Thursday, August 25, 2016

முதல் மோதல்

முன்னோர் சொல்லின்  மீது இருக்கும் நம்பிக்கை எனக்கின்று பன்மடங்கானது . ஆசை அறுபது நாள் மோகம்முப்பது நாள், மொத்தம் தொண்ணூறு நாள். ஆம் , திருமணமாகி இன்றோடு தொண்ணூறு நாட்கள் ஆகிவிட்டது. வண்ண நாட்காட்டியில் சிவப்பு மை குறிப்புக்கோளால் வட்டம் போட்டுவிட்டேன் . முக்கியமான நாட்கள் இவை , தாம்பத்ய வாழ்க்கையிலே.  ஒரு முகச்சினுங்கல்கள் கூட இல்லாத எங்கள் இருவரிடையே திருஷ்டிப் பூசணியாய்  இன்றைய எங்கள் விவாதம்.  சிறு சண்டைகள் உறவுகளுக்கு நடுவே உள்ள நெருக்கத்தை அதிகரிக்கின்றன என்பற்கான சான்று. அலைபேசியில் அவசரமாக அழைத்தவளிடம், வேலைப்பளுவின் கடுப்பை ஒர்  வார்த்தையில்  தெளித்தேன். எதிர்ப்பக்கம் குரல் இறுகியது. சூடான இரு பதில்கள் அவள் அளிக்க , ஆண் வீரம் காட்ட என் முதல் பதில். கோபத்தில் நிதானி , உன் பதில்கள் வாயிலிருந்து வருபவை , ஆழமில்லா சொற்கள் ஆழமாக காயப்படுத்தும் என உள்மனதில் சின்னக்கண்ணன் சொடுக்கினான். சுதாரித்தேன் , மௌனித்தேன் .

நாற்பது நொடி மௌனம் எங்களை பலதூரம் பிரித்திழுத்து சென்றது. பின்னர் அழைப்பதாக துண்டிக்கப்பட்ட அழைப்பின் கதிர்வீச்சினில் அனல் பறந்தது. இங்கு தான்
தொழில்நுட்பத்தின் உதவி பெரிதாய் கை கொடுத்தது. நெடும் மௌனம் சில நேரம் பிளவுகளை ஏற்படுத்தலாம். சூடான விவாதம் விதண்டாவாதமாக மாறலாம். கண்ணனின் ஆசியோடு  காதலும் மோதலும் பரிவும் ஸ்மைலி களாக உள்ளடக்கிய க்ருஷ்ணாஸ்திரமாகிய வாட்ஸாப் வாதம் எய்தேன். ஆச்சர்யம் என்னவென்றால் எய்தவம்பினால் கட்டுண்டவன் நானானேன். வெவ்வேறு நாடுகளில் நடுவே இருந்த பிரிவை உடைத்து , அருகருகே எங்களை அணைத்தது.
மனம் விட்டு பேசுகையில் ஏற்படும் சுகமே அலாதியானது. பிரிவின் வலியை அவளின் ஒவ்வொரு சொல்லும்  உணர வைத்தது. தவறில்லாத போதும் தன் நிலை விவரித்தாள் என்னவள். நிலமகள் பொறுமையடி உனக்கு . இவ்வளவும் எளிதாக புரிந்து விடாது எனக்கு , ஆணாய் போய்விட்டேன்.

குரல் உயர்த்த தேவையில்லை , காட்டமான சொற்கள் காதில் விழவேண்டியதில்லை இந்த வாட்ஸாப்  வாதத்திற்கு . பொறுமை மட்டும் போதும். யோசிக்க நேரமுண்டு , பின்னர் அதனை அழகாக விவரிக்க வழிகளுண்டு இதில். அலைபேசியில் நான் குரலுயர்த்தி பேசியிருந்தாலோ , அவள் எதிர்க்குரல் அளித்தாலோ எங்களுக்குள் சங்கடங்கள் வந்திருக்கலாம் , எளிதான , நேர்த்தியான இந்த வாட்ஸாப் வாதங்கள் அது போன்றவற்றை  தவிர்க்க உதவின.அலைபேசிக்கு  கொடுத்து வைத்த நேரம்  , பன்மடங்கான என்னவள் காதல் முத்தங்களை சுமந்ததால்.    
 
#அன்பு #தாம்பத்யம் #முதல் மோதல்

No comments:

Post a Comment