Thursday, November 19, 2015

அமைதியான பக்கங்கள் 3 - தாரை

கட்டைகளைக் கொண்டு வந்து நெருப்பை மூட்டினான். கொழுந்து விட்டெரியும் அக்னியை புஷ்பங்களால் பூஜித்து, சத்காரங்கள் செய்து, அடக்கத்துடன் அவர்கள் நடுவில் கொண்டு வந்து வைத்தான் அனுமன். இருவரும் அக்னியை வலம் வந்தனர்.  சுக்ரீவனும், ராகவனும் நட்பு எனும் உறவை ஏற்றுக் கொண்டனர்.

 நரனும், வானரனும் தங்கள் சுக, துக்கங்களை  பகிர்ந்து கொண்டனர். மனிதருள் மாணிக்கமான ராகவனால் தன் காரியம் நிறைவேறும் என்று சுக்ரீவன் நம்பினான்.

சுக்ரீவன் பலமாக கத்தினான். வாலியை யுத்தம் செய்ய வரும்படி அழைத்தான். அந்த அறை கூவலைக் கேட்டு, வாலி கோபத்துடன் குதித்துக் கொண்டு எழுந்து வந்தான். மகா பயங்கரமான யுத்தம், வாலி, சுக்ரீவர்களுக்கிடையில் மூண்டது. இருவரும் உருவத்தில் ஒத்து இருந்தனர். ராகவனுக்கு எது சுக்ரீவன், எது வாலி என்று இனம் கண்டு கொள்ள முடியவில்லை. அதனால் உயிரை பறிக்கும் சரத்தை விடவில்லை. இதற்கிடையில் வாலியின் கையால் நல்ல அடி வாங்கி களைத்த சுக்ரீவன், ராமனைக் காணாமல், திரும்ப ருஸ்யமூக மலைக்கு ஓடி விட்டான்.

அழுது புலம்பிய வானர இளையவனை பார்த்து எங்கள்  மேல் நம்பிக்கை வை எனக் கூறி  ,'பூத்துக் கிடந்த புஷ்பங்களைப் பறித்து மாலையாக கட்டி, லக்ஷ்மணன் சுக்ரீவன் கழுத்தில் மாலையாக போட்டான்.
வானரத்தலைவன்  மீண்டும்  வெளியே வரும்படி போருக்கான அறைகூவலை பலமாகச்  செய், மீதம் நான் பார்த்துக் கொள்கிறேன் என்றான் இராமன். வானை பிளந்தது அந்த கர்ஜனை .

அந்தப்புரத்தில் இருந்த வாலி, தன் சகோதரன் அடங்காத கோபத்துடன் எழுப்பும் போருக்கான அறைகூவலைக் கேட்டான். ஆங்காரத்துடன் எழுந்து நின்ற வாலி , இன்றோடு ஒரு முடிவு கட்டப்போவதாக கிளம்பினான்.


அவனை தாரை  அணைத்து, தன் அன்பை வெளிப்படுத்தி, பயத்தை வெளிக் காட்டிக் கொள்ளாமல், பரபரப்பை அடக்கிக் கொண்டு, நிதானமாக பேசலானாள்.' சற்றே நிதானியுங்கள் மன்னா. ஒரு முறை அடி வாங்கியவன் திரும்பவும் போருக்கு அழைக்கிறான், உங்களால் அடிக்கப்பட்டு சக்தியை இழந்தவன், திசை தெரியாமல் உயிருக்கு பயந்து நடுங்கியபடி போனவன், திரும்பவும்  இங்கு வந்து நின்று போருக்கு அழைப்பது எனக்கு சந்தேகத்தை உருவாக்குகிறது. நல்ல பலமான வீரனின் உதவி கிடைத்ததாலே அவன் இங்கு வந்து நிற்கிறான். நம் குமாரன் அங்கதன் வனத்தில் சுற்றித் திரிந்து விட்டு வரும் பொழுது, அவனுக்கு ஆப்தமான சில ஒற்றர்கள் 
தசரதமைந்தர்கள் தங்கள் தம்பிக்கு உதவுவது  போல்  செய்தி பரவுதாக கூறினான் . இப்போது இவர்களை எதிர்க்க வேண்டாம் .

'தாரை ,நிறுத்து அந்த சிற்றறிவுள்ள சுக்ரீவனுக்கு வேண்டுமானால் உதவி தேவைப்படலாம் . எனக்கு வேண்டாம் . என்னை நேரில் யார் எதிர்த்தாலும் அவர்களை தூசாக்கிடுவேன்' என உறுமினான் வாலி .

நாதா , 'சுக்ரீவன் உங்களுக்கு சகோதரன் . அவனுடன் ஏன் விரோதம்? உங்கள் எதிரில் நின்றாலும், உங்களுக்கு உறவு முறையுடையவன் தான் அவன் .  உடன் பிறந்தவனுக்கு சமமான உறவினன் வேறு யார் இருக்க முடியும்
அவனை மூத்தவனாக, தமையனாக இருந்து அரவணைத்துக் கொண்டு போவது தானே தங்களுக்கு அழகு . ராமனுடன் நட்பு கொள்வதும்  உங்களுக்கு நன்மையை  பயக்கும். ' என்றாள் .

என் சகோதரன் எனக்கே எதிரில் நின்று கர்ஜிக்கும் பொழுது என்ன காரணம் சொல்லி பொறுத்துக் கொள்வேன்?
போருக்கு அறை கூவும் பொழுது பதில் கொடுக்காமல்  பொறுத்துக் கொள்வது மரணத்தை விட கொடியது. அவன் திமிரான குரல் இனிக்குன்றிப்போகும் வகையில் அதனை மிதிக்கப்போகிறேன் என புறப்பட எத்தனித்தான் வாலி .

கண்களை மூடினால் தாரை .
அன்று,
குன்றிப்போனக் குரலில் விம்மி அழுது கொண்டிருந்தான் சுக்ரீவன் . கிஷ்கிந்தையின் பெரியோர் எல்லாரும் கூடி இருந்தனர். மாயாவியை துரத்திச்  சென்ற வாலி குகையிலிருந்து வெளி வராததும் , வெகு நாட்கள் இவ்வாறு சங்கடத்துடன் தவித்தபின் ஒரு நாள், அந்த பள்ளத்திலிருந்து ரத்தமும், நிணமுமாக வெளி வந்தது. அதைக் கண்டு தான் பயந்தும் , அசுரர்கள் கூச்சலிடும் ஒலியும் காதில் விழுந்ததும் ,மூத்தவன் வலி தாங்காமல் அலறுவது போல கேட்டதும் கூறி சபையிலே புலம்பினான் .  மலை போல் இருந்த , ஒரு பெரிய கல்லை எடுத்து புரட்டி, பள்ளத்தின் நுழை வாயிலை மூடி விட்டு அவனுக்கு நீர் தெளித்து விட்டு துக்கத்துடன் தான் கிஷ்கிந்தா வந்து சேர்ந்தாக கூறி அழுதான்.

அமைதியான சபையின் நடுவே வந்தாள் தாரை . சுக்ரீவரே இந்த கிஷ்கிந்தை பிரஜைகள் எல்லாருக்கும் இப்போது வழி நடத்த ஒரு மன்னன் தேவை . தாங்கள் தான் அனைவரையும் வழிநடத்த வேண்டும் என கோரிக்கை வைத்தாள் .  மந்திரிகள் இதனைக் கேட்டு சேர்ந்து யோசித்து சம்மதித்து சுக்ரீவனுக்கு  முடி சூட்டினர். அப்போது சபையில்  வானர பிரஜைகளே , 'அசந்தர்ப்பம் காரணமாக அண்ணன் வாலியின் இடத்தினில் நான் அமர்ந்தாலும் , இந்த பட்டமஹிஷியின் இடத்தினில் தாரா தேவி தொடர்ந்து வழி நடத்துவார், இவரின் தெள்ளிய சிந்தனையினால்  நம் அனைவர்க்கும் நன்மை பயக்கும் என்றான்.  அமோதித்தது சபை.

மீண்டு வந்த வாலி சபையினில் அவை வரிசைக் கண்டும்,   அரியாசனத்தினில் தம்பியினைக்  கண்டும் வெகுண்டு சுக்ரீவனை நாட்டை விட்டு வெளியேற்றினான் . உருமாதேவியை அபகரித்து தன் அரன்மையினில்  அடைக்கிறான் .

இன்று ,
கண்களில் கண்ணீர் மல்க அவனை அணைத்து தாரை  பிரியமாக பேசி, அழுது கொண்டே பிரதக்ஷிண நமஸ்காரம் செய்து நல்வசனங்கள் சொல்லி மங்களா சாஸனம் செய்தாள்.

'தேவி , என்னிடம் உன் பாசத்தை காட்டி விட்டாய். என்னிடம் உனக்கு பக்தி இருக்கிறது என்பதையும் தெரிந்து கொண்டு விட்டேன். நான் கர்வத்தோடு எதிரில் போய் நின்றாலே தாங்க மாட்டான். ஒரு தட்டு தட்டி கர்வத்தை அடக்கி விட்டு வருகிறேன்' என்று கோபமாக புறப்பட்டான் வாலி .

அன்றொருநாள் இதே போல் மாளிகையின்  வாயிலில் நடுங்கும்படி துந்துபி எனும் அசுரன் முழக்கம் இட்டான். பொறுக்க மாட்டாத கோபத்துடன் பொங்கி எழுந்து போரிட்டு அசுரனின் உடலை வீசி எறிந்தான் வாலி.
ஒரு யோசனை தூரம் தள்ளி அந்த உடல் விழுந்தது.  வீசிய வேகத்தில் அந்த இறந்த உடலில் இருந்த ரத்த துளிகளும், நிணமும் மதங்கருடைய ஆசிரமத்தில் விழுந்தது. வாலி அங்கு வந்தால் சிலையாகக்கடவான் என்ற சாபத்தினால் அன்று முதல் ருஸ்ய மூக மலையின் அருகில் கூட செல்வதை நிறுத்தியதும் தாரைக்கு நினைவு வந்தது . மனம் கலக்கமுற்றது .

 வேகமாக உருமையை சந்திக்க சென்றாள் . தனிமையில் கணவனை பிரிந்து துக்கப்படும் சுக்ரீவனின் துணைவியைப் பார்த்து இரு கரங்களையும் கூப்பினாள் . அந்த அரையினில் ஒரு முழுமை மௌனத்தினால் நிறைந்தது.

ஆக்ரோஷமான சகோதர சண்டையின் நடுவில் வானர ராஜன் இராமனின் அம்பினால் தாக்கப் பட்டு, பூமியில் விழுந்தான். மண்ணில் வீழ்ந்த வாலியின் கேள்விகளுக்கு அமைதியாய் பதிலளித்தார் ராமர்.

தன் மனம் நினைத்ததைப் போன்று வீழ்த்தப்பட்ட வாலியின் உடலை ஓடி வந்து அணைத்தாள் தாரை . ' உன் போன்ற அரசனுக்கு இப்படி தரையில் விழுந்து கிடப்பது அழகல்ல. உயிர் போனாலும் இந்த பூமியை விட மாட்டேன் என்பது போல அணைத்துக் கொண்டிருக்கிறாய்.  இந்நிலையில் உன்னைக் கண்டும் ஆயிரக் கணக்காக சிதறி விழவில்லையே கல் மனம். சுக்ரீவன் மனைவியை அபகரித்தாய். அவனையும் துரத்தினாய். ஆனால் அவன் மூலமாகவே உனக்கு முடிவும் வந்து விட்டது, பார். நன்மையை நான் சொல்லியும் ஏற்காமல் என்னை நிந்தித்தாய். அலட்சியம் செய்தாய். மோகம் உன் கண்களை மறைத்தது.  உன் நன்மையை விரும்புபவள் தானே நான். நன்மையைத் தானே சொன்னேன். என் நிலை இப்போது மிக பரிதாபமாக ஆகி விட்டது.  நம் மகன் அங்கதனை மிகப் பிரியமாக கொண்டாடி வளர்த்தோம்.  எங்கள் இருவரையும் பிரிந்து வெகு தூரம் செல்லத் தயாராகி விட்டீர்களே.  உங்கள் பாதத்தில் விழுந்து வணங்குகிறேன். அறியாமல் நாங்கள் தவறு செய்திருந்தால் மன்னித்து விடுங்கள்.

கீழே விழுந்த தாராவை மெதுவாக ஹனுமான் சமாதானம் செய்தான். இந்த வானர வீரர்களும், உன் மகன் அங்கதன், வானர ராஜ்யம் இவை இப்பொழுது உன் தலைமையில் இயங்கட்டும்.  நீ பொறுப்பை ஏற்றுக் கொள்.
அரசனுக்கு செய்ய வேண்டிய மரியாதைகளுடன் இவனுடைய சம்ஸ்காரங்களைச் செய்வோம். அங்கதனுக்கு முடி சூட்டுவோம்.

தந்தை வழி ராஜ்யத்தை சுக்ரீவனே அடையட்டும். மேற் கொண்டு கிரியைகளை அவனே செய்யட்டும். அங்கதனிடத்தில் இப்படி ஒரு எண்ணம் வேண்டாம் . அனுமனே  ஒரு புத்திரனுக்கு தந்தை தான் சிறந்த உறவு. தாயல்ல. இந்த வானர ராஜ்யத்தை நிர்வகிக்கும் சக்தியும் எனக்கில்லை . முன்பும் இல்லை, இப்பொழுதும் இல்லை. என் முன் அடிபட்டு கிடக்கும் என் நாதனை நான் சேவித்தால் போதுமானது.

வாலி தன் கடைசி சாசனத்தை உரைக்கலானான் . 'தாரையின் மகன். உனக்கு சமமான பராக்ரமம் உடையவன். எதிரிகளை வதம் செய்ய இவன் உன் முன் நிற்பான். உனக்கு அனுகூலமான காரியங்களைச் செய்து யுத்தத்தில் உதவியாக இருப்பான். இதோ தாரை  நம் சுஷேணனரின்  மகள். இவள் சூக்ஷ்மமான அறிவு உடையவள்.   இவள் சரி என்று சொல்வது கண்டிப்பாக சரியாக இருக்கும். இவள் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்.  சந்தேகம் இல்லாமல் அந்த வழியில் செல். என் தேவி சொல்லி ஒரு காரியம் வேறாக ஆனதே இல்லை.


வாலியின் உயிர் பிரிந்து சென்றதும் , இராமனை பார்த்துக் கேட்கிறாள் ,'ஒரே பாணத்தால் என் கணவனை அடித்து வீழ்த்தி விட்டாய். என்னையும் அதே அம்பால் அடித்து விடேன். ராமா, நானும் என் கணவன் இருக்குமிடம் செல்வேன்.  நான் இல்லாமல் வாலி மிகவும் கஷ்டப்படுவான். மனைவியை பிரிந்து, குமாரர்களான ஆண்கள் எப்படி கஷ்டப் படுவார்கள், துக்கம் அனுபவிப்பார்கள்  என்று நீ உணர்ந்தவன் அதனால், மனதில் புரிந்து கொண்டு என்னையும் வாலி சமீபம் அனுப்பி விடு.

தாராதேவி நீ மன அமைதியை பெறுவாய். உன் மகனும் யுவராஜா பதவியை அடைவான். இது விதியின் விளையாட்டு அல்லது படைத்தவனின் விருப்பம், என்றும்  வீர பத்தினிகள் வருந்துவதில்லை' என்று   பரந்தாமனான ராகவனால்,  சமாதானம் செய்யப் பட்ட தாரை,  தன் துயரை மறந்து இயல்பாக ஆனாள்

 நான்கு மாதங்கள் ஓடி விட்டன . சுக்ரீவனின் சேனை இன்னும் வந்தடையவில்லை என இலக்குவனை அழைத்து வர அனுப்புகிறார் ராமர். வாக்குத் தவறிய வானரத் தலைவனை கோபத்துடன் காண மாளிகைக்குள் செல்கிறான் . அவன் கோபத்தை பார்த்து சமாதானப் படுத்த தாரை ஓடி வருகிறாள் . இலக்குவன் சொல்கிறான் . நியாயம் மறந்தானோ தங்கள் மன்னவன் . நாம் இணைந்து ஒரு செயலில் இறங்கினோம். பாதியில் அதை விட்டு விலகினால், தத்துவம் அறிந்த தாரையே நீயே சொல். எங்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறான்.

'கோபம் கொள்ள இது நேரம் இல்லை. தன்னைச் சார்ந்தவர்களிடம் அதிகமாக கோபம் கொள்வதும் விவேகமாகாது. உங்கள் நலத்தில் அக்கறை கொண்டவன் தான் சுக்ரீவன், அவனுடைய கவனக் குறைவை பொறுத்துக் கொள்.ங்களுக்கு நீங்கள் செய்த பெரும் உதவியையும் அறிவேன். இனி செய்ய வேண்டியதையும் அறிவேன். அதே சமயம் மன்மதனுடைய தவிர்க்க முடியாத சக்தியையும் அறிவேன்.  பெரிய மகரிஷிகளே, தர்மத்தை அனவரதமும் அனுஷ்டிப்பவர்கள், தவத்தில் மூழ்கியவர்களே, சமயத்தில் காமனின் வசமாகி, மோகத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள். இந்த வானர மன்னன் தன்னை மறந்ததில் என்ன ஆச்சர்யம்?' என  உண்மை நிலையை எடுத்துச் சொல்லி  அழகாக சமாதானம் செய்தாள்.

சுக்ரீவன், உங்களுக்கு உதவி செய்ய வானரங்களை பல இடங்களுக்கும் அனுப்பி, படையுடன் வரச் சொல்லி இருக்கிறான். யுத்தம் செய்ய படைபலம் வேண்டாமா?
இந்த ஏற்பாட்டை சுக்ரீவன் முதலிலேயே செய்து விட்டான். ஆயிரம் கரடிகள், வானரங்கள் இன்று வந்து உன்னை சந்திப்பார்கள். ஆத்திரத்தை விடு லக்ஷ்மணா, கோடிக் கணக்கான அதற்கும் அதிகமான வானர வீரர்களை சந்திக்கப் போகிறாய்.


ஸ்ரீராம சேவைக்காக சமாதானமான இலக்குவனோடு மாபெரும் வானர சேனை தெற்கு நோக்கி புறப்பட்டது.

சந்திரனின் ஸ்பரிசத்தால் மகிழ்ச்சியுடன் கண் விழித்த தாரகையோடு கிஷ்கிந்தை தாரையை  அமைதியாய் மறந்திருந்தது .

No comments:

Post a Comment