Friday, August 19, 2016

கருமை

வெளுத்துக்கிடந்த மேகம்  மெல்ல கருக்கத் தொடங்கியது,
கருமை படர படர கண்ணீர் சுரந்தது, அந்தக் கருமை பிடிக்காமல் இல்லை இவர்களுக்கு ,
மழையாய் நனைக்கிறதே .

அடர்ந்த கருமை அந்த அறையில் நிறைந்திருந்தது , 
மிகப்பெரியத் தேடலுக்கான இருப்பிடம் அது, அந்தக்  கருமை  பிடிக்காமல் இல்லை இவர்களுக்கு,
கடவுளாய் வழிகாட்டுகிறதே.

கருப்புச்சாயம் தறியெங்கும் ஊறியிருந்தது ,
மிகப்பெரிய புரட்சியின் தொடக்கம் அது , அந்தக்  கருமை  பிடிக்காமல் இல்லை இவர்களுக்கு ,
திராவிடம் தெள்ளிய தமிழ் சமுதாயத்திற்கு வித்திட்டதே.

மரத்தின் நடுவே எழுதுகரியாய் அடைந்திருந்தது,
மாற்றத்தின் வாயில் அது,  அந்தக்  கருமை  பிடிக்காமல் இல்லை இவர்களுக்கு ,
வாய்ச்சொல்லை  கை எழுத முடிந்ததே.

வெள்ளைக்குளத்தில் மிதந்துகொண்டிருந்தது,
அனைவரின் பார்வை அது ,  அந்தக்  கருமை  பிடிக்காமல் இல்லை இவர்களுக்கு,
விழியாய் வழி காட்டுகிறதே. 

முழக்கணக்கில் நூலாய் கருமை  திரிந்திருந்தது, 
பல கூட்டங்களின் காவலன் அது, அந்தக்  கருமை  பிடிக்காமல் இல்லை இவர்களுக்கு ,
பில்லி சூனியங்களை ஓட்டியதாய் நம்பப்படுகிறதே,

பாரெங்கும் சரிபாதி சூழ்ந்திருந்தது,
ஒவ்வொருத்தரின் எதிர்ப்பார்ப்பு அது , அந்தக்  கருமை  பிடிக்காமல் இல்லை இவர்களுக்கு ,
நாட்களின் முடிவை குறிக்கின்றதே.

கருமை  பிடிக்காமல் இல்லை இவர்களுக்கு ,
ஒதுக்கியும் ஒடுக்கியும் இருப்பதாலோ ,  கருமைக்கு பிடிக்கவில்லை இவர்களை,
தாய் மடியில் பிரிவினையாய் கிடக்கையிலே.

No comments:

Post a Comment