Monday, November 30, 2015

அமைதியான பக்கங்கள் 4 - ஜாபாலி

அந்தக்  குடிசை புறநகரில் சரயு நதிக்கரையில் அமைந்திருந்தது. அயோத்தியின் துயர் இங்கு இருளாக பரவி இருந்தது. சலசலப்பில்லாத சரயு ராமனின் பிரிவால் கலங்கிப்போயிருந்தாள்.

இன்று நடந்த சம்பவம் ரிஷியை மிகவும் பாதித்திருந்தது .அவர் ராமரின் எதிர்காலத்தை பற்றி சற்றே வருந்திக்கொண்டிருந்தார் . நிதர்சனமான சிந்தனையில்லாமல் போகவே இப்படி ராமர் செய்வதாக அவருக்கு தோன்றியது . என்ன தான் வசிஷ்டரெனும் குருஸ்ரேஷ்டரின் தலைமையில் தசரதன் ஆட்சி புரிந்தாலும்  , தன்னையும் அவன் மதித்தது இவருக்கு பெருமையாகவே இருந்தது . ஆனால் தந்தையை போல் மகனில்லையே எனக் கவலைப்பட்டார் .

ஆச்ரமத்தில் தன் சிஷ்யர்களிடம் பின்வருவனவற்றை கூறுகிறார். 'மனிதச் சிந்தனை பரிணாமத்துக்கேற்ப நம் வாழ்க்கையைப் பற்றிய மதிப்பீடுகளும் மறு பரிசீலனைக்கு உட்பட்டாக வேண்டும். நன்மை, தீது என்று எதுவும் கிடையாது. நிகழ்வன அனைத்தும் எதேச்சை ஒரு நிகழ்வு.  தத்துவார்த்தப்படி வேதங்களை சுருதிப்பிரமாணமாக ஏற்றுக்கொண்டால் மட்டுமே அது வைதிகம். மற்றவையெல்லாம் அவைதிகமாக கருதப்படுகிறது .ஞான மரபு கண்டிப்பாக வைதிகம், அவைதிகம் என்ற இரு பெரும் பிரிவைத் தன்னுள் கொண்டது. இதனை நம்மில் பலர் ஏற்க மறுக்கின்றனர் . கண்ணில் காணாதவற்றை நாம் ஏற்கும் நிலை என்றும் இருத்தல் கூடாது '.

மாணவர்கள் சென்ற பின் அன்று காலை நடந்தவற்றை யோசிக்கலானார்.

பரதன் அரசவை பெரியோரை அழைத்திருந்தான் . கானகம் சென்ற ஸ்ரீராமரை மீண்டும் அழைப்பதென்றும் , அவரை சபை பெரியோருடன் சென்று சமாதானமாய் அழைக்க வேண்டும் என முடிவு செய்தான் . பரதன் வசிஷ்டர் , சுமந்திரர் , ஜாபாலி ரிஷிகளையும் அரசமாதேவிகளையும் பெரும் திரளான அயோத்தி வாசிகளுடன் சித்ரகூடத்தை வந்தடைகிறான்.

ராமன் சென்ற பிறகு தயரதன் மனம் நொந்து பித்ருலோகம் அடைந்த செய்தியை கூற கண்ணீர் மல்க ஸ்ரீராமர் அங்கே தன் தந்தைக்கான ஜல தர்பணங்களை நிறைவேற்றினார்.

சத்யவான் ராமன், லக்ஷ்மணன் மகானுபாவன், பரதன் தார்மிகன். இம்மூவரும் மூன்று அக்னி ஜ்வாலைகளை போல விளங்கினர்  நண்பர்களும் சுற்றத்தாரும், பந்துக்களும்ராமன் மீண்டும் வர சம்மதிக்க வேண்டி காத்துக்கிடந்தனர்.

எங்கள் மன்னவா , இதோ இங்கிருக்கும் இத்துனை பேரும் தலையால் வணங்கி நாங்கள் வேண்டிக் கொள்வது இதுதான். எங்களிடம் கருணை காட்டு. உன் சகோதரன், சிஷ்யன், அடிமை என்று என்னிடம் கருணை காட்டு என்று பாதங்களில் வீழ்ந்து வணங்கி பரதன் ராமரை மீண்டும் அயோத்திக்கு வரச் சொல்லி மன்றாடினான்.

நம்  தந்தை அறிஞர்களில் மூத்தவர், மகானானவர், அவர் சொன்னதை செய்வதில் தான் எனக்கும் நமக்கும்  நன்மை இருப்பதாக நம்புகிறேன். நீங்கள் செல்லலாம் . நீ மக்களை நன்றாக ஆளப்போகிறாய் என நான் அறிவேன் என்றார் ராமர் .

அப்போது சற்றும் எதிர் பாரா விதமாய் ஜாபாலி மகரிஷி ராமனைப் பார்த்து, பேசத்  தொடங்கினார்.

'இராமா , இங்கே இத்துனை முறை பரதன் எடுத்துக்கூறியும் உன் மனம் என் மெய்யை ஏற்க மறுக்கிறது . இவர்களை பார் . இவர்கள் தான் உன் உடன் இங்கே இருக்கிறார்கள் . சென்றவர்கள் நமக்கினி வேண்டாம், உன் தந்தையையும் சேர்த்து. சாதாரண மனிதர்களைப் போல் நீ ஏன் இப்படி யோசிக்கிறாய்? யார், யாருக்கு பந்து, யாருக்கு யாரிடத்தில் என்ன காரியம், எவனால், எவனுக்கு நன்மை அல்லது தீமை, ஒருவனாக பிறக்கும் ஜீவன் ஒன்றாகவே மறைகிறது. தனிமை தான் நிதர்சனம் .

தாய், தந்தை, வீடு, செல்வம் எல்லாமே நமக்கெல்லாம் ஓர்  இடம் தான் . ராகவா  இதில் அதிக முக்கியத்துவம் கொடுத்து நல்லோர்  மயங்குவதில்லை. தந்தை வழியில் வந்த ராஜ்யத்தைத் துறந்து, மிகவும் கடினமான சிக்கல் நிறைந்த உபயோகமில்லாத வழியை ஏன் ஏற்றுக் கொள்ள விரும்புகிறாய். செல்வம் நிறைந்த அயோத்தி மாநகரில் முடிசூட்டிக் கொள்.

தயரதன் ஓர் அரசன். நீ வேறு ஒரு அரசன். ப்ரத்யக்ஷம் எதுவோ அதை மட்டுமே நம்பு. கண்ணுக்குத் தெரியாத கர்மாக்களை விடு. உலகில் நல்லவர்களை முன்னிட்டுக் கொண்டு நிதர்சனமான உண்மைகளை மட்டுமே ஏற்றுக் கொள்.'


முனிச்ரேஷ்டரே , 'மூவுலகிலும் நல்லோருடன்  சத்யம், தர்மம், பராக்ரமம்,  தயை  என்பது தான் வழக்கமாக இருந்து வருகிறது. இது தான் நாம் கடை பிடிக்க வேண்டிய நியதியும் ஆகும். தர்மத்தில் சிந்தனையுடைய சத்புருஷர்கள், ஹிம்சையை வெறுத்து, குற்றமற்றவர்களாக உலகில் வாழ்கின்றனர்
மரியாதையை விட்ட மனிதன், கெடுதலான நடவடிக்கைகளில் ஈடுபட்டால், அவன் நல்ல மதிப்பை பெறுவதுமில்லை, நல்லவர்கள் அவனது இரட்டை வேடத்தை உணர்ந்து கொள்வார்கள். பெருந்தன்மை உடையவனைப் போல சிறு புத்தி உள்ளவனும் , ஒழுக்கத்தை விட்டவன்  நல்லொழுக்கம் உள்ளவன் போலவும் குறிக்கோளே இல்லாதவன் உயர்ந்த குறிக்கோள் உள்ளவன் போலவும் நடித்தால் சத்தியவான்கள் யாரென எளிதாக அறிந்து கொள்வார்கள் .

சத்யமும் கருணையும் காலம் காலமாக மன்னனின் குணம் என்று சொல்லப் பட்டு வந்திருக்கிறது. அதனால் சத்யத்தை அடிப்படையாகக் கொண்ட ராஜ்யம், சத்யமாக உலகில் நிலைத்து நிற்கும். ரிஷிகளும், தேவர்களும், சத்யத்தை தான் போற்றினர். இந்த உலகில் சத்யவாதிகள் குறைந்து கொண்டே வருகிறார்கள்.

 எல்லாமே சத்யத்தை சார்ந்து தான் இருக்கிறது. அதனால் சத்யத்தை மிஞ்சி வேறு எதுவுமே இல்லை. தானம், யக்ஞம் செய்தல், ஹோமம் செய்தது தவம் செய்வதும், உடலை வருத்தி செய்யும் விரதங்களும் வேதங்கள், எல்லாமே சத்யத்தின் அடிப்படையில் அமைந்தவை. அதனால் சத்யத்தை நாம் அனுஷ்டிக்க வேண்டியது அவசியமாகிறது. ஒருவனே உலகை ஆள்கிறான். ஒருவனே குலத்தைக் காக்கிறான்

என் தந்தை வாக்குத் தவறாதவர். அவர் சத்யத்தை நான் நிலை நிறுத்த வேண்டும். லோபத்தினாலோ, மோகத்தினாலோ, அறியாமையினாலோ கூட அதை நான் மீறுதல் கூடாது. தாங்கள் என்னை செய்யச் சொல்லும் இந்த செயல், யுக்தி பூர்வமான வாக்கியங்களால் நீங்கள் சொன்னது, எனக்கு நன்மையைச் செய்யாது. 

நான் எப்படி குருவிடம் வன வாசம் போகிறேன் என்று சத்யம் செய்து விட்டு, பரதனிடம் குருவான தந்தை சொல்லை மீறி நடப்பேன்.

நாத்திகம் பேசும் உங்களை அருகில் சேர்த்துக் கொண்ட என் தந்தையைச் சொல்ல வேண்டும். நாஸ்திக வாதம் தர்ம வழியிலிருந்து விலகிப் போகச் செய்யும். ஜாபாலி முனிவரே, உங்களுக்கு முன்னாலும், பின்னாலும் பலர் சுபமான பல காரியங்களைச் செய்தனர்.  ஹோமங்கள் செய்தும், புண்ய கர்மாக்களைச் செய்தும் சௌக்யங்களை அடைந்தார்கள்.

தங்களின் சார்வாக கருத்தாளர்  என அறிந்தும் , எம்  தந்தையார் தங்களை சபையினில் வைத்தமைக்கு நீங்கள் செய்யும் நன்றியா இந்த அவமரியாதை? என ஜாபாலியை பார்த்து வினவினார் ராமர்.

'இராமா இதோ இந்த பரதனுடைய துக்கத்தை அகற்றவும், அயோத்திமக்களின் ஆவலைப் பூர்த்தி செய்யவும்,  உனக்கு நான் எதிர்மறையான உலகாயவாத உபதேசங்களை எடுத்து கூறினேன். பிரமாணங்கள் சார்ந்த உன் பதில் என்னை இன்று திருப்தி படுத்தியுள்ளது . ஆனால் எதுவும் நிலையில்லை . இன்றைய நம் நம்பிக்கை நாளை இல்லாமல் போகலாம் . உன்னை உன் நாட்டிற்கு திரும்ப அழைத்துக் கொண்டு செல்ல வேண்டும் என்பதால்  தோன்றியதைச் சொன்னேன். சில சமயங்களில் எதிர்மறையாக பேசியும் ஒரு நல்ல செயலை நடக்கச் செய்ய வேண்டியுள்ளது. உன் தந்தை எனக்களித்த மரியாதைக்கு , உன் முடிவு எதுவாயினும் என்றும் நான் கட்டுப்படுவேன்' என பதில் கூறினார் ரிஷி

பல்வேறு பிரயத்தனங்களும் தோற்றுப் போக, இராமனின் பாதுகையை கொண்டு அடுத்த பதினான்கு ஆண்டுகள் அரசாண்டான் பரதன்.

ஜாபாலி ரிஷியையும் , சார்வாக கருத்துகளையும் சலனமில்லா சரயு நதி அமைதியாய் மறந்திருந்தது .



No comments:

Post a Comment