Thursday, February 4, 2016

கருடா கருடா பூப்போடு

உச்சி வெயில் மண்டையை பிளந்துகொண்டிருக்கையில் திடீரென சாலையில் ஒவ்வொருத்தரும் மேலே பார்த்துப் பார்த்து  சென்றனர் . என்ன தான் இருக்கென மாத்யாநிக சூர்யமுத்ரையிலே பார்த்தேன் . வட்டமடித்து கொண்டிருந்தான் கருடன்.

கொளுத்தும் வெயிலிலே  பெருமாளை எங்கோ  இறக்கிவிட்டு வந்து வட்டமடிக்கிறான் பார் என கேலிபேசும் குரல் ஓர் ஓரமாய் என் செவிகளில் உரசியது . யார் இந்த கருடன்  ? இது கழுகா  ? யார் இந்த நித்யசூரி ?

இலங்கையில் கட்டுண்ட அவதார புருஷர்களின் காவலனா? குளத்தினில் கடியுண்ட  வேழத்திணை காப்பாற்றிய மூலப்பெரும்பொருள் சாரதியா ? கிரேக்க-ரோமானிய வரலாற்று அஃகிலாவா ?

எதுவும் இல்லை அதும் வெறும் செம்பருந்து . ரக்கைகளுக்கு தங்கமுலாம் பூசி, மனிதமுகம் கொடுத்து , முதுகினில் கடவுளை ஏற்றிய ஆரியர்கள் கலைநயத்தின் வெளிப்பாடு என யாருடைய உளறல் சத்தமோ  இப்போது கேட்கிறது .

கண்டிப்பாய் இல்லை . கருட மந்திரம் சொல்லும்  ஸ்வர்ணபட்சியாய் இருந்திருக்கலாம் . அதானால் தானோ என்னவோ டோடோக்களை போல் , இமாலய காடைகளைப் போல் இன்று அழிந்தேபோயின . ஒரு விதத்தில் நல்லது தான் , அப்படி அவை இருந்தால் செயற்கையாய்  இனசேர்க்கையில் கவரிங் ரக்கைகளுடன் கருடன் ப்ராய்லர்களில் தொங்கிக்கொண்டிருக்கும் .

வெறும் ஆரியக் கட்டுகதைகளாய் இருப்பின் எப்படி சாவகமும், கடாரமும் இதன் வரலாறு கூறுகின்றன. முதலில் கடல் கடந்து படையெடுத்து போனதும்,வென்றதும்  நம் திராவிட மன்னர்கள் ஆயிற்றே.

அடிச்சு விடுறதுல ஆரியன அடிச்சுக்க முடியுமா என ஒரு குரல் வேறொரு மூலையில் .

கட்டிப் போட்டால் குட்டி போடும் என்றழைக்கப்படும் ஒரு வகைக் கிழங்கு.  கயிற்றில் கட்டித் தொங்கவிட்டால், காற்றில் உள்ள ஈரக் காற்றை உறிஞ்சிக் கொண்டே கொடி வீசித் தளிர்க்கும்.இது வெகு சீக்கிரம் தழைத்து வளர்ந்தால் வீடு சுபிட்சமாக இருக்கும்.இந்தக் கிழங்கு ஒரு கருடனுக்குச் சமம்.அதாவது கருடன் வந்தால் அந்த இடத்தில் எந்த விஷ ஜந்துக்களும் அணுகாது.அப்படி வந்தால் அவற்றின் விடம் பங்கப்படும். அதனால் தான் இது ஆகாச கருடன் கிழங்கு.

நம்ம ஊர் சித்தர்கள் ஏன் தேடிப்பிடிச்சு கருடன் பேரை வெச்சாங்களோ தெரியல ?

சாவகத்து மன்னன் எர்லங்கன் காலச் சிற்பங்களில் விஷ்ணுவை சுமக்கும் கருடனை காணமுடிகிறது . இந்தப் பறவைக்கு என்ன கொழுப்பிருந்தால் மங்கோலியத்  தலைநகர்வரை பறந்து போய் சின்னமாக அமர்ந்திருக்கும் அறிவு , வீரம், விசுவாசம் மற்றும் நல்லொழுக்கத்தின் அடையாளமாக இந்தோனேசியா, தாய்லாந்து கருடனை தங்கள் நாட்டின் சின்னமாக அறிவித்துள்ளது.

புத்தம் பேசும் மகாசமயசுதத்தில் அழகிய சிறகுகள் கொண்ட சுபர்ணனுக்கும் நாகங்களுக்கும் சமாதனம் பேசும் காட்சிகள் இருக்கின்றன.வினதைச்  சிறுவன் பாவம் நாம் தான் கண்டுகொள்ளவில்லை .

அதெல்லாம் சரி , மொழுமொழுன்னு வழிச்சு சவரம் செஞ்சி மந்திரம் சொல்றவங்களோட  சாமிய என் மீசைக்கார கருடன் தூக்குறான் ? என்ற குரலுக்கு ஒரு பதில் குரல், 'அடப்பாவி , பின்னால பார்த்தாவ நீ பாக்கலியா முறுக்குமீசையோட !  நீ எங்க பாக்க போற உனக்கு தெரிஞ்ச ஒரே மந்திரம் 'கருடா கருடா பூப் போடு' .உனக்கெல்லாம் கருடபுராணம் படி அசிபத்ரம் தான் போ '.

நாளைக்கு காளை சாணம் போடும் போது மீண்டும் யோசிக்கலாம் என வீடு வந்து சேர்ந்தேன் .

No comments:

Post a Comment