Monday, February 22, 2016

என் திருமண நிச்சயமும், என்னுள் பித்தனும்

காலை ஆறு மணி இருக்கும் . சென்னை சொகுசுப் பேருந்து திருச்சி  நொ.1 டோல்கேட்டில் என்னை இறக்கி விட்டுச்சென்றது. சாலையை கடந்து முசிறி செல்லும் பேருந்துங்கள் நிற்கும் திசையில் வந்து நின்றேன் . நானும் என் சுமைகளும் கையில் இருக்க, பயணத்தின் போது என் அன்புத்தங்கை குடுத்த கவிக்கோவின் பித்தன் என்னுள் ஓடிக்கொண்டிருந்தான் .

சர்ர்சர்ர்சர்ர் என்று டிக்கெட் டெப்போவில் அழுக்கான இளநீல சொக்காய் போட்ட அரசு போக்குவரத்துத் துறை அதிகாரி பெருக்கிக் கொண்டிருந்தார் .

'சமயபுரத்துக்காரி என் பக்கம் பாருமம்மா , மனச் சலனமெல்லாம் நீயே போக்குமம்மா ' என டீக்கடையில் ஒலிப்பெருக்கி கத்திக் கொண்டிருந்தது. வாய்க்கொப்பளிக்கவில்லை , ஊருக்கு போகும் பேருந்து வந்து விட்டால் என்ன செய்வதென்று அந்த இளம்குளிர் காலைவேளைத் தேநீரை தவிர்த்துவிட்டேன் .

தன்டன டண்டன டனன டைன் என மிரட்டலான ஹார்ன் சத்தம் கேட்டு திரும்புவதற்குள் அந்த தனியார் பேருந்து வந்து நின்றது . ராக்கு முத்து ராக்கு புது ராக்கொடியை சூட்டு என எஸ்ப்பிபி தொண்டைகிழிய வாலிபக்  கவிஞரின் வரிகளுக்கு குரல் கொடுத்தது டீக்கடைக்காரனை முகம் சுழிக்க வைத்தது.

"ஆரோகணத்தில் அல்ல அவரோகணத்தில் தான் ஸ்வரங்கள் கூட்டை அடைகின்றன " இசையை அசைபோடுகிறான் பித்தன் .

  "முசிறி, தொட்டியம் நாமக்கல் சேலம்" " முசிறி, தொட்டியம் நாமக்கல் சேலம் " நடத்துனரின் கையாள் கத்திக்கொண்டிருந்தான் . அண்ணா ,'கிளியநல்லூர் நிக்குமா'. எட்டுரூவா சில்லரையா இருந்தா ஏறு . சரி எனக் கூறி கடைசி இருக்கையில் அமர்ந்தேன்.

பித்தன் கூறுகிறான் ,'புறப்படுதல் அல்ல , திரும்புதல்  தான் பயணம் . வெளியே புறப்படுதல் அல்ல, வெளியிலிருந்து புறப்படுதல் தான் பயணம் .

தனியார் ஊர்திகளுக்கே உரித்தான அந்த வேகத்துடன் உத்தமர்கோவில் பாலம் கடக்கும் போது , கரம்பனூர் கோபுரம் நோக்கி கை கூப்பினேன் . மும்மூர்த்திகளும் முகம் திருப்பி வேறு திசைநோக்கி இருந்தனர் .

பதினைந்து நிமிடத்தில் அந்த 15 கிலோமீட்டர் கடந்து என்னை குப்பையை போல் வெளியே தூக்கிப்போட்டு நொடிப்பொழுதில் பறந்துசென்றது  பேருந்து .

நெஞ்சுக்குள்ளே இன்னாரெண்டு சொன்னா புரியுமா என்ற குரல் காற்றோடு கலந்து காத்தையனின் குளம்பிக்கடையில்  கீதமாய் ஒலித்துக் கொண்டிருந்தது .

'யாரு அன்னூரணியம்மா பேரனா யா . வா உங்க வீட்டுல கல்யாண விசேஷம்னு  சொன்னாக .

என்னுள் பித்தனோ  - 'தொட்டிலிலிருந்து புறப்படுகிறவன் பாடையை அடைகிறான் .நீங்கள் பாடையில் இருந்து புறப்படுங்கள் .  '

டேய் காளை . காளை . அக்ரஹாரத்துல ஆறாம் வீட்டு பின்னாடி போய் தம்பிக்கு சவரம் பண்ணி விட்டு வாயா ' என்று மூக்காயி கெழவி  அந்த பிடாரி கோவில் திட்டிலிருந்தபடி கத்தினாள் .

இந்த பிடாரி அம்மன் எங்கள் ஊர்க்காவல் தெய்வம் , மிகவும் சக்தி வாய்ந்தவள். எங்கள் கிராமதுக்கும் , திருச்சி-நாமக்கல் மாநில நெடுஞ்சாலைக்கும் குறுக்கே இவள் குடி இருக்கிறாள் . இரட்டை வழிச்சாலை இவள் வீட்டினை சுற்றித்தான் செல்லும். பல வருடம் முன்பு ஒரு முறை சாலை விரிவாக்கம் செய்ய வந்த அதிகாரி,' நடுரோட்டுல என்ன குதுர பொம்மையும் அம்மன் கோவிலுமென்று' இடிக்கச் சொல்ல, வண்டியை விட்டு அவன் வீட்டுக்கு வெறும் சவமாக சென்றதகாவும் செய்திகள் ஊருக்குள் உலாவியதை நினைத்துக்கொண்டேன்.

'உங்கள் பயணம் சப்தத்திலிருந்து மௌனத்திற்குச் செல்லும் இசையைப் போல் இருக்கட்டும் ' எனும் பித்தனின் புலம்பல் என் செவிகளில் .

எதிரே காளை ,'போயிட்டுருங்க தம்பி , பத்து நிமிஷத்துல கொல்லைக்கு வந்துடறேன் பொட்டியோட' என்று கோவிலின் பின் புறம் சென்றான் . என் தாத்தா காலத்தில்  ஊருக்குள் முடிதிருத்த குஞ்சப்பன் தான் வருவார் . அவர் இறந்தபிறகு அவரின் மகன் காளை குடும்பத்தொழிலை செய்து வருகிறான். எல்லோர் வீட்டுக் கொல்லைகளும் சவரகிடங்காகும் எங்கள் ஊரினில் .    

சாலையைக்  கடந்து தோப்புவழியாக ஆக்ராஹரத்துக்கு சென்றுகொண்டிருந்தேன் . இடக்கை பக்கம் பார்த்தால் தென்னை கூட்டுக் குடும்பமாக கால் மையிலுக்கு அப்பால் தெரியும் கோவில் வரை வளர்ந்திருந்தது . பாதி தூரத்தில் தான் கவனித்தேன் , தலைக்கவசம் அணியும் இந்த கால இளைஞர்களின் உச்சந்தலை வழுக்கையை போல் எங்கள் தோப்பு மட்டும் வழுமுண்டிருந்தது . கண்டிப்பாய் கடந்த மூன்று மாதத்தில் வீட்டுப் பெருசின் கைச்செலவுக்கு அது பலியாகிருப்பதை உணர்ந்தேன் .

 பித்தன் சிரித்துக்கொண்டே 'நீங்கள் உங்களை பொறுக்க வேண்டியிருக்க , நீங்கள் தேங்காயை பொறுக்கிக் கொண்டிருக்கிறீர்கள் ' என்றான் .

எங்கள் ஊரு மூன்றாக கூறு போடப்பட்டிருக்கும் . மேற்கே வரதராஜ பெருமாள் கோவில் தொடங்கி பள்ளிக்கூடம் வரை அக்ரஹரம் , அங்கிருந்து அடுத்த ஐம்பது வீடுகள் குடித்தெருவும் கடைசியில் பள்ளத்தெருவும் இருக்கின்றது . சுதந்திர இந்தியாவுக்கு முன் வகுக்கப்பட்டவை இவை . ஆனால் இன்றைய நாளில் அனைவரும் ஒன்றாகவே பழகுகின்றனர்.

''எங்கே இருக்கிறது நிகழ்காலம் ? இருக்கிறேன் என்று  போதே ஒவ்வோர் எழுத்தையும் இறந்தகாலம் விழுங்கிக்கொண்டிருப்பதை பார். காலம் என்பதே ஒரு போலிக்கணக்கு. அதில் நிகழ்காலம் ஒரு போலித் தொகை  '' பித்தனின் காலங்கள் இது .

வீட்டின் வாசலில் வாழைத்தார் கட்டிகொண்டிருந்த எங்கள் குத்தகையாளன் மனோகர் பல்லெல்லாம் வாயாக என்னை வரவேற்றான் .

வீட்டுத் திண்ணையில் காலணிகளை கழற்றி , அருகிலிருந்த காவரி குழாயில் கைகால்களை கழுவி வீட்டினுள் நுழைந்தேன்.

புன்னகைத்தபடி உறவுகள் போலிச்சித்திரங்களெனப் பித்தன் கூற.  அவனிடமே அவன் கருத்தை கூறினேன் , 'உங்கள் விருப்பும் வெறுப்பும் நீதிபதிகளாக இருக்கின்றன .  அதுவே சந்தர்ப்பமும் சாட்சியங்களாய் இருக்கின்றன. காலம்  மாறும் போது உங்கள் தீர்ப்பும் மாறிவிடுகிறது . அந்த விதிகளுக்கு இசைந்து நடப்பவன் பத்திரமாக இருக்கிறான் மீறுகிறவன் விபத்துக்கு  உள்ளாகிறான் "

- (தொடரும்)

No comments:

Post a Comment