Friday, November 6, 2015

அமைதியான பக்கங்கள் 2 - சம்பாதி

நீலக்கடல் அன்று சேதுக்கரையிலே வேகமாக மோதி ஆரவாரம் செய்துகொண்டிருந்தது. அங்கே குழுமியிருந்த வானரர்களுக்கு ஏதோ குறிப்புக் காட்டுவது போல ஒலித்தது . திக்கெட்டும் ராமனுக்காய் தேடிச்சென்ற அவர்கள் இங்கே மீண்டும் திசை அறியாதவர்களாய் கூடியிருந்தனர் .


இந்தக் கூட்டத்தை பார்த்து சிரித்தவாறு அந்த முதிர்ந்த கழுகு மலை உச்சியினில் சிரித்து கொண்டிருந்தது . கண்டிப்பாக இன்னும் தான் ஓராண்டாவது இறை தேடிச்செல்லவேண்டாம் அதற்கான உணவை இந்த குரங்குக்கூட்டமே விட்டுச் செல்லும் என நினைத்து அகமகிழ்ந்தது.


 வானரர்கள் சீதையை காக்க வந்து தாம் அனைவரும் உதவ முடியாமல் தவிப்பதை விட உயிர் துறப்பதே மேல் என புலம்பிக்கொண்டிருந்தனர் .


அப்போது அனுமன் கூறுகிறான்,' நம்மால் முடிந்தவரை எல்லாவிடங்களிலும் சீதையைத் தேடிப் பார்த்தும் , அவள் அகப்படாவிட்டால் அப்போது நாம் உயிர்விடுவது சிறந்ததாகுமேயல்லாமல், இப்பொழுதே உயிர்விடுவோமென்பத தக்கதாகாது. சீதையை காக்க வேண்டி உயிர் துறந்த ஜடாயுவை போன்றல்லவா நாமும் இறக்க வேண்டும் . இப்படிக் கோழைகளாக அல்ல'.


அந்தக் குரல் கேட்டு சம்பாதி எனும் வயதான கழுகின் கண்கள் நீர்க்குளமாகின. சில நிமிடம் மூர்ச்சையாய் விழுந்து கிடந்தது. தன் சிறகுகள் இப்போது தான் மெய்யிலே எரியூட்டப்பட்டதாக உணர்ந்தது.

தன்மீது விழும் சூரியகிரணங்கள் குருதி படிந்து கறைகளாய் தெரிந்தது.

தன் மனதிற்குள் ஏதேதோ எண்ணங்கள் திரை பிம்பங்களாக ஓடின .


அந்த பிம்பங்களிலே ..


அந்த இரண்டு சகோதரர்களுக்கும் சூரியனை காணும் போது , எப்போதும் சூரியனார் இரண்டாவதாகத் தான் தெரிவதுண்டு . அவரின் சாரதியும் தங்களின்  தந்தையுமான அருணன் தான் அவர்களுக்கு முதலில் தெரிவார் . எப்போதுமே இவர்களுக்கு சூரியன் மேல் ஏதோ ஒரு குறை இருந்து கொண்டிருந்தது .


சிலநேரங்களில் தம்பி ஜடாயு கூறியது போல் , ' ஒரு வேலை சூரியனாரல் நாள் முழுவதும் வேலை செய்யமுடியாமல் போகவே சந்திரனை மாற்றாளாக அனுப்பி வைத்திருப்பாரோ' என்ற சந்தேகம் தனக்கும் வரும் என நினைத்த வாரே சென்றுகொண்டிருந்தான் இளமையான சம்பாதி.


'அண்ணா , நம்  தந்தை ஏன் தன் தாயார் வினதையிடம் எப்போதும் கடிந்து கொள்கிறார் '. என்றான் ஜடாயு


'தான் முழு பராக்ரமும் அடையாமல் போக , பாட்டியாரின் அவசரம் தான் காரணம் என அவருக்கு என்றும் மாறாக் கோபம், நீ அதை பற்றி ஏதும் தந்தையிடம் கேட்காதே .  ' என்றான் சம்பாதி .


'உங்களுக்கு எப்படி அண்ணா இது தெரியும்' என அடுத்த கேள்வியை முன் வைத்தான் ஜடாயு .


'ஒருமுறை உன்னைப்போல் இதே கேள்வியை நான் நம் சிறியா தந்தையான கருடனை கேட்டேன் . அவர் இந்த விளக்கத்தை என்னிடம் கூறி , தந்தையிடம் கேட்கக் கூடதென  கூறினார். அதையே இன்று உன்னிடம் நான் கூறினேன் ' என்றான் அண்ணன் சம்பாதி .


வேறொருநாள் , சகோதரர்கள் இருவரும் குன்றின் மேல் நின்று கொண்டு சூரியனை பார்த்துக்கொண்டிருந்தனர்.

ஜடாயு கூறினான் ,'அண்ணா அந்த சூரியன் பார்க்க வெகுதூரமாய் இருப்பது வெறும் ஏமாற்று என்று நினைக்கிறேன் . அதன் உயரத்தை சென்று பார்கலாமா ? ' என்றான் .


'இல்லை தம்பி அது உன்னால் முடியாது. அதன் வெகு உயரத்தினில் இருக்கிறது . அங்கு வரை செல்ல இயலாது' என்று பதிலளித்தான் சம்பாதி .



'உங்காளால் முடியாமல் போகலாம் அண்ணா , என்னால் மிக எளிதாக அதன் உயரத்தினை அடைய முடியும் . பாருங்கள்' என கூறிக்கொண்டே பறக்கலானான்.


'நில் தம்பி அது அபாயமானது' என ஜடாயுவினை பின்தொடர்ந்தான் சம்பாதி.


விளையாட்டு அபாயமானதை உணர ஆரம்பித்து ஜடாயுவினை முந்த வேகமெடுத்தான் அண்ணன் .


வெகுளியாய் விளையாட்டை ஆரம்பித்த தம்பி , அண்ணன் போட்டியில் வெல்ல வேகமாக துரத்துவதாக எண்ணி இன்னும் அதிகவேகமாக பறந்தான் .


குளங்கள் சிறுவட்டமாகவும் , குன்றுகள் புள்ளிகளாகவும் , மாளிகைகள் பெட்டிகளாகவும் தெரிய தொடங்கின.

பகலவக்கதிர்கள் சுட்டெரிக்க ஆரம்பித்தன . சிறியவன் பதட்டமடைந்தான் .. கண்கள் இருண்டன , உடலெங்கும் அனல் தகித்தது . தம்பியை காப்பாற்ற தன்  சிறகுகளை அகலவிரித்து அவனை அணைத்து நிலமடைந்தான் சம்பாதி .


மயங்கிய கழுகுகள் கண் திறக்கின்றன .


ஜடாயு கதறுகிறான் , 'என்னை மன்னித்து விடுங்கள் அண்ணா . என்னால் தானே இப்படி ஆனது . உங்கள் பேச்சினைக்  கேட்டிருந்தால் இப்படி ஆகிருக்குமோ . இப்போது நான் என்ன செய்வேன் . நம் தந்தை என்னையும் இனி கடிந்து கொள்வாரே . உன்னகிந்த நிலைமையின் காரணம் நான் அல்லவோ . எனக்கிது நேர்ந்திருக்கலாமே . மும்மாரி பெய்யும் மேகங்காள், துளி நீர்த் தெளித்திருக்கலாமே. என் முட்டாள் கூற்றுகளுக்காய் என் அண்ணனைக் தண்டிக்கலாமா சூரியதேவா . உன் கோபம் என் மீது தானே .


தம்பியை காத்த திருப்தியில் சம்பாதி கூறிகிறான் ,' தம்பி நான் இன்னும் சுவாசத்தோடு தான் இருக்கிறேன் . அப்படியெனில் எனக்கு ஏதோ ஒரு கர்மம் இன்னும் மீதம் இருக்கிறது . சிறகுகள் இல்லா பறவையாக நான் இனி தனித்து காணப்படுவேன் . உனக்கு முன்னர் நான் பிறந்தது உன்னை காக்கவே என்பது எனக்கு இப்போது புரிந்தது . நீ கவலைப்  படாதே '


அன்று ஜடாயுவின் கண்களில் இருந்த  அந்த வலியுடன் கலந்த கண்ணீர், இன்று சம்பாதியின் கண்களில்.


இன்று , கண்விழித்து சம்பாதி அனுமனை நோக்கிச் செல்கிறான் .


சம்பாதி வேகமாக அவர்களை நோக்கி நடந்து வருகையில் சம்பாதியின் பேருருவத்தைக் கண்டு மற்றைய வானர வீரர்கள் அஞ்சியோட, அவனை இராவணன் சார்பினன் என்றே கருதி 'பறவை வேடம் பூண்ட ராவண அடிமையா  நீ' என கர்ஜிக்கிறான் அனுமன்


பின்னர் , பிறர் முகக் குறிப்பறிந்து உண்மையையுணர்பவனாதலால், சீற்றமில்லாமலும், துயரத்தால கண்ணீரைப் பெருக்கியும் வருகின்ற சம்பாதியைக் கண்டு அவன் குற்றமறறவன் என உணர்ந்தான்.


'இளையவன் இறக்க மூத்தவனாகிய நான் உயிரோடு இருக்கின்றேனே'   என்று  இரக்கம் தோன்றுமாறு சம்பாதி

சடாயுவைக் கொன்றவனை பற்றி வினவினான் .


மாயமான் காரணமாக இராம இலக்குவர் சீதையைப் பிரியுமாறு செய்ததும் , சீதையைக் கவர்ந்து செல்லும் வழியில் ஜடாயு அதை கண்டதும் , நீதி தவறாத ஜடாயு மைதிலியை காப்பாற்ற இராவணனைத் தன் மூக்கினாலும் நகங்களாலும் சிறகுகளாலும் பலவாறு துன்புறுத்தி, இறுதியில் அந்தக் கொடியவனது தெய்வ வாளால் உயிர் மாய்ந்தான் என்றான் அனுமன்


சீதையை மீட்பதற்குத் தன்னுயிரைக் கொடுத்தவனாதலால் அவனது புகழ் பாரெல்லாம் நிலையாய் இருக்கும் என்றும் சம்பாதியை தேற்றினான் அனுமன் .


ஜடாயுவின் கிரியைகளை செய்ய முடியாமல் போனாலும் சமுத்திரத்தின் அருகினில் அவனுக்காய் ஜலதர்ப்பணம் செய்து பின்னர் ராம நாமம் ஜப்பிக்க , தன் சிறகுகளை மீண்டும் பெற்றார் சம்பாதி.


தன் சிறகுகள் அழிந்ததும் , இன்று இங்கு வானர சேனையைக் கண்டதும், தான் அன்று ஜடாயுவுக்கு கூறிய  அந்த ஒற்றை கர்மத்திர்க்கும் ஒரு தொடர்பு இருப்பாதை உணர்ந்தார் சம்பாதி


இராவணன், சீதையினோடு  இலங்கையிற் போய்ச் சேர்ந்தான் என்றும் , கொடிய சிறைக் காவலில்
வைத்துவிட்டான் , அங்கே சென்று காணுங்கள் என்றும் தென்திசை நோக்கி வழிகாட்டினார் சம்பாதி.


இலங்கைக்குள் புகுவது யமனுக்குக் கூட முடியாது, ஆகவே, இது பற்றி ஆராய்ந்து முடிவெடுத்துத் தக்கவாறு
செய்யுங்கள் என்றார் .


சடாயுவின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த கழுகுகளை  பாதுகாக்கும் பொருட்டு நான் விரைந்து செல்ல வேண்டியுள்ளது.  நீங்கள் நான் சொல்லியவற்றுள் ஏற்றதைச் செய்யுங்கள்' என்று கூறிச் சம்பாதி வான்வழியாகப் பறந்து சென்றான்.


நிலையான குன்றும்,  நீலக்கடலும் திசை தெரிந்த பின்னர் , திசைக்கருவியான சம்பாதியை  அமைதியாய் மறந்திருந்தது .

No comments:

Post a Comment