Tuesday, March 1, 2016

பொதுவா சொன்னேன்

அந்த விடியற்காலைப் பொழுது , மனதை கட்டவிழ்த்து பறக்கச் சொன்னேன் .
ஜன்னல் வழியாக வெளியே சென்று உலாத்துகையில் ஆவின் பால் பூத்தில் குல்லா போட்டு அணிவகுத்திருக்கும் கூட்டத்தை கண்டு நின்றேன். 'ஏம்பா என்னிக்கு தான் நேரத்துக்கு இவன் பால்வண்டி வரும் . உங்களோட தெனமும் ரோதனையா இருக்கு' என்று கிழங்களின் முனுமுனுப்பு . 'அய்யரே இங்க பால் வண்டி வருதோ இல்லையோ பெருமாள் கோவில்ல மணி ஆறடிச்சா இஸ்ஸ்பூன் பால் தராங்களே அப்பறோம் என்ன '  என குந்துவிட்டு அமர்ந்துகொண்டு சுருட்டை இழுத்துக்கொண்டே வம்புக்கிழுத்தான் அந்த லுங்கிக்காரன். விஸ்வரூப தரிசனம் பற்றி போலி நாத்திகர்களுக்கு என்ன தெரியும் என அமைதியாய் பல்லை கடித்துக்கொண்டார் அந்த வயோதிகர் . கோச்சுக்காத சும்மா பொதுவா சொன்னேன் என்று பால் வண்டி வந்ததும் பால்தட்டுகளை எடுத்து அடுக்க ஓடினான் .

காலை கதிரவன் எட்டிப் பார்க்க ஆரம்பித்துவிட்டான் , அங்கே  வேகமாக வந்த மூன்றுச் சக்கர தேருக்குள் என்னை நுழைத்துக்கொண்டேன். சீறிப்பாய்ந்து அருகில் இருப்பவர்களை ஆடியாடி உரசவைத்து முன்னம்கம்பியில் லேசாக முட்டவைத்தது அந்தப்பயணம் . 'இங்க நிறுத்துப்பா  , எவ்ளோ ஆச்சு' என்றார் அந்த நடுத்தர வயது   பெண்மணி . இருபது ரூவா மா என்றார் ஆட்டோக்காரர் . 'என்னையா கொள்ளை அடிக்கிற ? பஸ்சுல அஞ்சு ரூவா தான்'  என புலம்ப ஆரம்பித்தாள் .  ' நானா உன்னை வரச்சொன்னேன் . தெனமும் காலைல இதே பிரச்சன யாரோடயாது'என்றான் அவன்  . அதுக்கில்லப்பா மத்தவண்டியெல்லாம் பத்துரூவா தானே என இழுத்தாள் அந்தப் பெண். 'வீட்டு சந்துக்கிட்ட ஏறக்கியும் விடனும் , பஸ் டிக்கெட் விலைக்கு சவாரி வர எங்கப்பன் என்ன சேவசெய்யவா பெத்துப்போட்டான் ' அது வந்து பொதுவா சொன்னேன் என மேலும் இழுக்கையில்,அந்த பெண் நீட்டிய இருபது ரூபா நோட்டை பிடுங்கி வண்டியை செலுத்தினார் அவர்.


கசகசத்துப் போன ஆட்டோவை விட்டு , இரயிலுக்கு மாறலாம் என ஓடிச் சென்று செங்கல்பட்டு நோக்கி செல்லும் ரயில்வண்டியில் ஏறினேன். இரண்டு தொழில்நுட்ப ஜீவிகளுக்கு அருகே சென்று அமர்ந்துகொண்டேன். அவர்களுக்குள் ஏதோ தீவிரமாக பேசுகிறார்கள் . 'டேய் மார்ச் மாசம் டா . லீவ் போடாம ஆபீஸ்க்கு வந்துரு . ஏற்கனவே நீ மேனேஜர் ஓட இங்கிலீஷ் நல்ல பேசறனு அவருக்கு கோவம் . சம்பளம் ஏத்தறதுல கைய வெச்சுருவானுங்க . அதுவும் இல்லாம வெள்ளைக்காரன் உன்னப் பத்தி பெருசா புகழ்ந்து பேசினது வேற நம்ம டீம்ல எல்லாருக்கும் ஒரே பொகைச்சல். உனக்கா  இல்ல அந்த டான்ஸ் ஆடுவாளே ஒரு பொண்ணு அவளுக்கானு தான் எல்லாரும் பேசிட்டு இருக்காங்க' என்றான் ஒருவன் . 'டேய் , என்னடா இப்படிலாம் சொல்ற என்றான் இன்னொருத்தன் . மச்சி பொதுவா சொல்லணும்னா ஐடி வேலையே ஒரு நாய் பொழப்பு டா ..


வேணாம் டா சாமி என திருட்டுத்தனமாய் அடுத்த ஸ்டேஷனில் முதல் வகுப்பு சீட்டில் சென்று அமர்ந்தேன் .
அந்தப்பெட்டியிலிருந்து பெண்கள் ரயில்பெட்டி பாதியாய் பிரிக்கப்பட்டதால் , ஜொள்ளர்களுக்கு அது வசதியாக இருந்தது . இந்த கால பொண்ணுங்கள பாரேன் , துப்பட்ட போடாம எதுக்கு சுடிதார போடனும் . வலைவலையா என் டாப்ஸ் போடணும் அப்றோம் அவன் பாத்தான் இவன் பாத்தான் புகார் குடுக்கணும் ? என ஒரு முறுக்கு மீசை மைனர் அருகில் இருப்பவரிடம் வசை பாடிக்கொண்டிருந்தார். சார் உங்க பொண்ணு எப்பவும் புடவை கட்டிட்டு தான் வெளிய போறாங்களா? புடவை கட்டினா இல்ல எவனும் பாக்காம தான் இருக்காங்களா ? என்றால் அருகில் இருக்கும் கல்லூரி வயது சிறுமி . எதிர் அடியை சற்றும் எதிர்பார்க்காத அந்த மைனர் இல்லமா பொதுவா சொன்னேன் . நாடு கெட்டு கெடக்குல அதனால என நழுவி சன்னல் வழியாக காட்டன்குளத்தூர் கருவேலம்காடுகளை ரசிக்கச் சென்றுவிட்டார் .


பயணம் நெடு நேரம் ஆகிவிட்டதால் வீட்டைநோக்கி நடைக்கட்டினேன் .  தெருமுனையில் பீடாக்கடையில் பொதுவா நம்ம ஊரப் பாத்தோம்னா திமுக ,அதிமுக ரெண்டும் மோசம்ப்பா.  நல்ல கட்சியே இல்லையப்பா என்ற குரல் ஒரு ஓரத்தில் என் காதில் விழுந்தது.

வீட்டுக்கு வந்ததும் கனடாவில் இருக்கும் என் நண்பனுக்கு குறும்செய்தி அனுப்பினேன் . 'என்ன டா எப்புடி இருக்க , ஆராய்ச்சிலாம் எப்புடி போகுது ?? . நல்லா போகுது டா . ரெண்டு குட்டி மிருகம் இருக்கு அதோட கதைய முடிச்சா நம்ம பொழப்பு கொஞ்சம் செழிப்பாகும் என்றான் . 'என்னது ஜீவஹிம்சையா, சகிப்பின்மைக்கு காரணம் அப்போ மோடினு பத்திரிக்கைல வருமேடா ? எதையெல்லாம் கொல்லப்போற ?' என்றேன் .
மௌஸ் அண்ட் ராட் என்று பதிலளித்தான் . டேய் பொதுவா பாத்தா ரெண்டும் எலி தானே டா . என்ன பெரிய வித்தியாசம் என்றேன் .  டேய் நெறைய இருக்கு டா . மொதல்ல அது ரெண்டோட உடலியல் , அடுத்து மரபியல் , அடுத்து   அழுத்தம் கையாளும் திறன் இப்படி நெறைய . ஆனா நீ சொல்ற மாதிரி பொதுவா பாத்தா ரெண்டும் ஒன்னுனே வெச்சுக்கலாம் .


சரி டா . ஒவ்வொனுக்குள்ளும் பல விஷயங்கள் இருக்கு. நான் இனிமேல் பொதுவா எதையும் சொல்ல மாட்டேன் என்று விடைப் பெற்று மனசுக்குள் நினைத்துக்கொண்டேன் ' பொதுவா இந்த முனைவர் பட்டம் ஆராய்ச்சினு சுத்துரவங்களாம் இப்புடி தான் கொழப்புவாங்க '  .

No comments:

Post a Comment