Monday, March 7, 2016

தெய்வங்கள் நீங்கள் தான்

கிருதயுகத்தில் ரேணுகாவின் கண்ணீருக்காய் இருபத்தோரு தலைமுறை க்ஷத்ரிய வம்சத்தை தலைக்கொண்ட பரசுராமனாகட்டும் , திரேதாயுகத்தில் கண்மூடித்தனமாய் தாய் சொல் கேட்டவனும்,  மிதிலைச் செல்வியின் ஆனந்தத்துக்காக மாயமானென அறிந்தே துரத்திச்சென்ற  ராமனாக இருக்கட்டும் , த்வாபரயுகத்தில் பாஞ்சாலியின் கண்ணீர்த்துடைக்கும் தேர்ப்பாகனாகட்டும், பெண்களின் அழுகுரல் தவிர்க்கவும் புன்னகை உதிர்க்கவும் நிச்சயமாய் போராட்டங்கள் நடந்திருக்கின்றன. பெண்களின் நிலையை  என்றுமே சனாதன தர்மம் உயர்வாக காட்டியுள்ளது. 

தேவி பாகவதம் என்றும் , தேவி சுக்தங்கள் என்றும் பெண் தெய்வங்களை ஆரிய மந்திரங்களை கொண்டு பூஜிதுள்ளோம். பெண்களை குருமார்களாகவும் நம் புரானச் சான்றுகளில் காண்கிறோம். ஆண்டாள் போன்ற  தெய்வங்களை மணந்த தமிழ் பெண்களை பற்றிய பெருமையான வரலாறுகள் இருக்கின்றன. பன்னிருவரில் ஒருவரும் , அறுபத்து மூவரில் மூவரும் என சற்றே இடஒதுக்கீடு குறைந்தாலும் பெண்களை நாம் மறந்ததில்லை.

தமிழரின் பொற்கால ஆட்சியான சோழப் பேரரசில் முடிவெடுக்கும் முக்கிய பொறுப்புகளை பெண்கள் வகித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. காவியத் தலைவிகள் மேல் நம்பிக்கையில்லாதவர்கள் கூட நம் உள்ளூர் பெண் தெய்வங்களின் மேல் பயபக்தியுடன் தான் இருந்திருக்கிறார்கள் . நம் கிராமங்களில் ஊர்த் தெய்வங்கள் , இனத் தெய்வங்கள் , வீட்டுத் தெய்வங்கள் , குலத் தெய்வங்கள் , பத்தினித் தெய்வங்கள் , காவல் தெய்வங்கள் , எல்லைத் தெய்வங்கள் என பலவகையில் பெண் தெய்வங்களை நாம் கொண்டாடுகிறோம்.

ஊரின் எல்லையிலும், வாய்க்கால்கள் அருகிலும், குலக்கரைகளும் , வேப்பமரங்களும் இவர்களுக்கு உரைவிடங்களாகின்றன. ஆளுயர அய்யனாரிடம் தப்பித்தாலும் எல்லையம்மனிடமோ , முப்பிடாரியிடமோ பேச்சிழந்தும் முடமாகவும் கிடந்த நிலச்சமீன்களின் கதைகளை கிராமங்களில் கேள்விபட்டிருக்கிறோம் .
சரித்திரக் காட்சிகளில் வரும் த்ரௌபதிக்கும் கண்ணகிக்கும் கோவில்கள் வைத்துக் கொண்டாடியிருக்கிறோம்.

இன்றளவும் குடும்பத்தில் சுமங்கலியாக இறந்த பெண்களை தெய்வமாக நினைத்து பிரார்த்தனைகள் செய்கிறோம். நெடுஞ்சாலையை ஆக்கிரமித்த அம்மனுக்கும்  ஆதீனம் அமைத்து வாரிசுகள் வரைக்கும் வணங்குகிறோம். ஆனந்தமயமாய் தொண்டு நிறுவனம் நடத்தும் அம்மையாராகட்டும், ஆண்டாண்டுகளாய் ஆண்டுவரும் அம்மையாராகட்டும் ஆண்டவனென  நம்மில் லட்சக்கணக்கானோர் அழகுபடுத்திப் பார்க்கிறோம். வெளிநாட்டு அன்னைகளை நம்மை ஆட்டுவிக்க வைத்தும் கூட நீதி தேவதையின் கண்ணைக்கட்டி, பாரத்தாயுடன் பொம்மையைப் போல் அமைதியாய் இருந்திருக்கிறோம்.

எத்தனையோ வழிபடுதல் இருந்தாலும் வீட்டினில்  நம்முடன் இருக்கும் தாயிடம் துளிப் புன்னகையும் ,  சகோதரிக்குத்  தோள் கொடுத்து அரவணைப்பதும், துன்பத்தின் போது  துணைவியைக் கட்டியணைப்பதும்  தான் பெண் தெய்வ வழிபாடுகளில் சாலச்சிறந்தது.

நம் வீட்டுப் பெண்களின்  மகிழ்ச்சியில் தான் , நாம் உருவம் கொடுத்த தெய்வங்களின் மகிழ்ச்சியும் அடங்கியுள்ளதை நாம் கண்டிப்பாக உணரவேண்டிய தினம் .

இன்று .

உலகப் பெண்கள் தின வாழ்த்துக்கள் .

No comments:

Post a Comment