ந்தால் அது ஒருவித இழுக்காகி விடும் .  என்னை பார்த்தும் மனம் மாறாமல் இருந்து , அவர் அண்ணனுடன் சென்றால் அது தாம்பத்யத்தை மதிக்கதை கறையை என் கணவரின் மீது சுமற்றிவிடும். இது இதில் எது நடந்தாலும் அயோத்தி மக்கள் , சுமித்திரை மகன் தவறிழைத்தான் என்றே கூறுவர். அவர்களில் பலபேருக்கு இந்த ஊர்மிளையை யாரென்றே தெரியாது . ஆகையால் உங்களுக்கு நான் அவப்பெயர் கொண்டுவந்ததாகி விடும் .ஆகையால் நான் வரவில்லை அம்மா ' என்றாள் ஊர்மிளா .

அவள் பேச்சின் நிதானத்தையும் சிந்தனையும் கண்டு வியந்த சுமித்திரை ஊர்மிளையை கட்டித்தழுவினாள்.

பதிவ்ரதை பதினான்கு ஆண்டுகள் தனிமை சிறைவாசத்தை  அனுபவித்து, பின்னர் இலக்குவனுடன்  இஷ்வாகு குலவாரிசுகளை பெற்றெடுத்தாள் . இவள் வாழ்ந்த பக்கங்களை மட்டும் அயோத்தி அமைதியாய் மறந்திருந்தது .




No comments:

Post a Comment