Wednesday, February 3, 2016

கண்களால் கைது செய் ..


வேகமாக ஓடிச் சென்று ஒருவழியாக இரயில்  இருக்கையில் அமர்ந்தேன்.  எதிரில் அந்த இளைஞனின் பார்வையில் ஏதோ தவறு இருந்தது.


பல நூறு வருடங்களுக்கு முன்னர் .திண்ணனார் எனும் ஒரு சிவபக்தரின் மேன்மையை பார் அறியவைக்க, அவர்  வரும் வேளையில் சிவலிங்கத்தி்ன் வலக்கண்ணில் குருதி வருமாறு செய்தார் பெருமான். அதைக் வருவதைக் கண்ட திண்ணனார், பச்சிலை இட்டு மருத்துவம் பார்த்தார். அதன்பொழுதும் அடங்காத குருதியினை நிறுத்த, தன் கண்களில் ஒன்றினை அம்பினால் அகழ்ந்து இலிங்கத்தின் கண்ணிருக்கும் இடத்தில் இட்டார். இலிங்கத்தின் வலக்கண்ணில் வரும் குருதி நின்று, இடக்கண்ணில் குருதி வழியத்தொடங்கியது, திண்ணனார் தனது இடக்கண்ணையும் அகழ்ந்தெடுக்க திட்டமிட்டு, லிங்கத்தின் இடக்கண் இருக்கும் இடத்தினை தன்காலொன்றால் அடையாளம் செய்தார். பின் இடக்கண்ணை அகழ்ந்தெடுக்க எத்தனித்தபொழுது சிவபெருமான் நில்லு கண்ணப்ப என மும்முறை கூறி தடுத்தருளினார். அவர் கண்ணப்பநாயனார் என போற்றப்பட வேண்டி  கண்களால் திருவிளையாடல் நிறைவேற்றினார் ஈசன் .

அது போன்றே இராமானுசரின் காலத்தினில் சைவ வைணவ போர் தமிழ் தேசமெங்கும் பரவலாக இருந்த சமயம், இச்சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது . ராமாநுஜரின் ஞானம், வைராக்யம், அநுஷ்டானம், செல்வாக்கு ஆகியவற்றை பொறுக்காத சோழ மன்னன் ஒருவன் ‘சிவன் தான் பரதெய்வம். சிவனுக்கு மிஞ்சிய உயர்ந்த தெய்வம் கிடையாது என்ற நிலையை வைஷ்ணவர்கள் அனை வரும் ஏற்க வேண்டும்” என்று கட்டளையிட்டான். வைஷ்ணவர்களின் தலைவராக கருதப்பட்ட ராமாநுஜர் சோழன் அரசவைக்கு வந்து அரசனின் கட்டளைக்கு ஆட்படவேண்டும். இப்படி ஒரு இக்கட்டான நிலையிலிருந்து ராமாநுஜர் மீளவேண்டும் என்ற நோக்கத் தோடு கூரத்தாழ்வான், பெரிய நம்பி சகிதம் ராமாநுஜர் போல் துறவி வேடம் பூண்டு சோழன் அரசவைக்கு சென்றார். சிவனை விட துரோணம் என்ற அளவு பெரியது என்று கூறி அரசனின் சீற்றத்திற்கு ஆளாக கூரத்தாழ்வாரின் கண்கள் பறிக்கப்பட்டன.

ஆண்டவனுக்காக கண்களை அர்ப்பணித்தவர்களும் , தன் குருவுக்காகவும் சமய பரிபாலனம் செய்யவும் கண்கள் இழந்த வரலாறுகள் காண்கிறோம் .

   கோணன் மாமதி சூடியோர் கோவணம்
நாணில் வாழ்க்கை நயந்தும் பயனிலை
பாணில் வீணை பயின்றவன் வீரட்டம்
காணி லல்லதென் கண்துயில் கொள்ளுமே

சிவபெருமான் உறையும் திருவதிகை வீரட்டத்தைக் கண்டு தொழுதபின்னல்லது என் கண்கள் உறக்கம் கொள்ளுமோ? என தேவாரத்திருமுறையும்

கொண்டல் வண்ணனை கோவலனாய் வெண்ணெய்
உண்டவாயன் என் உள்ளம் கவர்ந்தானை
அண்டர்கோன் அணி அரங்கன் என் அமுதினை
கண்ட கண்கள் மற்றொன்றினை காணாதே..

என ஆழ்வார் அரங்கனின் அழகினை தவிர வேறொன்று காணவேண்டா என கூறியதும் நினைவுக்கு வந்தது.

இவையெல்லாம் கண்டிப்பாய் நம் இளைய தலைமுறையினருக்கு தெரிய வேண்டும் . நம் சினிமாக் கவிஞர்களின் வார்த்தைகளை நம்பி நீர்வீழ்ச்சி தேடும் முலைக்குவடுகளிலிருந்து அந்த வெறித்து பார்த்த கண்களை பிடுங்கினாலும் தவறில்லை.

#இரயில்பாடங்கள்


No comments:

Post a Comment